முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலகுமாரன்


பாலகுமாரன் எழுதியது வணிக நாவல்கள் என்றாலும் அதில் ஒரு நிதானமும் வாழ்க்கை பற்றின நிறைய அவதானிப்புகளும் இருந்தன. நல்ல புத்தகங்கள் வாழ்க்கையை நெருக்கமாய் நின்று பார்க்கிற உணர்வை தரும். பாலகுமாரன் நாவல்களின் சிறப்பு அவை வெறுமனே விறுவிறுப்பாய் கதை சொல்லி நிற்பதில்லை என்பது. அவரது நாவல்களில் குட்டி அபத்தங்களும் பலவீனங்களும் ஒரு இலக்கிய வாசகனாய் படிக்கையில் புலப்படும். ஆனால் அவர் பொய்யை எழுதவில்லை என்பது தான் அந்நாவல்களின் வலிமை.


எனக்கு அவரது பல நாவல்களின் தலைப்புகளும் கதைகளும் மறந்து விட்டன. ஆனால் உதிரி உதிரியான சம்பவங்கள் நினைவில் உள்ளன. ஒரு நாவலில் நாயகன் சின்ன ஓட்டல் நடத்துவான். தினமும் காலையில் இட்லி வெந்ததும் இரண்டை எடுத்து நெய்யூற்றி அந்த தெருவில் திரியும் பைத்தியக்காரனுக்கு வைப்பான். அவரால் தான் தன் கடை வியாபாரம் அமோகமாய் நடக்கிறது என அவனுக்கு ஒரு நம்பிக்கை. இது இந்திய மனம் பற்றி தரும் சித்திரம் அலாதியானது. அதே போல் இன்னொரு நாவலில் ஒரு கூர்க்கா வருவான். அவன் டீ சாப்பிடும் விதத்தை பற்றி சொல்லுவார். அவன் டீயை சிலாகித்து நேரம் எடுத்து சாப்பிடுவான். அதை படித்த பின் நானும் அது போல் குடிக்க ஆரம்பித்தேன். இது போல் வாழ்க்கை ரசிப்பதற்கான பல விசயங்களை சொல்லித் தருவார். சின்ன வயதில் பாலகுமாரன் வாசிப்பது ஒரு வாழ்க்கை பாடமாகவே எனக்கு தோன்றியது.

“மெர்க்குரி பூக்களில்” என நினைக்கிறேன். தொழிற்சாலையில் வேலை நிறுத்தம். முதலாளி இதை அடக்க குண்டர்களை ஏற்பாடு செய்வார். அதை அறியாமல் வேலைக்கு கிளம்பும் ஒருவன் தெரியாமல் ரௌடி ஒருவனை சைக்கிளில் மோதி விடுவான். அவன் எரிச்சலில் தனது மெல்லிய கத்தி கொண்டு அவனை குத்தி விடுவான். அவனுக்கும் கொல்லும் உத்தேசம் இல்லை, இவனுக்கும் போராடி சாகும் ஆசை இல்லை. ஆனால் சாவு நடந்து விடுகிறது. அவன் மனைவி விதவையாக இது கதையின் போக்கை மாற்றுகிறது. இந்த அசந்தர்ப்பமான அபத்தம் எனக்கு பிடித்திருந்தது. அது போல் இப்பெண்ணுக்கு ஒருவன் தொடர்ந்து உதவுவான். அவள் ஒரு நாள் இரவு ஏதோ தகவல் சொல்ல வீட்டுக்கு வருவான். அவள் தூக்க களைப்புடன் கதவை திறப்பாள். அவளது ஆடை விலகி ஒரு மார்பு வெளியே கிடக்கும். அதை கவனிக்க மாட்டாள். அந்தளவுக்கு அவளுக்கு வாழ்க்கையில் அலுப்பும் அக்கறையின்மையும்.

இன்னொரு நாவலில் திருமணமாகி போகும் பெண் தன் கணவனின் மூளை வளர்ச்சியில்லாத தம்பி பற்றி கூறும் போது அவன் அடிக்கடி தன் அறைக்கு வந்து கால்சராயை கழற்றி விட்டு நிற்கிறான் என கூறுவாள். அவள் நிலைமையை யோசியுங்கள். கோபிக்கவும் முடியாது இரங்கவும் முடியாது.

பாலகுமாரன் உருவாக்கின மனிதர்கள் என்னுடன் வாழ்ந்திருக்கிறார்கள். இன்னும் என் நினைவில் இருட்டில் அசைகிறார்கள். அவருக்கு இன்று பிறந்த நாள். அவரது பல லட்சம் வாசகர்களில் ஒருவனின் நன்றிகளும் அன்பும்.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
மெர்க்குரி பூக்கள் நாவல் எனக்கு பிடித்த நாவலாகும் ,அவரைப் பற்றிய உங்கள் பதிவு அருமை !
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி இவ்வாறு கூறியுள்ளார்…


நிச்சயமாய் பாலகுமாரனை தாண்டி வராத 30 வயதை கடந்தவர்கள் எழுத்தின் அழகையும் வாழ்வின் தந்திரத்தையும் உணர முடியாதவர்கள் என்பது உண்மை .
எம்.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர் பாலகுமாரன். ஒரு கட்டத்தில் ஆன்மீகம் குறித்து எழுத ஆரம்பித்துவிட்டதால்தான் ஒதுங்க ஆரம்பித்தேன். அது தவிர இப்போது அவசர யுகம் வேறு. முன்பு மாதிரி வாசிக்க முடியவில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.