Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தமிழக அரசியலில் தலைமை வெற்றிடம்


தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத விசித்திர சூழல் உருவாகி உள்ளது. ஜெயயலிதாவின் உடல்நலக் கேடு, கருணாநிதியின் முதுமை, அதிமுகவுக்குள் மாற்று சக்திகளின் எழுச்சி, தி.மு.கவில் ஸ்டாலின் தன் அப்பாவையே எரிச்சல்பட வைக்கும் அளவு வளர்ந்துள்ளது அடிப்படையில் இங்குள்ள் அரசியல் தலைமையை பலவீனமாக்கி உள்ளது. எம்.ஜி.ஆர் உடல் நலமற்று, கட்சியில் தன் பிடிப்பை இழந்த கட்டத்திலும் இங்கு மாற்றுத் தலைவராக திமுகவில் கருணாநிதி இருந்தார். இன்று ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் மாற்றாக விஜயகாந்தும் ஸ்டாலினும் மட்டுமே உள்ளார்கள்.

விஜயகாந்துக்கு அரசியல் நிர்வாக அனுபவமோ ஒரு தலைவராக ஆளுமையோ இல்லை. ஸ்டாலின் இதுவரை தலைமையை ருசிக்காதவர். மக்கள் மத்தியில் ஒரு தலைவராக அவரது செல்வாக்கு என்னவென நமக்கு தெரியாது.
இந்த சூழலில் தான் மக்கள் நலக் கூட்டணி மூன்றாவது அணியாக இத்தேர்தலில் களமிறங்குகிறது. வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கை அது பிரிக்கலாம் என கணிக்கப்படுகிறது. முதன்முறையாய் திமுக மூன்றாம் அணியை ஒரு தலைவலியாக கருதுகிறது. விஜயகாந்த் போன்ற ஒரு மூன்றாம் நிலை தலைவரை திமுகவும் அதிமுகவும் போட்டியாளராக யோசித்துப் பார்க்கும் என்பதே சில வருடங்களுக்கு முன் யாராவது சொன்னால் நகைச்சுவையாய் கருதப்பட்டிருக்கும். போன தேர்தலில் தெமுதிக 29 இடங்களை வென்றது திமுகவின் படுதோல்வியின் பின்னணியில் முக்கியமானது. ஏனென்றால் இதற்கு முன் ஒரு திராவிட கட்சி தோல்வி அடைந்தால் மற்றொரு திராவிட கட்சி முழுவெற்றி பெறும். திராவிட கட்சிகள் மாறி மாறி முன்னிலை பெறும். ஆனால் திராவிட கட்சிகளில் ஒன்றை முதன்முறையாய் தெமுதிக பின்னணியில் தள்ளியது. தி.மு.கவை மட்டுமல்ல விடுதலை சிறுத்தைகள், பா.ம.க, மற்றும் இடதுசாரிகளின் இடத்தை காலி செய்தது. தி.மு.கவும் இத்தேர்தலில் மீண்டு வர உள்ள வாய்ப்பும் இவர்களுக்கு இப்போதைக்கு இல்லை. இந்நிலையில் தான் தெமுதிகவை தன் கூட்டணியில் சேர்க்க தி.மு.க மிகவும் பிரயத்தனம் செய்ய வேண்டியாகியது.
ஆனால் அதே நேரம் இச்சூழல் முழுக்க போன தேர்தலின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் உருவானது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தேர்தலில் தெமுதிக தன்னை தக்க வைக்கும் என்பதற்கும் எந்த உறுதியும் இல்லை. ஒருவேளை இத்தேர்தலுடன் திமுகவும் அதிமுகவும் தம்மை வலுப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புண்டு.
ஆனால் உண்மையான பிரச்சனை வேறு. அதிமுக கடந்த ஐந்தாண்டுகளில் செய்த பிரம்மாண்ட ஊழல்கள், வெள்ளத்தின் போது அதன் நிர்வாகம் திணறிய விதம், ஜெயலலிதா மக்களையோ மீடியாவையோ சந்திப்பதை முடிந்தவரை தவிர்ப்பது இங்கு கிட்டத்தட்ட ஆட்சியில் எந்த கட்சியுமே இல்லையோ எனும் ஐயத்தை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
திமுகவை பொறுத்தவரையில் கட்சியை புதுப்பித்து மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கை பெற அவர்கள் ஸ்டாலினை தலைவராக முன்னிறுத்துவது தான் ஒரே வழி. ஆனால் கருணாநிதிக்கு அதிகார ருசி இன்னும் தீரவில்லை. அவர் தன் மகனையே தனக்கு போட்டியாக நினைக்கிறார். கருணாநிதி தலைவராய் நீடிப்பதன் முக்கிய சிக்கல் அவரது பிற வாரிசுகளின் அதிகார துஷ்பிரயோகம் தான். ஒருவேளை அவர் அடுத்த முதல்வர் ஆகிறார் என்றால் கனிமொழிக்கு ஒரு முக்கிய பதவி கொடுப்பார். அழகிரியையும் மன்னித்து ஏற்றுக் கொள்வார். மாறன் சகோதரர்களும் வேட்டைக்கு கிளம்பி விடுவார்கள். இந்த மூவரையும் அதிகார களத்தில் இருந்து வெளியேற்றி தி.மு.கவை ஒரு கட்டுக்கோப்பான கட்சியாக மாற்றுவதற்கு சிறந்த வழி ஸ்டாலினை தலைவராக்கி முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது மட்டுமே. வீட்டில் ஒரு பூனையிருந்தால் எலிகளின் ராஜ்ஜியம் தானே அடங்கி விடுமே. ஆனால் கருணாநிதி பூனையை கட்டிப் போட்டு விட்டு எலிகள் உருவாக்கும் களேபரத்தில் தன் அதிகாரத்தை தக்க வைக்க முனைகிறார்.
அதிமுகவுக்குள் ஜெயலலிதாவுக்கு போட்டித்தரப்பாக முன்னர் சசிகலா இருந்தார். பின்னர் இப்போது பன்னீர் செல்வத்தின் குழுவினர் இருக்கிறார்கள். ஜெயலலிதாவை பொறுத்தமட்டில் முக்கிய தலைவலி இவர்களே. உடல்நிலை, ஊழல் வழக்குகள் வேறு அவரை பலவீனப்படுத்தி உள்ளது. இத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் இந்த எதிர் அதிகார மையங்களை முழுக்க நசுக்கி விட்டு மீண்டும் முழுமுதல் தலைவராக முடியும். சராசரி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கூட அது கட்சிக்குள் தலைமைக்கு எதிரான கலகங்களை இன்னும் தீவிரப்படுத்தும்.

அடுத்த ஐந்து வருடங்களில் தமிழகத்தின் தலைமை மையங்கள் எப்படி உருக்கொள்ளப் போகின்றன என்பது சுவாரஸ்யமான கேள்வி. காத்திருந்து பார்ப்போம்!
நன்றி: வெற்றிவேந்தன், ஏப்ரல் 2016

Comments

Selvadurai said…
நடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும்தான் இந்த தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பவர்கள். இந்த நடுநிலை வாக்காளர்கள் பெரும்பாலும் படித்த மற்றும் விபரம் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் விஜயகாந்தை முதல்வராக ஏற்க மாட்டார்கள். இனவாதம் பேசும் சீமானின் கருத்து தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எடுபடாது. களத்தில் இருக்கும் முதல்வர் வேட்பாளர்களில் படித்த மற்றும் விபரம் அறிந்த நடுநிலை வாக்காளர்களத் திறமையான தன் பரப்புரைகளால் கவரக்கூடியவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு அன்புமணி மட்டுமே. சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு பெற்றுவரும் இவரின் பெருகிவரும் செல்வாக்கினை யாரும் புறக்கணிக்க முடியாது. பா.ஜ.க. வின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை மறைத்து எப்படி மோடி முன்னிறுத்தப்பட்டாரோ அதைப்போன்றே இவரும் பா.ம.க. வின் சாதிக்கட்சி பிம்பத்தை மாற்ற முன்னிலைப் படுத்தப்படுகிறார். எது எப்படியாயினும் தமிழ் நாட்டின் தற்போதைய அவசியத்தேவை ஒரு படித்த விவரமான இளைஞர் ஒருவரின் தலைமையே. அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இவைகளுக்கு மாற்று வேண்டும் என்கின்ற கருத்து பரவலாக பேசப்படும் இத்தருணத்தில் இதற்குத் தகுதியான நபர் இவர் ஒருவர் மட்டுமே என்பது எனது கருத்து. இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஒரு முறையேனும் மாறி வாய்ப்பளித்துக் காட்டினால்தான் ஆளுபவர்களுக்கு தவறு செய்யாதபடி நெஞ்சில் ஒரு பயம் இருக்கும்.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...