Skip to main content

புத்தரும் அவர் மனைவியும்


நேற்று அண்ணா நூலகம் போனேன். தமிழ் நூல்கள் ரெண்டாவது நிலையில். நான் தவறுதலாய் மூன்றாவது நிலைக்கு போய் விட்டேன். அங்கே தத்துவ நூல்கள் இருக்கும். சரி படிப்போமோ என தேடி எடுத்தேன். புத்தர் பற்றின மூன்று புத்தகங்கள். அதில் ஒன்று புத்தரின் வாழ்க்கையின் கதைகள். சின்ன நூலாய் அழகாய் இருந்தது. எழுதியவர் பெயர் சின்னதாய் கீழே போட்டிருந்தார்கள். கவனிக்கவில்லை. உள்ளே மிக அழகான படங்கள் இருந்தன. வழவழ தாள்கள். கெட்டி அட்டை. இங்கிலாந்தில் பதிப்பித்திருக்கிறார்கள். வெள்ளைக்காரர்களுக்கான நூல் என நினைத்துக் கொண்டேன்.
போக போக மொழி இவ்வளவு கவித்துவமாய் கூர்மையாய் இருக்கிறதே என நினைத்தேன். அதனோடு ஒரு அபாரமான சரளத்தன்மையும். பின்னட்டையை பார்த்தேன். ஓஷோவின் ஒரு மேற்கோள். ஓஷோவை ஏன் போட்டிருக்கிறார்கள் என முன்னட்டையை கவனமாய் பார்த்தால் ஓஷோவின் நூல் அது. அட!

ஆனால் ஓஷோவின் வழக்கமான இந்திய பதிப்புகள் போல் அல்லாது நன்றாக எடிட் செய்திருக்கிறார்கள். பொதுவாக ஓஷோவின் நூல்கள் அவர் பேசியதன் நேரடி நூல் வடிவமாய் இருக்கும். இதன் ஒரு பிரச்சனை வளவள தன்மை. ஒன்றையே திரும்ப திரும்ப கூறுவார். யாரோ காது பக்கத்தில் நின்று தம்புரா சகிதம் ஏதோ ஒரு மந்திரத்தை உச்சரிப்பது போல் சதா கொய்ங் என்று இருக்கும். ஆனால் இந்த நூலை ஓஷோ எழுதினது போல் கச்சிதமாக வந்துள்ளது. அந்தளவுக்கு நல்ல எடிட்டிங்.
வழக்கமாய் நாம் அறிந்த புத்தர் கதைகள் தாம். மிகவும் நெகிழ வைத்தது இரு கதைகள். உன்னதமான இலக்கியத்தின் உயரத்தை தொடும் கதைகள். இதில் ஓஷோவின் தனித்துவமான அவதானிப்பும் நுண்ணுணர்வும் தெரிந்தது.
அதற்கு முன் சில குட்டி விசயங்கள். புத்தர் பிறந்ததும் மொத்த பிரபஞ்சமும் குதூகலிக்கிறது. வழக்கமாய் யாரையும் பார்க்க விரும்பாத, யாருடனும் பேசாத ஒரு 120 வயது துறவி இமையத்தில் இருந்து ஓடோடி வந்து ஒரு வயதான அக்குழந்தையை பார்த்து போகிறார். அப்போது ஓஷோ சொல்கிறார்: 120 வயதுகள் ஒரு வயதை வந்து சந்திக்கிறது. ஆனால் இங்கு இரண்டுமே ஒன்று தான். இருவருக்கும் வயது வேறுபாடுகள் இல்லை என்று. அது போல் எப்படி புத்தரின் பிறப்பை உலகமும் அதிலுள்ள பல உயிர்களும் 120 வயது சாமியாரும் உள்ளுக்குள் உணர்ந்து ஆனந்தம் கொள்கிறார்கள் எனக் கூறும் போது இந்த உணர்தல் மிக இயல்பானது என்கிறார். அதாவது நம் மூளையை கொஞ்சம் கழற்றி வைத்து உலகைப் பார்த்தால் காலம் இடம் சார்ந்த வேறுபாடுகள் கடந்து பல உண்மைகள் தெரியும். ஏனென்றால் இந்த உலகின் அத்தனை ஜீவன்களும் ஜீவனற்ற பொருட்களும் ஒரே பிரக்ஞையின் பகுதி தானே. அப்பிரக்ஞையின் ஒரு மூலையில் புத்தன் தோன்றும் போது இன்னொரு மூலையில் இருக்கும் ஒருவனுக்கு தன் உடலை யாரோ ஸ்பரிசிக்கிற உணர்வு ஏற்படத் தான் செய்யும். அவன் உடனே உணர்வான். மொத்த பிரபஞ்சமும் ஒரு உடல். இப்படி யோசிப்பதில் ஒரு பைத்தியக்காரத்தனம் உள்ளது, ஆனால் பைத்தியக்காரத்தனத்தில் தான் உண்மை உள்ளது என்கிறார் ஓஷோ. ஓஷோ ஜென் தத்துவத்தை தான் இங்கு பேசுகிறார். ஆனால் பேர் குறிப்பிடாமல் அதன் ஒளியில் புத்தரை விளக்குகிறார்.
புத்தர் சாமியாராகாமல் இருக்கும் பொருட்டு அவரது அப்பா அவருக்கு இரண்டு மாளிகைகள் கட்டி அதில் தங்க வைத்து எந்த துக்கமும் அறியாமல் பார்த்து கொள்கிறார்கள். இப்படி 28 வயது வரை அவர் பாதுகாக்கப்படுகிறார். ஆனால் இப்படி செய்வதன் மூலம் அவர் புத்தரை வாழ்வின் துக்கங்களை சந்திக்கும் வண்ணம் மிக தீவிரமாக முடுக்கி விடுகிறார். ஏனென்றால் திடீரென ஒரு நாள் துக்கத்தை, மரணத்தை, அழிவை பார்க்கிற போது அவரது மனம் வெடித்து விடுகிறது. நிறைய பேருக்கு காமம் இப்படி வாழ்வில் ஒரு நாள் பலூன் போல வெடிக்கும். எதையொன்றை பார்க்காமல் தவிர்க்கிறோமோ அது ஒருநாள் நம் கண்முன் பிரம்மாண்டமாய் வெடித்து பூதாகரமாய் தோன்றும். நாம் அதற்கு பின் கண்மூடிக் கொள்ளவே முடியாது. அதனால் தான் புத்தர் சட்டென தன் அரண்மனையை துறந்து உண்மையை தேடி தீவிரமாய் பத்து வருடங்கள் முயல நேர்கிறது. அல்லாவிட்டால் இன்னும் பொறுமையாய் இயல்பாய் உண்மையை தேடி சென்றிருப்பார். இப்படி ஓஷோ விளக்குகிறார். அபாரமான அவதானிப்பு இது.
இறுதியாக அந்த ரெண்டு கதைகள். ஒன்று புத்தருக்கு ஞானம் வருவது பற்றி. நாம் பொதுவாய் புத்தர் போதி மரத்தின் கீழ் அமர்ந்திருக்கையில் திடீரென ஞானம் வந்ததாய் கேள்விப்பட்டிருப்போம். அதெப்படி மரத்தின் கீழ் அமர்ந்தால் ஞானம் வரும் என நான் கூட யோசித்திருக்கிறேன். ஓஷோ இந்த கதையை மறுக்கிறார். ஒருநாள் புத்தர் வழக்கம் போல் ஒரு சின்ன ஆற்றில் குளிக்க போகிறார். பத்து வருடங்களுக்கு மேலான கடும் தியானம், யோகம், விரதங்களால் அவர் உடல் மிகவும் பலவீனப்பட்டு போயிருக்கிறது. திடீரென ஆற்றில் வெள்ளம் அதிகமாக அவர் ஒழுக்கில் மாட்டி தப்பிக்க முடியாமல் அல்லாடுகிறார். மிகவும் சிரமப்பட்டு அவர் கரையை வந்து சேர்கிறார். அப்போது அவருக்கு சட்டென படுகிறது நாம் இப்படி நம் உடலை தேவையின்றி வருத்தி பலவீனமாக்கி வைத்திருக்கிறோமே என. அப்போது தான் அவருக்கு ஞானம் பிறக்கிறது. அந்த சின்ன நொடியில் அவருக்கு புரிதல் கிடைக்கிறது: நாம் எதையும் தேடிப் போக வேண்டியதில்லை. அதன் பாட்டுக்கு விட்டு விட தெரிந்தாலே நாம் விடுதலை ஆகிடுவோம் என. நம் பிரக்ஞையை, நம்முடைய பல்வேறு எண்ணங்களை விட்டு விட வேண்டும். அவற்றை அழிக்க வேண்டியதில்லை. ஒரு குழந்தையை விளையாட அனுமதிப்பது போல் விட வேண்டும். அதேவேளை குழந்தையை கண்காணிப்பது போல் நம்மை கண்காணிக்கவும் வேண்டும். மனதை தயக்கமின்றி எதிலும் ஈடுபடுத்தலாம். ஆனால் மனம் ஈடுபடுவதை இன்னொரு புறம் விலகி நின்று கவனிக்க வேண்டும். ஒருவித இரட்டை பிரக்ஞை இது. பட்டம் விடுவது போல். பட்டம் வானில் பறந்து கொண்டிருக்கும் அதன் பாட்டுக்கு, ஆனால் நூல் நம் கையில் இருக்கும். பட்டத்தை பூட்டி வைக்கவும் தேவையில்லை. ஒரேயடியாய் அறுக்கவும் தேவையில்லை. அது தான் உண்மையான விடுதலை. அப்போது நாம் எதையும் செய்யலாம். பாவமோ புண்ணியமோ எதிலும் நாம் இல்லாது இருக்க கற்றால் அது பாவமோ புண்ணியமோ அல்லாது ஆகும். இன்னும் சாதாரண மொழியில் சொன்னால் ஒருவன் நன்றாக சாப்பிடலாம், சம்போகம் செய்யலாம், வேலைக்குப் போகலாம். ஆனால் நூலை நன்றாக விட்டு ஒரு பட்டம் போல் இந்த அனுபவத்துள் பறக்க கற்க வேண்டும். இது தான் புத்தரின் ஞானம்.
தனது ஞானத்தை தக்க வைக்க முதலில் உடலை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார். ஒரு மரத்தின் கீழ் போய் உட்கார்கிறார். அந்த ஊரில் ஒரு பெண் தன் குழந்தையின் உடல் நலனுக்காய் ஒரு நேர்ச்சை செய்திருக்கிறார். அதற்காய் சாமிக்கு படையல் பண்ண மரத்தடிக்கு வர அங்கு புத்தரை பார்த்ததும் தான் கொண்டு வந்த இனிப்புகளை அவருக்கு படைக்கிறாள். புத்தர் முதன்முறையாக எந்த குற்றவுணர்வும் இன்றி மன அலைகழிப்பும் இன்றி இனிப்பை உண்கிறார். அன்றிரவு மிக அமைதியாய் கனவுகள் இன்றி தூங்குகிறார். அது தான் புத்தர். ஒரு புத்தன் அமைதியாக உண்ணவும் அமைதியாக தூங்கவும் கற்கிறான். அவன் ஓம் கிரீம் சொல்லி யாகம் வளர்க்க வேண்டியதில்லை. இதைத் தான் அவர் போதிக்க நினைக்கிறார்.
அடுத்த கதை. புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார். மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”
புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார். மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார். அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள். அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?”
புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”

இந்த இடத்தைப் பற்றி ஓஷோ எழுதும் போது ஒரு உன்னதமான கவிதையை படிப்பது போல் இருந்தது. ஞானம் புத்தரில் மட்டுமல்ல அந்தப்புரத்தில் அன்றாட விசயங்களை பார்த்து வாழும் ஒரு சாதாரண பெண்ணிடமும் இருந்திருக்கிறது பாருங்கள். புத்தர் அதுவரை கண்டடைந்ததைத் தான் அவரது மனைவி ஒரே கேள்வியில் சுருக்கமாய் கொண்டு வருகிறார்.

Comments

Saravanakumar said…
புத்தர் ஒரு தீர்கதரிசி என்பது போல் இந்த கதைகள் சொல்லுகின்றன.
ஏனென்றால் , புத்தர் பிறக்கும்போதே ஒரு துறவி ஆவார் என்பதை இந்.த உலகம் அறிந்துள்ளதாகவும் , ஒரு துறவி அந்த குழந்தையை பார்க்க வந்ததாகவும் சொல்கிறது.

ஆனால், என் எண்ணத்தில் புத்தர் நம்மை போல ஒரு மனிதர் தான் . தன்னுடைய விடாமுயற்சியானால் இறை நிலையை அடைந்தார்.
அவ்வாறு எல்லா மனிதர்களும் அடைய வேண்டும் என்று நினைத்தார். அதையே தன் மறைவு வரையில் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

இயேசு , முகம்மது நபி, மகாவீரர் , போன்றவர்களும் இதையே செய்தனர். காலம் செல்ல செல்ல அவர்கள் கூறிய வற்றில் உள்ள உண்மைகளை விடுத்தது , அதில் உள்ள சடங்குகளை பெரிதாக மக்கள் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...