முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெருமாள் முருகன் சர்ச்சை: யார் துரோகி?


இன்று நான் பங்கேற்ற சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சியில் சினிமா தணிக்கை, சர்ச்சை, பெருமாள் முருகன் பிரச்சனை ஆகியவை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பெருமாள் முருகன் ஏன் தனக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்தும் தொடர்ந்து போராடாமல் பின்வாங்கினார் எனக் கேட்டார். இது குறித்து ஒரு விவாதம் இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. தஸ்லிமா நஸ்ரின் வேறு பெருமாள் முருகன் தேவையில்லாமல் பயந்து பின்வாங்கியதை கண்டித்து டிவிட்டரில் எழுதியதாக ஒரு சேதி பரவி உள்ளது. இது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. எழுதப் போவதில்லை எனும் அவரது அறிக்கை தோல்வியை ஒப்புக் கொள்ளும் செயல்பாடா? அது தன் ஆதரவு அமைப்புகளுக்கு அவர் செய்த துரோகமா? மேலோட்டமாய் இந்த பின்வாங்கல் ஒரு துரோகம் போல் தோன்றினாலும் அடிப்படையில் பிழையான வாதம் இது.

இரண்டு விதமான போராட்டங்கள் உள்ளன. தனிப்பட்ட போராட்டம், பொதுமக்கள் நலனுக்கான போராட்டம். தனிப்பட்ட போராட்டங்களின் போது வெளிஆதரவு இருந்தாலும் கூட அதிலிருந்து பின்வாங்கும், அதை பாதியில் கைவிடும் உரிமை தனிநபருக்கு உண்டு. அது துரோகம் அல்ல. ஆனால் பொது பிரச்சனைக்கான போராட்டத்தில் அப்படி அல்ல. முள்ளிவாய்க்காலின் போதான கலைஞரின் மௌனம் ஒரு துரோகம். ஏனென்றால் அதில் ஒரு பொது பிரச்சனையும் பொது கொள்கை நிலைப்பாடும் சம்மந்தப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட போராட்டங்கள் அப்படி அல்ல. ஒரு பெண் தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்காக போராடுகிறாள் எனக் கொள்வோம். எப்போது வேண்டுமானாலும் தன் போராட்டத்தை அவள் கைவிடலாம். தனிப்பட்ட நெருக்கடி, இயலாமை காரணமாய் வழக்கை வாபஸ் வாங்கலாம். சமரசமாக போகலாம். அப்போது அதுவரை அவரை ஆதரித்து வந்த பெண்ணிய அமைப்புகள் அவரை துரோகி என அழைக்க முடியாது. ஏனென்றால் அவருடையது ஒரு தனிப்பட்ட போராட்டம். என்னதான் பொது ஆதரவு இருந்தாலும் அது பொதுப் போராட்டம் அல்ல. ஐரோம் ஷர்மிள ஒருமுறை தான் காதலித்து மணம் புரிந்து குடும்பமாக வாழ விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவர் தன் உண்ணாவிரதத்தை முடிக்க விடாதபடி அவரது ஆதரவாளர்கள் சிலர் தடுப்பதாக கூறுகிறார்கள். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எப்படி ஒரு தனிநபர் போராட்டம் பொது அமைப்புகளால் ஹைஜேக் செய்யப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். பெருமாள் முருகனின் நாவல் சர்ச்சையில் அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்க முயலும் போது நாமும் அவரது தனிப்பட்ட பிரச்சனையை ஒரு பொது இலக்குக்காக ஹைஜேக் பண்ணவே முயல்கிறோம். அது நியாயம் அல்ல.

துரோகத்தை நாம் இப்படி வரையறுத்துக் கொள்ளலாம். ஒருவரது பின்வாங்கல் பிறரை பாதிக்குமானால் அது துரோகம். ஆனால் பெருமாள் முருகன் விசயத்தில் அவரே பாதிக்கப்படுபவராக இருக்கிறார். பிறர் அல்ல. அவரது முடிவு அவரைத் தான் பாதிக்கிறது. பிறரை அல்ல. பாதிக்கப்படுபவர் யார் என்பது தான் துரோகத்தை தீர்மானிக்கிறது. பெருமாள் முருகன் தனக்குத் தானே துரோகம் செய்ய இயலாது. அதனால் அவர் துரோகி அல்ல.

கருத்துகள்

வில்லவன் கோதை இவ்வாறு கூறியுள்ளார்…
சொந்த ஊர் பெண்களை இழிவுபடுத்தி எழுதியதை தாங்கிப்பிடிக்க வேண்டுமென்கிறீர்களா. ஏன் இப்படி குழப்புகிறீர்கள்
வில்லவன்கோதை
Anbu இவ்வாறு கூறியுள்ளார்…
“பிள்ளையில்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாயிருந்தால் அப்போது அந்த ஸ்திரீ தன் கணவர், மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி ஆகியவர்களுடன் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டு பண்ண வேண்டியது”(மனு9:59)
“கணவன் புத்திரனில்லாமல் இறந்து போனால் மனையாள் கணவனின் தோத்திரமுள்ள ஒரு புருஷனிடத்தில் விதிப்படி புத்திரனைப் பெற்றுக் கொண்டு, அப்புத்திரனுக்குக் கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்துவிட வேண்டும்”(மனு:9:190)
மேற்கண்ட வசனங்கள் மநுதர்மத்தில் சொல்லப்பட்டவை. பெருமாள்முருகனின் மாதொருபாகனை எதிர்ப்பவர்கள் - இதை என்ன செய்யப்போகிறார்கள்.... மநுதர்மத்தையும் தீயிட்டுக் கொளுத்த முன்வருவார்களா - நண்பர்களே?
வில்லவன் கோதை இவ்வாறு கூறியுள்ளார்…
இன்றைய சூழலில் தனிமனிதன் ஏற்கத்தகாதது எதையுமே தீயிட்டு கொளுத்தவேண்டாம். தவிர்த்துவிடலாம். வில்லவன் கோதை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...