முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய டெஸ்ட் அணி ஒரு போலி T20 அணி


இங்கிலாந்து தொடர் ஆரம்பிக்கும் முன் இந்தியாவின் பலவீனம் பந்து வீச்சு தான் என பலரும் சொன்னார்கள். மட்டையாளர்கள் கலக்குவார்கள் என எதிர்பார்க்கப் பட்டது. அதற்கு ஒரு காரணம் இங்கிலாந்தின் மட்டையாட்டம் பலவீனம் என்பதால் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க தொடர்களில் அவர்கள் தட்டையான ஆடுதளங்களை தயார் பண்ணினது. இந்தியாவுடனான முதல் டெஸ்டிலும் அப்படியான ஆடுதளம் தான். அப்போது இந்திய மட்டையாளர்கள் முன்னூறு ஓட்டங்களை நீண்ட நாட்களுக்கு பின் வெளிநாட்டில் அடித்தார்கள். ஆனால் அடுத்த லார்ட்ஸ் டெஸ்டில் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுதளம் அமைத்து இங்கிலாந்து வேறு முயற்சி செய்தது.


கிட்டத்தட்ட வென்ற நிலையில் மோசமாக அடித்தாடி இங்கிலாந்து தோற்றது. அதற்கு அடுத்த டெஸ்டில் மட்டையாட்டத்துக்கு சாதகமான ஆனால் பவுன்ஸ் உள்ள ஆடுதளம் தயார் பண்ணினார்கள். அதில் இந்தியா மோசமாக பந்து வீசியது. இந்தியா தோற்றது. காரணம் வேகமும் பவுன்ஸும் கொண்ட பந்து வீச்சாளர்கள் நமக்கு இல்லை. மேலும் இப்படியான ஆடுதளங்களில் வேகமாக வீசும் பந்துகள் தாம் அதிக ஸ்விங் ஆகின்றன. இதை சவுத் ஆம்ப்டனில் நான்காவது டெஸ்டில் அரோன் நிரூபித்தார். சவுத் ஆம்ப்டனிலும் மட்டையாட்டத்துக்கு சாதகமான ஆனால் பவுன்ஸ் மிக்க ஆடுதளம் தான். ஆனால் மழை காரணமாய் அதிகம் ஸ்விங் ஆனது. ஒட்டுமொத்தமாய் நான்கு டெஸ்டுகளிலும் நம் வேகவீச்சாளர்கள் போன இங்கிலாந்து பயணத்தொடரை விட இம்முறை நன்றாக பந்து வீசினர். எதிர்பார்ப்புக்கு மாறாக மட்டையாளர்கள் மிக மோசமாய் ஆடினர்.
நம் மட்டையாளர்கள் தென்னாப்பிரிக்காவில் சில வேளை நன்றாக மட்டையாடினர். நியுசீலாந்திலும் சில ஆட்டங்களில் நன்றாக மட்டையாடினர். ஆனால் அவர்கள் வேகமாய் விக்கெட்டுகளை கொடுத்து ஐம்பது ஓவர்களுக்கு உள்ளாகவே இரண்டு தொடர்களிலும் ஆட்டம் இழந்தனர். தடுப்பாட்டம் இன்மையால் தான் நாம் இத்தொடர்களை இழந்தோம். ஒரு மட்டையாட்ட அணிக்கு இரண்டு வகை ஆட்டங்களும் – தடுப்பாட்டம் + தாக்குதல் ஆட்டம் – கைவர வேண்டும். அணி தோல்வியை நோக்கி நகரும் போது பிரேக் போட நம்மிடம் தடுப்பாட்டம் இல்லை. தோனியால் முடிந்ததெல்லாம் அணியை ஏதாவது மரம் அல்லது மதில் மீது மோதி வண்டியை நிறுத்துவது தான். நம் அணியில் தவான், கம்பீர், ஜடேஜா, தோனி, ரோஹித் ஆகியோருக்கு தடுப்பாட்டமே இல்லை. கம்பீர் கடுமையாய் உழைத்து சில டெஸ்டுகளில் நீண்ட நேரம் ஆடியிருக்கிறார், ஆனால் அவரது தொழில்நுட்பம் இன்று சிதிலமாகி விட்டது. மிச்ச பேரில் கோலி, புஜாரா, ஆகியோரின் தடுப்பாட்டம் ஒருநாள், t20 ஆட்டங்களில் தாக்கத்தால் பலவீனமாகி உள்ளது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் செய்வதெல்லாம் கோலிக்கு பந்தை வைடாக குட் லெங்தில் வீசுவது தான். கோலிக்கு ஆரம்ப முப்பது பந்துகளில் ஒற்றை ரெட்டை ஓட்டங்கள் முக்கியம். அதன் பின் தான் அவரது கால்கள் சரியாக இயங்க துவங்கும். அதற்கு அவர் கால் பக்கமும் நேராகவும் உள்ள பகுதிகளில் ஒற்றை ஓட்டங்களை நம்பி இருக்கிறார். ஆனால் இந்த ஷாட்களை இங்கிலாந்து வீச்சாளர்கள் பிளாக் செய்திட தோனி பதற்றமாகிறார். அவரது காலாட்டம் தாறுமாறாகிறது. அவரது தடுப்பாட்ட தொழில்நுட்பத்தில் நிறைய சிக்கல்கள் உள்ளன. இவை விரிவாக அலசப்பட்டுள்ளன. அவற்றை அவர் சரிசெய்ய வேண்டும். குறிப்பாய் நேராக ஆடவும் பந்துகள் ஆப் குச்சிக்கு வெளியே பொறுமையாய் விடவும் ஆரம்பிக்க வேண்டும். பட்டினி போட்டு கொல்வது தான் இங்கிலாந்து பந்து வீச்சின் இலக்கு. கொஞ்சம் கட்டுப்பாட்டோடு 300 பந்துகளையாவது ஆட தயாரானால் தான் கோலி அவர்களுக்கு எதிராக சதம் ஆடிக்க முடியும்.
புஜாராவின் டெஸ்ட் மட்டையாட்டம் கடந்த ஒரு வருடமாகவே பிரச்சனையில் உள்ளது. நிறைய உள்வரும் பந்துகளை அவர் அடிக்கவோ தடுக்கவோ தவறுகிறார். ஏனென்றால் அவரது காலாட்ட நிலை (stance) பல சமயம் அகன்று போய் உள்ளது. அவர் மிடில் குச்சி பந்தை கூட ஆப் பக்கம் அடிக்கும் நோக்கில் உள்ளார். இதனால் பந்து சட்டென உள்ளே வரும் போது திணறுகிறார். இந்த தொடரில் அவரது தடுப்பாட்டம் மேலும் கோளாறாகி உள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம் அவரது ஒருநாள் அணியில் இடம்பெறும் ஆசை. ஏனென்றால் இந்தியாவில் நீங்கள் ஒருநாள் அணியில் ஆடினால் தான் நட்சத்திரம். இதன் காரணமாய் அவரது கவனம் முழுக்க அதிக ஸ்டுரோக்குகளை அடிப்பதில் உள்ளது. அவரது இயலான தடுப்பாட்டத்தையும் கவனம் பொறுமையையும் இழந்து விட்டார்.

டெஸ்ட் ஓரளவு மட்டையாளர்களாக ஓரளவு நம்பிக்கை அளிப்பவர்கள் ரஹேனேவும் அஷ்வினும் தான். ரஹேனேவுக்கு சில பலவீன்ங்கள் உள்ளன. குறிப்பாய் பந்தை விரட்டும் போது அவரது முன் கால் ஆட்டம் போதுமானதாக இல்லை. விஜய் வெகுவாக முன்னேறி இருக்கிறார். உயரமாக பந்து எழுகிற ஆடுதளங்களிலும் பந்துகளை விடும் திறனை அவர் வளர்க்க வேண்டும். ஒரு நல்ல டெஸ்ட் அணியை உருவாக்க இன்னும் மூன்று மட்டையாளர்களும் ஒரு நல்ல கீப்பரும் வேண்டுமே! இப்போது அணியில் உள்ள நான்கு பேர்களும் டெஸ்ட் வகைமைக்கு ஏற்றவர்கள் அல்ல. ஆனால் இந்தியாவுக்கு மாற்று வீர்ரகளும் அதிகம் இல்லை. உண்மையில் இன்று இந்தியாவில் நல்ல தடுப்பாட்ட வீரர்கள் குறைந்து விட்டார்கள். அதனால் தான் தோனி இவர்களை நம்பி இருக்கிறார்கள். தடுப்பாட வராவிட்டால் அடித்தாவது ஆடுங்கள் என்கிறார். இதனால் இந்தியா சில ஆட்டங்களை இழக்கும் என அவர் அறிந்தே இருக்கிறார். ஆனால் அடிப்படையில் மோசமான டெஸ்ட் மட்டையாளரான தோனி அணித்தலைவராக இருக்கையில் அவரால் வேறெப்படி அணியை மாற்ற முடியும்.

இப்போதைக்கு இந்திய அணி எதேச்சையாக டெஸ்டுகளில் ஆடும் ஒரு ஒருநாள், T20 அணி. வெறும் நட்சத்திரங்களின் அணிவரிசை. இன்னும் சற்று காலத்துக்கு அப்படித் தான் இருக்கும். இந்திய டெஸ்ட் அணியின் முன்னேற்றத்திற்கு ரெண்டு விசயங்கள் நடக்க வேண்டும்.
1, அணித்தலைவர் மாற வேண்டும். அதற்கு நாம் அடுத்த உலகக்கோப்பையில் இந்தியா தோற்பது வரை காத்திருக்க வேண்டும்.

2. டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு தனியான அணியை உருவாக்க வேண்டும். ஒருநாள் வீரர்களை எடுக்க கூடாது. டெஸ்ட் வீரர்கள் T20 ஆடக் கூடாது. அதற்கான வருமானத்தை BCCI ஈடு செய்ய வேண்டும். இங்கிலாந்து வாரியம் அப்படித்தான் செய்கிறது.

கருத்துகள்

Jana இவ்வாறு கூறியுள்ளார்…
இதுவும் காரணங்களில் ஒன்று தானே அபிலாஷ். இதுவே ஒரே காரணமல்லவே. டிராவிட் லக்ஷ்மன் சச்சின் கங்குலி போன்றோர் ஒரு நாள் போட்டியிலும் திறம்பட செயல்பட்டார்கள். அதற்க்கு முந்தய தலைமுறை ஒரு நாள் போட்டியிலும் டெஸ்ட் போட்டியை போல விளையாடினார்கள். இப்போது எல்லா ஆட்டங்களிலுமே டி20 மனநிலை வந்து விட்டதற்கு காரணம் குறைந்த டெஸ்ட் போட்டிகளும் நிறைய லிமிடெட் ஓவர்ஸ் ஆட்டங்களும்.விதிவிலக்கு சில மட்டையாளர்கள் குறிப்பாக தென்னாப்பிரிக்க டிவில்லர்சும் டுயுப்லேசியும். சிலர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட டி20 விளையாட்டை தவிர்க்கின்றனர். பேராசை கொண்ட கிரிக்கெட் வாரியத்தை நாம் வைத்து கொண்டு வீரர்களை குறை சொல்ல ஒன்றுமில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...