முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவலர்களை யார் காவல் காப்பது




நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட பனிமுலை இணையதளத்தில் மண்ணுண்ணி என்ற பெயரில் சில வேடிக்கை கட்டுரைகள் எழுதினேன். அதிலொன்றை இங்கே மறுபிரசுரிக்கிறேன்.


ஜெயலலிதாவுக்கு தி.மு.கவை பிடிக்காததற்கான மிக சின்ன காரணங்களில் ஒன்று மு.க ஆட்சியில் ரவுடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டு ”சட்டம்-ஒழுங்கு சீர் குலைவது. அவர் தூங்கி பெட்காபி குடித்தபடி எழுந்துததுமே “கருணாநிதியின் மைனாரிட்டி குடும்ப ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ...” என்று கூறி தொடங்குவதாக நம்பகமான இடங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சட்டம் ஒழுங்கை கராறாக கையில் எடுத்தால் புல்லட்புரூப் அம்மாவை பாசிஸ்டு என்கிறார்கள். வரும் உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிடப் போகும் கலைஞர் அகராதியில் பாசிஸம் என்ற வார்த்தையை அரசியல் பிரிவில் சேர்க்கப்படும் அளவிற்கு ஜெவை குறிப்பிடும் போதெல்லாம் அந்த வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டு விட்டது. வேலை செய்வதே பிடிக்காத என் நண்பன் ஒருவன் இந்த இரு தீவிர நிலைப்பாடுகளுக்கு ஒரு மாற்று சொல்கிறான். அவனுக்கு மறந்து விட்ட ஒரு குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள படி ஒரு ஆட்சியாளன் இரண்டு எதிரிடைகளுக்கும் நடுவே ஒரு கோடுகிழித்து அதில் பயணிக்க வேண்டுமாம். அது சாத்தியமே இல்லை என்று நான் சொன்னதற்கு அவன் அவனது பெண் மேலாளர் சொன்ன ஒரு கதையை சொன்னான்.

இந்த மேலாளர் ஜெவை போல ஒரு அம்மையார். அதாவது அடுத்தவர்கள் எப்போதும் முதுகு வளைந்தபடியே நடக்க வேண்டும் என்று விரும்புபவர். கதை அவர் ஐம்பதுகளில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி தலைமை ஆசிரியரால் சட்டம் ஒழுங்கு எப்படி பேணப்பட்டது என்பதைப் பற்றியது. அதில் குறிப்பிடத்தக்கது நோட் புத்தகங்களுக்கு பழுப்பு வண்ண அட்டை அணிவிக்காத மாணவர்களுக்கு தலைமையாசிரியர் தரும் தண்டனை. சட்டையை கழற்றி வாசலில் முட்டி போட்டு நிற்க வைப்பாராம். (அது பெண்களுக்கு மட்டுமேயான பள்ளியா என்ற ஐயம் உங்களைப் போன்று எனக்கும் எழுந்தது). ஆனால் தண்டனைக்காலம் முடிந்ததும் ஆசிரியர்கள் ஓடி வந்து குற்றவாளியை அள்ளி எடுத்து “செல்லம், புஜ்ஜு, ஜூஜூ” என்றெல்லாம் கொஞ்சி உடலின் பலபாகங்களை கிள்ளி சீராட்டுவார்களாம். இதன் விளைவு? உங்களுக்கு தண்டனை மீது கோபமே வராதாம்!
ஜெ சொல்வதில் அவரது கட்சிக்காரர்களுக்கே நம்பிக்கை இல்லை போல. அவர்கள் முழுக்க மாறுபடுகிறார்கள். சட்டசபையில் சமீபத்தில் நடந்த விவாதத்தில் கலையரசன் தி.மு.க ஆட்சியில் போலிசாரிடையே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறியுள்ளார். குறிப்பாக நடைபாதை கடைக்காரர்களிடம் கூட லஞ்சம் வாங்குவதாக அவர் கூறியுள்ளதை முக்கியமாக கருதுகிறேன். அடிக்கடி போலி டி.வி.டி தயாரித்து, விற்பனை செய்ததாக சிலரை கைது செய்து பத்திரிகைகளில் படம் வெளியிடுவார்கள். ஆனாலும் பட்டப்பகலில் திருட்டு டி.வி.டிக்கள் வெளிப்படையாக விற்கப்படுகின்றன. இவை வெறுமனே மாமூல் கைதுகள் தாம். கிண்டி பகுதியில் ஒரு தொப்பை போலீஸ் மாமா பைக்கில் இருந்தபடியே திருட்டு டி.வி.டிக்காரரிடம் லஞ்சம் கேட்டுப் பெற்று சட்டைப் பையில் சொருகுவதை கண்டேன். எனக்கு கரப்பான்பூச்சியையும் போலீசையும் கண்டால் சின்ன வயசில் இருந்தே பயம் என்பதால் இந்த காட்சியை உங்களுக்காக நுண்பேசியில் படம் பிடிக்கும் முயற்சியை கைவிட்டேன். இங்கு ஒன்றை ctrl+U போட்டு சொல்ல வேண்டும். மாமூல் கொடுக்கும் கடைக்காரர் போலீசை சிறிதும் சட்டை செய்யவில்லை. நாய்க்கு புரை வாங்கிப் போடும் ஒருவித அலட்சிய பாவனை. அடுத்து இந்த கடைக்காரரிடம் விசாரித்ததற்கு படிநிலை பொறுத்து லஞ்ச தொகை மாறுபடும் என்றார். அதாவது நூறில் இருந்து ரெண்டாயிரம் ரூபாய் வரை அடிக்கடி வாங்கி செல்வார்களாம். காவல்துறை இதற்கெல்லாம் ஒரு நிலையான கணக்கு வைத்துக் கொண்டு கடை, இடை, தலை ஊழியர்களை எல்லாம் கண்டமேனிக்கு தோன்றும் போதெல்லாம் அனுப்பி கை நீட்டும் அவலத்தை தவிர்க்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். அடுத்து தர்பூசணி மற்றும் இளநீர் விற்கும் மற்றொரு சாலையோர கடைக்காரர் தி.மு.க ஆட்சி பற்றி இதே போன்றே அலுத்துக் கொண்டார். “அ.தி.முக ஆட்சியில் போலீஸ்கரங்க லஞ்சம் வாங்கவே பயப்படுவாங்க. இப்போது வெளிப்படையாவே வந்து புடுங்கீட்டு போறாங்க.” மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் போலீசுக்கு தாரை வார்க்க வேண்டி உள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார். “மாமூல் கொடுக்காட்டா கேஸ் போடுவாங்க. இவனுவளுக்கு கொடுக்கிற லஞ்சக் காசை கோர்டில பைனாவே கட்டீரலமுன்னு சில சமயங்களில் தோணும்”.



”காவலர்களை யார் காவல் காப்பது?”
சாகரடீஸ் தனது லட்சிய நாடான utopia-வை விளக்கிக் கொண்டிருக்கும் போது அவரிடம் இந்த கேள்வி கேட்கப்படுகிறது. பின்னர் இதற்கு தீர்வு சொல்லும் சீடர் பிளேட்டோ “அதிகார மோகம் இல்லாதவர்கள் காவலர்களாக வேண்டும்” என்கிறார். இது சாத்தியமில்லை என்று உணர்ந்து விட்ட பின் இன்று மற்றொரு தீர்வு சொல்லப்படுகிறது: அதிகாரத்தை பிரித்தளிப்பது. எந்த பெரிய குழுவிடமும் அதிகாரம் மொத்தமாக சேர்ந்து விடுவதை தவிர்ப்பது. ஆட்சி அதிகாரம் இப்படி பகிர்ந்தளிக்கப்படுவது ஊழல் மற்றும் பொறுப்பின்மையை குறைக்க உதவலாம். எனக்கென்னமோ ஜராசந்தன் கதை தான் நினைவுக்கு வருகிறது.

கருத்துகள்

Gangaram இவ்வாறு கூறியுள்ளார்…
Nalla padhivu... pagirndhamaikku nandri....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.