முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பா.ஜ.கவின் பிளவுபடுத்தி ஆளும் காலனிய சூழ்ச்சி

பா.ஜ.க இவ்வளவு விரைவில் ஒ.பி.எஸ்ஸை கைவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவருக்கும் மத்திய அரசுக்குமான உறவில் ஏதோ ஒரு பிசகு நேர்ந்திருக்கிறது. ஒ.பி.எஸ்ஸின் புகழ் ஒரு பக்கம் உயரும் போது பா.ஜ.கவினர் தீபாவை முறுக்கேற்றி முன்னுக்கு கொண்டு வர துவங்கினர். அப்போதே பா.ஜ.கவின் பிளவு படுத்தி ஆளும் காலனிய உத்தியை கவனித்தேன். ஆனாலும் இவ்வளவு சீக்கிரம் அவரை தெருவில் விடுவார்கள் என நான் நினைக்கவில்லை.

மத்திய அரசு நினைத்தால் சசிகலா குழுவினரின் அடித்தளத்தை பெயர்க்க ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் பா.ஜ.கவின் தேவை அத்தரப்பை அழிப்பது அல்ல. கட்டுப்படுத்துவது. அதாவது பூனையையும் சீண்டி விட வேண்டும்; எலியையும் பாதுகாக்க வேண்டும். சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பியதுடன் பா.ஜ.கவின் முதல் தேவை ஓரளவு நிறைவேறி விட்டது. பூனைக்கு அது மணி கட்டி விட்டது.
 தனக்கு எதிராக தீர்ப்பு வருமென சசிகலாவுக்கு நிச்சயம் முன்பே தெரிந்திருக்கும். அதனால் தான் அவர் அவசரமாய் ஒ.பி.எஸ்ஸை பதவியில் இருந்து இறக்கினார். எம்.எல்.ஏக்களை தன் ஆணைக்கு பணிய வைத்தார். தன்னால் நிச்சயம் முதல்வர் ஆக முடியாது என அவர் அறிவார். ஜெயிலில் இருக்கப் போகிற அவர் ஏன் அவசரமாய் ஆட்சியை கைப்பற்ற முயல வேண்டும்? இங்கு தான் சூட்சுமம் உள்ளது. அதிகாரத்தில் இருப்பது சசிகலாவை பொறுத்த மட்டில் அவரது பெரும் சொத்துக்களை காப்பாற்றவும், வழக்கில் இருந்து ஏதாவது ஒரு வழியில் தப்பிக்கவும் அவசியம். சசிகலா கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுடன் தங்கி இருந்து வியூகங்கள் வகுக்கும் போது தம்பிதுரை போன்றோர் தில்லியில் மத்திய அரசின் அதிகார மையத்தை நெருங்க முயன்று கொண்டிருந்தனர். சீராய்வு மனு தாக்கல் செய்தனர். ஜெயிலுக்கு போகும் முன்பு அவர் எம்.எல்.ஏக்களிடம் “நான் மூன்று மாதங்களில் திரும்புவேன்” என சொல்லி விட்டு சென்றார். இதன் பொருள் என்ன? அவருக்கு இந்த நம்பிக்கை எங்கிருந்து வருகிறது? மத்திய அரசுடனான பேரம் படிந்து விட்டது என்பதில் இருந்து தான் இந்த தன்னம்பிக்கை வருகிறது. அதனால் தான் எடப்பாடியார் முதல்வரானதும் மோடி அவரை அழைத்து வாழ்த்து தெரிவிக்கிறார். வெங்கய்யா நாயுடு தன் ஆசிகளை அளித்து “மத்திய அரசுடன் இணக்கமாக இருங்கள்” என ஆலோசனை தெரிவிக்கிறார். இதெல்லாம் ஒன்றை காட்டுகிறது. இங்கு அரங்கேறிய எதுவும் பா.ஜ.கவின் கையை மீறி நடந்ததல்ல. எது நடக்க வேண்டுமே அதுவே நடந்தது!
மோடியும், வெங்கய்யா நாயுடுவும் சசிகலா குழுவினருடன் கைகுலுக்குகிறார்கள் என்றால் ஹெச்.ராஜா ஒ.பி.எஸ்ஸுக்கு அரைமணி நேரம் ஆறுதல் கூறுகிறார். இன்னொரு பக்கம் குருமூர்த்தி போன்றோர் தீபாவுக்கு ஊக்கமளிக்கிறார்கள். பா.ஜ.கவின் திட்டமே இவ்வாறு அதிமுகவை பல்வேறு குழுக்களாய் பிளந்து அதிகார சமநிலையின்மையை உருவாக்குவது தான். ஜெயிலில் உள்ள சசிகலா மோடியின் பெருவிரலின் கீழ் இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய இடைஞ்சல்களை மோடி அளித்தும் அவர் ஒரு சொல் கூட மோடியை பழிக்கவில்லை. பதிலுக்கு திமுக தமக்கு எதிராய் சதி செய்வதாய் பழித்தார். இது என்ன அபத்தம்? உண்மையான வில்லன்களை விட்டு விட்டு ஏன் வேடிக்கை பார்ப்பவரை நோக்கி அவர் சாட வேண்டும்? ஏனென்றால் அவருக்கு மோடியின் தயவு அவசியம். (இன்னொரு பக்கம் ஒ.பி.எஸ்ஸை ஆதரிக்க வேண்டி உள்ள திமுகவும் பா.ஜ.கவை சாடுவதை தவிர்க்கிறது. இப்படி தமிழகத்தில் இரு பெரிய கட்சிகளுமே அம்மணமாய் ஊர்வலம் போகும் ராஜாவை பார்த்து மௌனிக்கிறார்கள்.)

 இவ்வளவு எம்.எல்.ஏக்களை சசிகலா கூவத்தூரில் குவித்தது ஆட்சியை கைப்பற்றும் வெறியில் மட்டும் அல்ல. அவரது முக்கிய நோக்கம் தன்னை காப்பாற்றுவது. அதற்கு பேரம் பேச அவருக்கு அதிகாரம் வேண்டும். அதற்கு இந்த எம்.எல்.ஏக்கள் வேண்டும். ஒருவேளை அவர் ஆரம்பத்திலேயே கட்சி அதிகாரத்தை கைப்பற்றாமல் ஒதுங்கி இருந்தால் இந்த வழக்கில் அவரை முழுக்க நசுக்கி இருப்பார்கள். இப்போது நிலைமை வேறு. மத்திய அரசு கொடுத்த கடுமையான அழுத்தத்திற்கும் மசியாமல் அவர் ஒ.பி.எஸ்ஸை கவிழ்த்து விட்டார். அக்னி பரீட்சையில் தேறி விட்டார். அதனால் தான் ஆளுநர் இப்போது அவர் தேர்வு செய்த நபரை முதல்வராக பதவி பிரமாணம் செய்வித்திருக்கிறார். இவ்வளவு காலம் பொறுத்த ஆளுநர் இன்னும் சில வாரங்கள் பொறுத்திருக்கலாமே? எம்.எல்.ஏக்களின் ஒற்றுமையை உடைத்திருக்கலாமே? ஆனால் ஆளுநரின் திடீர் முடிவு பா.ஜ.கவுக்கும் சசிகலாவுக்குமான ஏதோ ஒரு பேரம் முடிவுக்கு வந்து விட்டதை காட்டுகிறது. ஒ.பி.எஸ் இனி தேவையில்லை எனும் பா.ஜ.கவின் முடிவையும் காட்டுகிறது.
இந்த ஆட்டத்தில் சசிகலா அடைந்த பலன் என்ன என்பது சில மாதங்களில் தெரிந்து விடும். பா.ஜ.க அடைந்த பலன்? தொடர்ந்து தலைமையை பலவீனப்படுத்துவதன் மூலம் அதிமுகவின் உண்மையான பாஸ் தான் மட்டுமே என மோடி உணர்த்தி இருக்கிறார். இனி ஒவ்வொரு சிறு அசைவையும் அவர்கள் தில்லியில் கேட்டுத் தான் நடத்த முடியும். இந்த பிடியை வலுப்படுத்த அடுத்து அவர்கள் எடப்பாடியாருக்கும் பல்வேறு நெருக்கடிகளை, போட்டி முனைகளை ஏற்படுத்துவார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் பா.ஜ.க ஒரு குறிப்பிட்ட அதிகார வட்டத்தை ஆதரித்து இன்னொன்றை கைவிடும். அதன் மூலம் அதிமுகவை தொடர்ந்து ஒரு சமநிலையற்ற தடுமாற்றத்தில் வைத்திருக்கும். உண்மையிலேயே அதிமுகவை நினைத்தால் பரிதாபமாய் இருக்கிறது. வரும் ஆண்டுகளில் நமக்கு இன்னும் பல பிரேக்கிங் நியூஸ்கள் வர இருக்கின்றன.

எல்லாம் அவன் செயல்!

கருத்துகள்

syedabthayar721 இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான அலசல் . தாய் இல்லா பிள்ளை கதையாகி விட்டது அதிமுக நிலைமை !!!

M. செய்யது
Dubai

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...