முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கனவு எனும் உறங்காத கண்



தால்ஸ்தாயும் அவரது பன்னாட்டு சிஷ்யகோடிகளும் விடிகாலையில் எழுந்து நடைபழகி ஒழுக்கசீலர்களாக எழுத்து வேலையை ஆரம்பித்தவர்கள் ... ப்பவர்கள். ராவெல்லாம் விழித்து இருந்து சிகரெட் புகைப்படலத்தால் மூடப்பட்டு மூளை சூடேறி ஆவேசமாய் எழுதித் தள்ளின மற்றொரு மேதை இருந்தார். தஸ்தாவஸ்கி; ராத்திரி எழுதுவது நல்ல தெளிவான எழுத்தாக இருக்காது என்று தல்ஸ்தாய் கருதினார்; புறங்கையால் அத்தகைய இருட்டு எழுத்துக்களை ஒதுக்கினார். தஸ்தாவஸ்கி தன் ஆவேச எழுத்தை விளக்கினார்: ”என் குருதியில் பேனா தோய்த்து எழுதுகிறேன்”. அவரது ”குற்றமும் தண்டனையும்” குறித்து தால்ஸ்தாய் இப்படி குசும்புடன் சொன்னார்: “முதல் சில அத்தியாயங்களை படித்ததும் நாவல் எங்கே சென்று முடியும் என்று தெரிந்து விடுகிறதே”. அவருக்கு தஸ்தாவஸ்கி மீது பிரியமும் இருந்தது. தஸ்தாவஸ்கி இறந்த சேதி அறிந்ததும் அவர் மேலும் எழுந்து வராதபடி ஒரே இரவில் புத்தகம் ஒன்றும் எழுதவில்லை என்றாலும் தால்ஸ்தாய் கண்ணீர் விட்டு அழுதார். தல்ஸ்தாயின் விமர்சனத்துக்கு திரும்புவோம்: இரவில் எழுதும் போது களைப்புற்ற மூளையால் உச்சபட்ச படைப்பூக்கத்துடன் இயங்க முடியுமா? பகலில் ஆழமாக தூங்காத பட்சத்தில் முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தூக்கம் ஓய்வு மட்டும் அல்ல. தூக்கத்தின் போது மனம் அன்றைய தினத்தின் வெவ்வேறு நிகழ்வுகளை குலுக்கிப் போட்டு யோசிக்கிறது. தொடர்பற்ற சம்பவங்கள், உணர்வுகள் மற்றும் சேதிகளின் எதிரெதிர் முனைகளுக்கு முடிச்சு போடுகிறது. அவதானிப்புகள் நடத்துகிறது. இதுதான் கனவு என்று விளக்குகின்றனர் சாரா மெட்னிக் மற்றும் ஜான் போர்ன். ஜான் போர்ன் சில எலிகளை சீராக ஒரே தடத்தில் ஓட விட்டார். பிறகு அவை கனவு காணும் போது மூளையை சோதித்தவர் அவை தமது கனவுப் பிரக்ஞையில் முன்பு ஒடிக் கொண்டிருந்த அதே ஓட்டத்தடத்தில் அப்போதும் இருப்பதாக கண்டு பிடித்தார். ஜெயமோகன் தான் விஷ்ணுபுரம் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் கண்ட கனவு ஒன்றில் நாவலில் எழுதியிருந்த தெரு ஒன்று கனகச்சிதமாக தெரிந்ததாக சொல்லி உள்ளார். பகலில் பல முறை புணர்ந்து விட்டு தூங்குபவரின் கனவில்?



சாரா தன் சோதனைகள் மூலம் ஆழ்ந்த தூக்கம் பெறாதவர்கள், கனவு காணாதவர்களுக்கு அறிவுக் கூர்மையும் அவதானிப்பு திறனும் சற்று மங்கலாக இருப்பதாக கண்டறிந்து உள்ளார். இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு படைப்பியக்கத்தில் மதிப்பு உண்டா? இரவு படைப்பாக்கத்துக்கு சிறந்த பொழுது. பகலில் எழுதுபவர்கள் நம் சூழலில் சிலரே இருக்க முடியும். இருந்தும் எழுத்தை உள்ளிட்ட படைப்பாக்க தூண்டுதல்களுக்கு உடலின் விதிமுறைகள் பொருந்தாது. கடுமையான களைப்பு மற்றும் மன அவஸ்தையில் இருந்தும் கூட சிறந்த படைப்புகள் வெளிவரலாம். காலை நடைபயிற்சி, அருகம்புல் ஜூஸ், தியானம், யோகாவுக்கு பிறகு எழுதப்படுவது மொண்ணையாகவும் அமையலாம். ஆழ்மன உற்சாகம் தான் ஆதாரம்.
ஆனால் அன்றாட வாழ்வில் செயலூக்கத்துடன் இயங்க கனவு நிலை ஒரு முக்கிய பங்காற்றுகிறது. தூக்கத்தின் உள்ளீடு மட்டும் அல்ல, கனவு வந்ததா இல்லையா, ஏன் தூக்கம் தொந்தரவுக்கு உள்ளானது போன்றவை பெரும் புதிர்த்தன்மையுடனே இப்போதும் உள்ளன. மனதை அரிக்கும் புலனாகாத கவலைகளை தூக்கமிழப்பு சுட்டிக் காட்டும். கனவு அவற்றின் விசித்திர பரிமாணங்களை ஒரு கலைஞனைப் போல் தேடிக் கொண்டே நம் முன் படைத்துக் காட்டும். அன்றாட வாழ்வில் நாம் புறக்கணிக்கக் கூடிய ஒரு மன நெருக்கடியை எதிர்பாராத தருணத்தில் கனவு புனைந்து காட்டுவது அலாதியான அனுபவமே. உதாரணமாக, எனது நண்பர் ஒருவர் தன் அண்ணனின் சிறுவயது மகன் இறந்து போவதற்கு ரெண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் அம்மரணத்தை கண்டார். இது போன்ற பல அனுபவங்கள் உங்களுக்கு நேர்ந்திருக்கலாம் அல்லது அவற்றை கேள்விப்பட்டிருக்கலாம். கனவை வாசித்தல் குறித்த விவாதங்களுக்கு இது நம்மை தூண்டலாம் என்றாலும் நமது மனம் இத்தகைய நிகழும் மற்றும் நிகழப் போகும் நிகழ்வுகளை எப்படி நுணுக்கமாக அவதானிக்கிறது, எந்த நினைவு முடிச்சுகளை இணைத்து எதிர்காலத்தை அது காண்கிறது என்பது பிரமிப்பூட்டும் விவாதம். நமக்குள் மற்றொருவன் நம்மை விட மிகுந்த விழிப்புடன் கவனித்தபடி வேகமாக முன்னகர்ந்தபடி உள்ளான் என்பது ஒரு கிளர்ச்சி ஊட்டும் சிந்தனை.
உறக்கத்தை உற்று கவனிப்பது பயனானது என்கிறது நவீன அறிவியல். கனவுகள் காமப் பீறிடல்கள் என்ற பிராயிடிய கருத்தியல் காலாவதியாகி விட்டது. கனவுகள் வாழ்வுக்கான ஒத்திகைகள் என்பதே சமகால புரிதல்.

கருத்துகள்

Madumitha இவ்வாறு கூறியுள்ளார்…
கனவு : சில குறிப்புகள்
நன்றாக இருந்தது.
ஆனால் ஊடாலே
’அவர் எழுந்து வராமல்
இருக்க ஒரு புத்தகம்
எழுதவில்லை’
எதற்காக ஜெயமோகனை
வம்புக்கு இழுக்கிறீர்கள்?
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் கண்டுபிடிக்கிறீர்க்ளா என்று பார்க்கத்தான்!
Sai Ram இவ்வாறு கூறியுள்ளார்…
கனவுகள் பற்றிய புரிதல் இப்போதைக்கு அல்லது எப்போதுமே சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் வெள்ளத்தில் மிதந்து வரும் எதோ வீட்டு பொருட்களை 'பொம்மையோ' என ஆவலாய் பார்க்கும் குழந்தைகள் போல எழுத்தாளர்கள்/கவிஞர்கள் கனவுகளை தங்களுடைய கருவாக்கி கொள்ள முனைதல் நடந்தபடி இருக்கிறது.

பகலில் கனவு காண்பவன் என்பது இப்போது பலர் தைரியமாக சொல்ல தொடங்கியிருக்கிற 'தனக்கு பிடித்த பொழுதுபோக்கு.'

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...