முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்து முன்னணியினர் கலவரமும் அழிவு அரசியலும்




பூந்தமல்லி ஹைவேயில் நேற்று இந்து முன்னணியினர் நிகழ்த்திய வன்முறை உ.பி, குஜராத், அயோத்தியா வகை இந்துத்துவாவை இங்கும் முன்னெடுப்பதற்கான ஆரம்ப முயற்சி. சாலையில் போன பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தாக்கப்பட்டனர். போலீசும் அடிக்கு தப்பவில்லை. இன்னொரு பக்கம் தம் பிள்ளைகளுக்கு ஏதாவது ஆகி விடுமோ என பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களுக்கு படையெடுத்தனர். போக்குவரத்து நீண்ட நேரம் ஸ்தம்பித்தது, கீழ்ப்பாக்கத்தில் ஒரு பேருந்து மீது கல் வீசி தாக்கியதால் பயணிகள் பயந்து ஓடினர். ஒரு தேவாலயம் மீது தாக்குதல் நடந்தது. மொத்தம் 9 பேருந்துகள் மற்றும் 10 கார்கள் தாக்கப்பட்டன. ஆனால் இந்து முன்னணியினரால் எதிர்பார்த்த அளவு தாக்கத்தை இவ்விசயத்தை வைத்து ஏற்படுத்த முடியவில்லை.

முக்கிய காரணம் இது போன்ற கட்சி நிர்வாகிகளின் கொலைகள் (கழகமோ இந்து முன்னணியோ பிற ஜாதி கட்சிகளோ) அரசியல் கொலைகளோ கொள்கை முரண்பாட்டு கொலைகளோ அல்ல என மக்கள் அறிவர். பெரும்பாலும் இக்கொலைகள் ரியல் எஸ்டேட் மோதல், வணிக தகராறுகள், உட்கட்சி மோதல்கள், போட்டி, பொறாமை இவற்றினால் தான் நடக்கின்றன. பாடி சுரேஷ்குமாரை எதிர்கட்சியினர் கொன்று விட்டார்கள் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை. போலீஸ் விசாரித்து கண்டுபிடிக்க நேரம் அளிக்க வேண்டும். ஆனால் மரணம் நடந்த அடுத்த நாளே குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை என போலீஸை குற்றம் சாட்டி பொதுமக்களை தாக்குவது கீழ்த்தரமான அரசியல்.
தம் நிர்வாகிகள் ஏன் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள் என விசனிக்கும் பா.ஜ.க ஏன் நன்கு படித்து ஒரு மருத்துவரோ ஆசிரியரோ போன்றிருப்பவர்களை நிர்வாகிகளாக்குவது இல்லை. மணல் மாபியாக்களும், கிரானைட் கொள்ளையர்களும் ரியல் எஸ்டேட் ரௌடிகளும் நிர்வாகிகள் என்றால் பரஸ்பரம் வெட்டித் தான் சாவார்கள். தமிழகத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஏன் ரௌடிகளால் தாக்கப்படுவதில்லை என நீங்கள் யோசித்ததுண்டா? பேய்கள் அரசாண்டால்…?

ஏதோ இந்து அமைப்பு தலைவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள் எனும் சித்திரத்தை உருவாக்க பா.ஜ.க இங்கு கடுமையாக முயன்று வருகிறது. ஆனால் பிச்சைக்காரனிடம் இருந்து யாராவது பிக் பாக்கெட் அடிப்பார்களா?

ஏற்கனவே தமிழ் நாட்டில் கையேந்தும் ஒரு கட்சியை எதற்கு மெனக்கெட்டு பலவீனப்படுத்த வேண்டும்? இது டீக்கடையில் பன் சாப்பிடுகிற சாமான்யனும் அறிந்த சேதி. பிரிவினைவாதம், மத துவேசம் கொண்டு பா.ஜ.க தமிழகத்தில் வளர முடியாது. அப்படி ஒரு வரலாறு நமக்கில்லை. அதற்கு அவர்கள் மக்கள் தொண்டு மற்றும் போராட்ட அரசியலில் ஈடுபட வேண்டும். உதாரணமாய், மின்சார தட்டுப்பாட்டின் பின் மிகப்பெரிய ஊழல் உள்ளது. அதை வெளிப்படுத்தி போராடலாம். அது போல் பெண்கள் அமைப்புகளை பரவலாக தமிழகம் பூரா உருவாக்கி வலுப்படுத்தி அவர்களை கொண்டு டாஸ்மாக்குக்கு எதிராய் தொடர் போராட்டங்கள் நடத்தலாம். எவ்வளவோ செய்யலாம். ஆனால் அழிவு அரசியல் அவர்களையே அழிக்கும் அன்றி வளர்க்காது.

சென்னையை ஸ்தம்பிக்கும் வகையிலான இரண்டாவது போராட்டம் இது. முதலில் அமெரிக்க எம்பஸிக்கு எதிரான இஸ்லாமியர் போராட்டம் நடக்கப் போவது பற்றி என் நண்பர்கள் சிலருக்கு கூட முன்கூட்டி சேதி தெரிந்திருந்தது. ஆனால் போலீஸ் முற்றிலும் தயாரற்றிருந்தது. சொதப்பியது. நேற்று நடந்த கலவரமும் அது போன்ற போலீஸ் மற்றும் உளவுத்துறையின் போதாமையினால் நடந்த ஒன்று தான். தமிழக உளவுத்துறை கட்சி பிரமுகர்களை உளவுப்பார்ப்பது தவிர வேறென்ன உருப்படியாய் செய்கிறது? அவர்கள் ஒவ்வொரு கட்சிக்குள்ளும், குறிப்பாய் கலவர கட்சிகளான சில ஜாதிக் கட்சிகளுக்குள், ஊடுருவ வேண்டும். கலவரங்கள் திட்டமிட்டு தான் நடத்தப்படுகின்றன. அதற்கு முந்தின நாளே பொறுப்பிலுள்ள கட்சியின் நண்டுசிண்டுகளை தூக்கி உள்ளே போட்டு விட வேண்டும். கலவரங்கள் முடிந்த பின் அலங்காரமாய் ஆயிரக்கணக்கான போலீஸ்காரர்களை சாலையில் நிறுத்தி வீணடிக்க அவசியமில்லை. இனியும் தர்மபுரியில் நிகழ்ந்தது போல் குடிசைகள் கொளுத்தப்பட்டு அப்பாவி மக்கள் கொள்ளையடிக்கப்படுவதை தவிர்க்க வேறு வழியில்லை.

தமிழகத்தில் நடந்து வரும் கலவரங்களுக்கும் மக்களுக்கு ஏற்பட்டு வரும் பீதி உணர்வுக்கும் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் போதாமை தான் காரணம். மாணவர்கள் போராடினால் குண்டாந்தடியாய் அடித்து இழுத்து போகும் போலீசார் கட்சி குண்டர்கள் நடத்தும் கொலைகார போராட்டங்களை ஏன் குழந்தைக்கு நேப்பீஸ் மாற்றுகிற மென்மையுடன் கையாள்கிறது என்கிற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது.

கருத்துகள்

சீனு இவ்வாறு கூறியுள்ளார்…
//பூந்தமல்லி ஹைவேயில் நேற்று இந்து முன்னணியினர் நிகழ்த்திய வன்முறை//

//முதலில் அமெரிக்க எம்பஸிக்கு எதிரான இஸ்லாமியர் போராட்டம்//

முன்னது வன்முறை. பின்னது போராட்டம். திஸ் இஸ் கால்டு செக்குலரிஸம்... :)
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
இஸ்லாமியர் பொதுமக்களை தாக்கவோ, கோயிலுக்கு கல்லெறியவோ இல்லை. பஸ்ஸுக்கு கல்லெறிந்து பயணிகளை துரத்தவில்லை. பஸ்களுக்கு தீ வைக்கவில்லை. இதையெல்லாம் இந்துமுன்னணியினர் செய்தார்கள். அதனால் இது கலவரம் கூட அல்ல குண்டாயிஸம்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ஆக்க பாதையில் அரசியல் தேடினால் தமிழகம் அழிந்து விடும் அபிலாஷ்! அதற்காகத்தான் கட்சிகள் அரும்பாடு பட்டு கலவரங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு இடையூறு செய்து அதில் கட்சியின் உள்கட்சி பூசல், எதிர்க்கட்சி குளிர் காய நினைக்கின்றனர்..

தேர்தலின் போது எதாவது இலவசம் கொடுத்தால் போதுமென்ற நினைப்பு!!மக்கள் மாறிவிட்டனர் என்பதை உணரவே மாட்டார்கள் இந்த மாக்கள்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...