முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழத் தகுதியற்ற ஊர்

Image result for inflation

பல வருடங்களுக்கு முன்பு “கற்றது தமிழ்” வெளியான போது சுஹாசினி ராமை பேட்டி எடுத்தார். அதில் ராம் இவ்வாறு சொன்னார்: “வரும் சில ஆண்டுகளில் ஓட்டலில் ஒரு கோப்பை காப்பி குடிப்பதற்கு நாம் ஒரு மூட்டை நிறைய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்ல நேரும்.” பணவீக்கம் பற்றி ராம் சொன்ன ஆருடம் மிகையானது என எனக்கு அப்போது தோன்றியது. சமீபத்தில் fullyfilmy யூடியூப் பக்கத்தில் ராமின் பேட்டியில் மீண்டும் இதே விசயத்தை லேசாய் தொட்டுப் பேசினார். பேட்டியாளர்: “சார் உங்களுக்கும் சர்வைவல் பிரச்சனை இருக்கிறதா?”
ராம்: “ஆமாம். அன்றாட செலவுகள், வாடகை எல்லாவற்றையும் சமாளிப்பது இப்போதும் பெரும்பாடு தான். யாருக்குத் தான் சர்வைவல் பிரச்சனை இன்று இல்லை? கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் தான் இருக்கிறது. ஆனால் என்னையும் உங்களையும் போல் இராது. அவர் அளவில் வேற லெவலில் அது இருக்கும். ஆனால் அவருக்கும் இன்று பணப்பிரச்சனை உள்ளது.”

 ஆனால் இப்போது … ராம் சொன்னது உண்மை என எனக்கு இப்போது நிச்சயமாய் தோன்றுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை எனும் உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் கைநிறைய சம்பாத்தாலும் வருட இறுதியில் பணம் சேர்த்து வைக்க முடியாது. சாப்பாடு, துணி, அன்றாடத் தேவைக்கான பொருட்களுக்கே பெரும்பகுதி வருமானம் விரயமாகிறது. ரொம்ப போராடி நீங்கள் சேர்த்து வைத்த பணம் கூட வருடத்துக்கு ஒருமுறை வியாதி வந்து சில வாரங்கள் மருத்துவமனையில் இருந்தால் மொத்தமாய் காலியாகி விடும். ஏனென்றால் கடந்த பத்து வருடங்களில் சின்ன சின்ன பொருட்களின் விலையே பல மடங்கு அதிகமாகி விட்டது. ஐம்பதினாயிரம் இருபதினாயிரம் என மதிப்பிழந்து விட்டது. ஒரு லட்சம் ஐம்பதினாயிரம் ஆகி விட்டது. குறிப்பாக கடந்த சில வருடங்களில் பணவீக்கம் நம் அடிவயிற்றில் பெட்ரோலாக புகுந்து குபுகுபுவென பற்றிக் கொண்டு எரிகிறது.
பணவீக்கத்தை குறைக்க இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் தாம் என்ன எனும் கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். ரூபாய் நோட்டுத் தடையால் நம் தட்டில் விழும் சோற்றின் விலை குறைந்ததா இல்லையா எனும் கேள்வியை நேரடியாய் எழுப்ப வேண்டும். இந்தியர்களின் பிரச்சனையே எதற்கும் எதிர்வினையாற்றாமல் மண்ணாந்தையாய் எப்போதும் இருப்பது தான். இந்திய வாக்காளர்களை எவ்வளவு வேண்டுமானாலும் சித்திரவதை பண்ணலாம். பத்து வருடங்கள் பொறுப்பார்கள். அதன் பின்னர் நிலைமை எப்படி இருந்தாலும் புதுக்கட்சிக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள். ஏதோ முடுக்கி விட்ட எந்திரம் போல் இருக்கிறார்கள் நம் வாக்காளர்கள்.. அந்த நம்பிக்கை தான் பா.ஜ.கவை இப்படி ஆட வைக்கிறது. மோடி மீண்டும் பிரதமர் ஆன பின் இந்த தேசத்தில் நம்மால் மூன்று வேளை சாப்பிட்டு வாடகை கொடுத்து வாழ முடியுமா என எனக்கு இப்போது ஐயம் ஏற்படுகிறது. எனக்கு மட்டுமல்ல, யாரிடம் பேசினாலும் “மீண்டும் மோடியா? ஐயய்யோ” என அலறுகிறார்கள். (ஆனால் தினமும் போட்டு அடிக்கும் குடிகார கணவனை பாதுகாக்கும் மனைவிமார் போல இவர்களே மோடிக்கு மீண்டும் வாக்களித்து கூடுதலாய் தம் வயிற்றில் அடித்துக் கொள்வார்கள் என்பதே உண்மை!)
இந்த தேசம் நாம் வாழத் தகுதியற்றதாய் போய் விட்டது. ஒரு நவீன தாது வருச பஞ்சத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். நகரங்களில் கடைகள் எப்போதும் திறந்திருக்கும். எங்கும் செல்வம் கொழிக்கும். யாராவது பார்களில் குடித்தும் பப்களில் ஆடிக் கொண்டும் இருப்பார்கள். பளபளப்பான கார்கள் வரிசை வரிசையாய் நகரும். ஆனால் மக்களுக்கு சாப்பிட பணம் இருக்காது. குடியிருக்க வீடிருக்காது. தம்மைச் சுற்றி பணத்தை அள்ளி செலவழிக்கும் ஒரு சில மக்களிடம் மட்டும் எப்படி பணம் வருகிறது என வியந்தபடி பெரும்பாலான மக்கள் சாலைகளில் அலைந்து திரிவார்கள். ஒரு பகுதியினரிடம் வீடுகள் இருக்கும். கார் இருக்கும். ஆனால் வங்கியில் கடனை திரும்ப செலுத்த முடியாது திகைப்பார்கள். இருக்கும் ஆனால் இருக்காது என்பது தான் புதிய தாதுவருச பஞ்சமாக இருக்கும்.
இந்த தேசத்தில் இனி இரு தரப்பினர் தாம் வாழ இயலும்:
1)   வெற்றிகரமான வியாபாரிகள்.
2)   வெளிநாடு சென்று பத்திருபது வருடங்கள் நிறைய சம்பாதித்து விட்டு திரும்புகிறவர்கள்.

வேறு எல்லாரும் எலிகளைப் போல் ஓடிப் போய் கடலில் குதிக்க வேண்டியது தான்!

கருத்துகள்

நெல்லைத் தமிழன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த தேசத்தில் இனி இரு தரப்பினர் தாம் வாழ இயலும் - அரசியல்வாதிகளை விட்டுவிட்டீர்களே. மற்றபடி கட்டுரையின் கருத்து ஏற்கத்தக்கது.
Mahesh இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையா பதிவு, கசப்பான உண்மை....இது ஒரு மெல்லிய கோடு மாதிரியானது, ஆனால் வேகமாக நிகழ்கிறது.
ராஜி இவ்வாறு கூறியுள்ளார்…
இருக்கும்... இருக்காது போல...

வாழலாம். ஆனா வாழமுடியாது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...