முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலகுமாரன்


பாலகுமாரன் எழுதியது வணிக நாவல்கள் என்றாலும் அதில் ஒரு நிதானமும் வாழ்க்கை பற்றின நிறைய அவதானிப்புகளும் இருந்தன. நல்ல புத்தகங்கள் வாழ்க்கையை நெருக்கமாய் நின்று பார்க்கிற உணர்வை தரும். பாலகுமாரன் நாவல்களின் சிறப்பு அவை வெறுமனே விறுவிறுப்பாய் கதை சொல்லி நிற்பதில்லை என்பது. அவரது நாவல்களில் குட்டி அபத்தங்களும் பலவீனங்களும் ஒரு இலக்கிய வாசகனாய் படிக்கையில் புலப்படும். ஆனால் அவர் பொய்யை எழுதவில்லை என்பது தான் அந்நாவல்களின் வலிமை.


எனக்கு அவரது பல நாவல்களின் தலைப்புகளும் கதைகளும் மறந்து விட்டன. ஆனால் உதிரி உதிரியான சம்பவங்கள் நினைவில் உள்ளன. ஒரு நாவலில் நாயகன் சின்ன ஓட்டல் நடத்துவான். தினமும் காலையில் இட்லி வெந்ததும் இரண்டை எடுத்து நெய்யூற்றி அந்த தெருவில் திரியும் பைத்தியக்காரனுக்கு வைப்பான். அவரால் தான் தன் கடை வியாபாரம் அமோகமாய் நடக்கிறது என அவனுக்கு ஒரு நம்பிக்கை. இது இந்திய மனம் பற்றி தரும் சித்திரம் அலாதியானது. அதே போல் இன்னொரு நாவலில் ஒரு கூர்க்கா வருவான். அவன் டீ சாப்பிடும் விதத்தை பற்றி சொல்லுவார். அவன் டீயை சிலாகித்து நேரம் எடுத்து சாப்பிடுவான். அதை படித்த பின் நானும் அது போல் குடிக்க ஆரம்பித்தேன். இது போல் வாழ்க்கை ரசிப்பதற்கான பல விசயங்களை சொல்லித் தருவார். சின்ன வயதில் பாலகுமாரன் வாசிப்பது ஒரு வாழ்க்கை பாடமாகவே எனக்கு தோன்றியது.

“மெர்க்குரி பூக்களில்” என நினைக்கிறேன். தொழிற்சாலையில் வேலை நிறுத்தம். முதலாளி இதை அடக்க குண்டர்களை ஏற்பாடு செய்வார். அதை அறியாமல் வேலைக்கு கிளம்பும் ஒருவன் தெரியாமல் ரௌடி ஒருவனை சைக்கிளில் மோதி விடுவான். அவன் எரிச்சலில் தனது மெல்லிய கத்தி கொண்டு அவனை குத்தி விடுவான். அவனுக்கும் கொல்லும் உத்தேசம் இல்லை, இவனுக்கும் போராடி சாகும் ஆசை இல்லை. ஆனால் சாவு நடந்து விடுகிறது. அவன் மனைவி விதவையாக இது கதையின் போக்கை மாற்றுகிறது. இந்த அசந்தர்ப்பமான அபத்தம் எனக்கு பிடித்திருந்தது. அது போல் இப்பெண்ணுக்கு ஒருவன் தொடர்ந்து உதவுவான். அவள் ஒரு நாள் இரவு ஏதோ தகவல் சொல்ல வீட்டுக்கு வருவான். அவள் தூக்க களைப்புடன் கதவை திறப்பாள். அவளது ஆடை விலகி ஒரு மார்பு வெளியே கிடக்கும். அதை கவனிக்க மாட்டாள். அந்தளவுக்கு அவளுக்கு வாழ்க்கையில் அலுப்பும் அக்கறையின்மையும்.

இன்னொரு நாவலில் திருமணமாகி போகும் பெண் தன் கணவனின் மூளை வளர்ச்சியில்லாத தம்பி பற்றி கூறும் போது அவன் அடிக்கடி தன் அறைக்கு வந்து கால்சராயை கழற்றி விட்டு நிற்கிறான் என கூறுவாள். அவள் நிலைமையை யோசியுங்கள். கோபிக்கவும் முடியாது இரங்கவும் முடியாது.

பாலகுமாரன் உருவாக்கின மனிதர்கள் என்னுடன் வாழ்ந்திருக்கிறார்கள். இன்னும் என் நினைவில் இருட்டில் அசைகிறார்கள். அவருக்கு இன்று பிறந்த நாள். அவரது பல லட்சம் வாசகர்களில் ஒருவனின் நன்றிகளும் அன்பும்.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
மெர்க்குரி பூக்கள் நாவல் எனக்கு பிடித்த நாவலாகும் ,அவரைப் பற்றிய உங்கள் பதிவு அருமை !
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி இவ்வாறு கூறியுள்ளார்…


நிச்சயமாய் பாலகுமாரனை தாண்டி வராத 30 வயதை கடந்தவர்கள் எழுத்தின் அழகையும் வாழ்வின் தந்திரத்தையும் உணர முடியாதவர்கள் என்பது உண்மை .
எம்.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர் பாலகுமாரன். ஒரு கட்டத்தில் ஆன்மீகம் குறித்து எழுத ஆரம்பித்துவிட்டதால்தான் ஒதுங்க ஆரம்பித்தேன். அது தவிர இப்போது அவசர யுகம் வேறு. முன்பு மாதிரி வாசிக்க முடியவில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...