முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிவப்புத் தோலும் பாலியல் தேர்வும்

தருண் விஜய் சர்ச்சையை ஒட்டி சில நண்பர்கள் எழுதியிருந்த விசயம் நாம் எப்படி கறுப்புத் தோல் மீது தாழ்வுணர்வு கொண்டுள்ளோம், அதனாலே சிவப்பான பெண்களை அதிகம் விரும்புகிறோம் என்பது. நாம் எப்போதாவது கறுப்பான பெண்களை பொருட்படுத்தி காதலித்திருக்கிறோமா? கறுப்பான நாயகிகளுக்கு கவனம் கொடுத்திருக்கிறோமா? ஆண்களே தமது கறுப்பு நிறம் குறித்து லஜ்ஜை கொண்டதில்லையா?
ஆனால் நமது பாலியல் தேர்வை நாம் இப்படி எளிமையாக சுருக்க முடியாது என நினைக்கிறேன். பாலியல் தேர்வு இன்னும் சிக்கலானது. கறுப்பை எடுத்துக் கொள்வோம். கறுப்பு ஒரு குறைபட்ட நிலையை சுட்டுகிறது என நம்புகிறோம். சரி. அதனாலே நாம் கறுப்பான பெண்களை விரும்பவில்லை. அதுவும் சரி. இது சரி என்றால் மற்றொரு கேள்வி வருகிறது. ஏன் மேல்சாதிப் பெண்கள் தாழ்த்தப்பட்ட சாதி ஆண்களை விரும்புகிறார்கள்? ஏன் அவ்வளவு போராடி, பெற்றோரை, உறவினரை பகைத்து, ரிஸ்க் எடுத்து “குறைபட்டவராய்” நாம் நம்பும் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன் ஒருவனை ஒரு பெண் காதலிக்கிறாள்? கறுப்பு பற்றி நாம் சொல்வது உண்மையெனில் ஒரு பெண் தன்னை விட மேலான சாதி (என நம்பப்படுகிற) ஆணைத் தானே தேர்வு செய்ய வேண்டும்?

 உதாரணத்துக்கு, சிவப்பான ஆண்கள் அதிகமுள்ள ஒரு சாதியை சேர்ந்த ஒரு பெண் ஏன் கறுப்பான மாற்றுசாதி ஆணை தேர்வு செய்ய வேண்டும்? நமது ”கறுப்பு தாழ்வானது” எனும் லாஜிக்படி அப்பெண் சிவப்பான சொந்த சாதி ஆணைத் தானே காதலிக்க வேண்டும்? எப்படி சொந்த சாதிக்குள் மணக்கிற பெண்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு சாதிக்கு வெளியே காதலிக்கும் பெண்களும் இருக்கிறார்கள்? ராமதாஸ் போன்றோருக்கு புரியாத புதிரே இது தான்.
இன்ன உடல் தகுதி தான் பெண்களை ஈர்க்கிறது என குறிப்பிட்டு சொல்லவும் முடியாது. இரண்டு சாதியிலும் உயரமான ஆரோக்கியமான புத்திசாலியான ஆண்கள் இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு விசயம் தான் பாலியல் தேர்வை தீர்மானிக்கிறது. வித்தியாசம்! நாம் தினம் தினம் சந்திக்கிற மனிதர்களில் இருந்தே சற்றே மாறுபட்டவராய், அதேநேரம் நாம் வழக்கமாய் ஏற்கிற குணநலன்களுடன் அவர் இருக்க வேண்டும். இதற்கு சிறந்த உதாரணங்களாய் மனிஷா கொய்ராலா மற்றும் ஏமி ஜேக்ஸனை சொல்லலாம். மனிஷா மங்கோலிய தோற்றம் கொண்ட நேப்பாளி என்றாலும் இந்திய முக இயல்புகளும் கலந்தவர். முழுமையான மங்கோலிய தோற்றம் கொண்ட ஒரு பெண்ணுக்கு இங்கு, அவர் என்னதான் பேரழகி என்றாலும், நட்சத்திரமாக வாய்ப்பு அமையாது. ஏமி ஜேக்ஸனும் அப்படியே இந்திய சாயல் கொண்ட வெள்ளைக்காரி. நாம் பார்த்து ரசிக்கும் நாயகிகள் நாம் வழக்கமாய் பார்க்கும் பெண்களில் இருந்து சற்றே மாறுபட்டவராய் அதேநேரம் முழுக்க மாறுபடாமல் இருக்க ஆசைப்படுகிறோம். கடந்த ஐம்பது வருடத்தில் தமிழ் சினிமாவிலும் இந்தி படவுலகிலும் கோலோச்சிய நாயகிகளை எடுத்துப் பாருங்கள். படவுலகம் கிட்டத்தட்ட பாராளுமன்றம் மாதிரி பெரும்பாலான மாநிலத்தோருக்கும் பிரதிநுத்துவம் அளித்துள்ளதை பார்க்கலாம். சிவப்பு மட்டுமே ஒரே அளவுகோல் என்றால் ஹெமாமாலினி எப்படி இங்கிருந்து அங்கே சென்று இந்தி ரசிகர்களை வென்றார்? வடக்கே இல்லாத சிவப்பான பெண்களா? தமிழில் என்றால் குண்டான பெண்கள், ஒல்லியானவர்கள், மாநிறமானவர்கள், ஆண் தன்மை கொண்ட பஞ்சாபிப் பெண்கள், மொழுமொழுவென்ற மலையாளிப் பெண்கள் என பலரும் கலந்து தான் தோன்றியிருக்கிறார்கள்.
கேரளாவில் கணிசமான பெண்கள் சிவப்பானவர்கள். ஆனால் சமீப காலங்களில் அங்கே வடக்கிந்திய நாயகிகள் அடிக்கடி தோன்றுகிறார்கள். சிவப்பு தான் அளவுகோல் என்றால் அதே மாதிரி பெண்கள் உள்ளூரிலே இருக்கிறார்களே? ஏன் வடக்கே இருந்து கொண்டு வர வேண்டும்?
சரி, கறுப்பான பெண்கள் என்றுமே அதிக அளவில் சினிமாவில் கோலோச்சியதில்லையே? இதற்கு காரணம் நம் தாழ்வுணர்வு அல்ல. கறுப்பு நம் பொது நிறம் என்பதே. நாம் எப்போதும் திரையில் வழக்கத்துக்கு மாறான இயல்புகளையே பார்க்க விரும்புகிறோம். கறுப்பானவர்கள் மீது நமக்குள்ள வெறுப்பு அவர்கள் அதிகமாய் நம்மைச் சுற்றி காணப்படுகிறார்கள் என்பதே. ஆனால் இது கறுப்பு மீதான ஒவ்வாமை மட்டுமல்ல. நம்மைச் சுற்றில் இருப்பவரிடம் தொடர்ந்து காணும் எல்லா இயல்புகள் மீதும் நமக்கு ஒவ்வாமை ஆழ்மனதில் உள்ளது. நாம் நம்மை கடந்து செல்ல ஏங்குறோம். நமது கலைகள், சினிமா, கற்பனை, அறிவு, இறுதியாய் நம் பாலியல் தேர்வு இவ்வாறு நம்மை மீறிச் செல்ல நமக்கு உதவுகின்றன. மேலும் மாற்று சாதிக்குள் / இனத்துக்குள் ஒருவரை துணையாக தேர்ந்தெடுத்தால் உங்கள் வம்சாவளி ஆரோக்கியமாய் அமையும் என அறிவியல் சொல்கிறது. ஆக சங்கர் தன் ரோபோவுக்கு எமி ஜேக்ஸனை தேர்வு செய்திருப்பது வெறுமனே சிவப்புத் தோல் விவகாரம் மட்டும் அல்ல J


கருத்துகள்

மின் வாசகம் இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான். ஆனால், என்னவோ தாழ்ந்த சாதியினர் கருப்பானோர் என்பது போலவும், மேல் சாதியினர் வெளுப்பானோர் என்பது போலவும் எழுதி உள்ளீர்களே ! ஒன்று தங்களுக்கு நிறக்குருடு இருக்க வேண்டும், அல்லது பல சாதி மக்களோடு புழங்காதவராக இருக்க வேண்டும். தமிழகத்தில் எல்லா சாதியினருக்குள்ளும் கருப்பு, வெளுப்பு, என பல நிறமுடையோர் உண்டு.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர். தாழ்வாக கருதப்படும் ஒன்று மீது ஈர்ப்பு வராது என்பது சரியானால் தாழ்த்தப்பட்டோர் மீது எப்படி மேல் சாதிப் பெண்களுக்கு ஈர்ப்பு வருகிறது என்றே நான் கேட்கிறேன். அதாவது பாலியல் தேர்வின் போது நம் மனம் முழுக்க வேறுவிதமாய் இயங்குகிறது. பொதுப்புத்தியில் உயர்வு தாழ்வு என கருதப்படும் மதிப்பீடுகள் பொருட்படுத்தப்படுவதில்லை. நான் குறிப்பிட்டது ஒரு உதாரணம் மட்டுமே.
மின் வாசகம் இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கள் அன்பான பதிலுக்கு நன்றிகள் சகோதரரே ! உண்மை தான் பாலியல் தேர்வில் எதிர் துருவங்கள் ஈர்க்கும் என்பார்கள். அது உண்மை தான். எதிர் குணமுள்ள மரபணுக்களே ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கும் என்பது உயிரியல். இந்த குணம் நமது ஆழ்மனதுக்குள் இயற்கை அன்னையால் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் நம்மிலிருந்து மாறுப்பட்ட நிறம் குணம் உருவமுடையோர் மீது ஈர்ப்பு நமக்கிருக்கின்றது. அதே சமயம் அந்த மாறுபட்ட நிறம் குணம் உருவமுடையோரிடத்து ஒத்த பண்புகளையும் மனம் எதிர்பார்க்கின்றது. இது சமூகம் விதித்துள்ள திருமணம், என்றில்லை பல காலமாக திருமணம் மீறிய உறவுகளால் கூட கலப்பு நம் இந்திய சமூகத்தில் ஏற்பட்டு வந்திருக்கின்றது. அதே சமயம் அரசியல், அதிகாரம் என்னும் மட்டத்தில் வெண்மை நிறமுடைய அல்லது வெண்மை நிறத்தோர் அதிகம் கொண்ட இனக்குழுக்கள் கருமை நிறத்தோர் அதிகம் கொண்ட இனக்குழுவை நிற அடிப்படையில் இன்றும் அடக்கி தான் வருகின்றது. இந்தியாவில் இருக்கும் பொருளாதார பின்தங்கிய இனக்குழுக்களை ஆழமாக கவனித்தால் அவர்கள் கருமை நிறத்தோர் அதிகம் கொண்டவர்களாகவும், அதிலும் நெக்ராயிடு உருவ சாயல் அதிகம் கொண்டோராகவும் இருக்கின்றனர். இது மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டியது. அதே சமயம் இந்தியா முழுவதுமே மாநிறம் கொண்டேரே எங்கும் விரவி வாழ்கின்றனர். கருமை நிறம் கொண்டோரும், இந்தியா முழுவதும் காணப்படுகின்றனர். தருண் விஜய் அவர்களது தென்னிந்தியர் மட்டுமே கருப்பு உருவம் அதிகம் கொண்டோர் என்ற கருத்து அவர் வட இந்தியாவையே அதிகம் சுற்றி பார்த்திருக்கவில்லை என்பதை காட்டுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...