Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பாலகுமாரன்


பாலகுமாரன் எழுதியது வணிக நாவல்கள் என்றாலும் அதில் ஒரு நிதானமும் வாழ்க்கை பற்றின நிறைய அவதானிப்புகளும் இருந்தன. நல்ல புத்தகங்கள் வாழ்க்கையை நெருக்கமாய் நின்று பார்க்கிற உணர்வை தரும். பாலகுமாரன் நாவல்களின் சிறப்பு அவை வெறுமனே விறுவிறுப்பாய் கதை சொல்லி நிற்பதில்லை என்பது. அவரது நாவல்களில் குட்டி அபத்தங்களும் பலவீனங்களும் ஒரு இலக்கிய வாசகனாய் படிக்கையில் புலப்படும். ஆனால் அவர் பொய்யை எழுதவில்லை என்பது தான் அந்நாவல்களின் வலிமை.


எனக்கு அவரது பல நாவல்களின் தலைப்புகளும் கதைகளும் மறந்து விட்டன. ஆனால் உதிரி உதிரியான சம்பவங்கள் நினைவில் உள்ளன. ஒரு நாவலில் நாயகன் சின்ன ஓட்டல் நடத்துவான். தினமும் காலையில் இட்லி வெந்ததும் இரண்டை எடுத்து நெய்யூற்றி அந்த தெருவில் திரியும் பைத்தியக்காரனுக்கு வைப்பான். அவரால் தான் தன் கடை வியாபாரம் அமோகமாய் நடக்கிறது என அவனுக்கு ஒரு நம்பிக்கை. இது இந்திய மனம் பற்றி தரும் சித்திரம் அலாதியானது. அதே போல் இன்னொரு நாவலில் ஒரு கூர்க்கா வருவான். அவன் டீ சாப்பிடும் விதத்தை பற்றி சொல்லுவார். அவன் டீயை சிலாகித்து நேரம் எடுத்து சாப்பிடுவான். அதை படித்த பின் நானும் அது போல் குடிக்க ஆரம்பித்தேன். இது போல் வாழ்க்கை ரசிப்பதற்கான பல விசயங்களை சொல்லித் தருவார். சின்ன வயதில் பாலகுமாரன் வாசிப்பது ஒரு வாழ்க்கை பாடமாகவே எனக்கு தோன்றியது.

“மெர்க்குரி பூக்களில்” என நினைக்கிறேன். தொழிற்சாலையில் வேலை நிறுத்தம். முதலாளி இதை அடக்க குண்டர்களை ஏற்பாடு செய்வார். அதை அறியாமல் வேலைக்கு கிளம்பும் ஒருவன் தெரியாமல் ரௌடி ஒருவனை சைக்கிளில் மோதி விடுவான். அவன் எரிச்சலில் தனது மெல்லிய கத்தி கொண்டு அவனை குத்தி விடுவான். அவனுக்கும் கொல்லும் உத்தேசம் இல்லை, இவனுக்கும் போராடி சாகும் ஆசை இல்லை. ஆனால் சாவு நடந்து விடுகிறது. அவன் மனைவி விதவையாக இது கதையின் போக்கை மாற்றுகிறது. இந்த அசந்தர்ப்பமான அபத்தம் எனக்கு பிடித்திருந்தது. அது போல் இப்பெண்ணுக்கு ஒருவன் தொடர்ந்து உதவுவான். அவள் ஒரு நாள் இரவு ஏதோ தகவல் சொல்ல வீட்டுக்கு வருவான். அவள் தூக்க களைப்புடன் கதவை திறப்பாள். அவளது ஆடை விலகி ஒரு மார்பு வெளியே கிடக்கும். அதை கவனிக்க மாட்டாள். அந்தளவுக்கு அவளுக்கு வாழ்க்கையில் அலுப்பும் அக்கறையின்மையும்.

இன்னொரு நாவலில் திருமணமாகி போகும் பெண் தன் கணவனின் மூளை வளர்ச்சியில்லாத தம்பி பற்றி கூறும் போது அவன் அடிக்கடி தன் அறைக்கு வந்து கால்சராயை கழற்றி விட்டு நிற்கிறான் என கூறுவாள். அவள் நிலைமையை யோசியுங்கள். கோபிக்கவும் முடியாது இரங்கவும் முடியாது.

பாலகுமாரன் உருவாக்கின மனிதர்கள் என்னுடன் வாழ்ந்திருக்கிறார்கள். இன்னும் என் நினைவில் இருட்டில் அசைகிறார்கள். அவருக்கு இன்று பிறந்த நாள். அவரது பல லட்சம் வாசகர்களில் ஒருவனின் நன்றிகளும் அன்பும்.

Comments

Unknown said…
மெர்க்குரி பூக்கள் நாவல் எனக்கு பிடித்த நாவலாகும் ,அவரைப் பற்றிய உங்கள் பதிவு அருமை !
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !


நிச்சயமாய் பாலகுமாரனை தாண்டி வராத 30 வயதை கடந்தவர்கள் எழுத்தின் அழகையும் வாழ்வின் தந்திரத்தையும் உணர முடியாதவர்கள் என்பது உண்மை .
எனக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர் பாலகுமாரன். ஒரு கட்டத்தில் ஆன்மீகம் குறித்து எழுத ஆரம்பித்துவிட்டதால்தான் ஒதுங்க ஆரம்பித்தேன். அது தவிர இப்போது அவசர யுகம் வேறு. முன்பு மாதிரி வாசிக்க முடியவில்லை.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...