முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழத் தகுதியற்ற ஊர்

Image result for inflation

பல வருடங்களுக்கு முன்பு “கற்றது தமிழ்” வெளியான போது சுஹாசினி ராமை பேட்டி எடுத்தார். அதில் ராம் இவ்வாறு சொன்னார்: “வரும் சில ஆண்டுகளில் ஓட்டலில் ஒரு கோப்பை காப்பி குடிப்பதற்கு நாம் ஒரு மூட்டை நிறைய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்ல நேரும்.” பணவீக்கம் பற்றி ராம் சொன்ன ஆருடம் மிகையானது என எனக்கு அப்போது தோன்றியது. சமீபத்தில் fullyfilmy யூடியூப் பக்கத்தில் ராமின் பேட்டியில் மீண்டும் இதே விசயத்தை லேசாய் தொட்டுப் பேசினார். பேட்டியாளர்: “சார் உங்களுக்கும் சர்வைவல் பிரச்சனை இருக்கிறதா?”
ராம்: “ஆமாம். அன்றாட செலவுகள், வாடகை எல்லாவற்றையும் சமாளிப்பது இப்போதும் பெரும்பாடு தான். யாருக்குத் தான் சர்வைவல் பிரச்சனை இன்று இல்லை? கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் தான் இருக்கிறது. ஆனால் என்னையும் உங்களையும் போல் இராது. அவர் அளவில் வேற லெவலில் அது இருக்கும். ஆனால் அவருக்கும் இன்று பணப்பிரச்சனை உள்ளது.”

 ஆனால் இப்போது … ராம் சொன்னது உண்மை என எனக்கு இப்போது நிச்சயமாய் தோன்றுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை எனும் உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் கைநிறைய சம்பாத்தாலும் வருட இறுதியில் பணம் சேர்த்து வைக்க முடியாது. சாப்பாடு, துணி, அன்றாடத் தேவைக்கான பொருட்களுக்கே பெரும்பகுதி வருமானம் விரயமாகிறது. ரொம்ப போராடி நீங்கள் சேர்த்து வைத்த பணம் கூட வருடத்துக்கு ஒருமுறை வியாதி வந்து சில வாரங்கள் மருத்துவமனையில் இருந்தால் மொத்தமாய் காலியாகி விடும். ஏனென்றால் கடந்த பத்து வருடங்களில் சின்ன சின்ன பொருட்களின் விலையே பல மடங்கு அதிகமாகி விட்டது. ஐம்பதினாயிரம் இருபதினாயிரம் என மதிப்பிழந்து விட்டது. ஒரு லட்சம் ஐம்பதினாயிரம் ஆகி விட்டது. குறிப்பாக கடந்த சில வருடங்களில் பணவீக்கம் நம் அடிவயிற்றில் பெட்ரோலாக புகுந்து குபுகுபுவென பற்றிக் கொண்டு எரிகிறது.
பணவீக்கத்தை குறைக்க இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் தாம் என்ன எனும் கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். ரூபாய் நோட்டுத் தடையால் நம் தட்டில் விழும் சோற்றின் விலை குறைந்ததா இல்லையா எனும் கேள்வியை நேரடியாய் எழுப்ப வேண்டும். இந்தியர்களின் பிரச்சனையே எதற்கும் எதிர்வினையாற்றாமல் மண்ணாந்தையாய் எப்போதும் இருப்பது தான். இந்திய வாக்காளர்களை எவ்வளவு வேண்டுமானாலும் சித்திரவதை பண்ணலாம். பத்து வருடங்கள் பொறுப்பார்கள். அதன் பின்னர் நிலைமை எப்படி இருந்தாலும் புதுக்கட்சிக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள். ஏதோ முடுக்கி விட்ட எந்திரம் போல் இருக்கிறார்கள் நம் வாக்காளர்கள்.. அந்த நம்பிக்கை தான் பா.ஜ.கவை இப்படி ஆட வைக்கிறது. மோடி மீண்டும் பிரதமர் ஆன பின் இந்த தேசத்தில் நம்மால் மூன்று வேளை சாப்பிட்டு வாடகை கொடுத்து வாழ முடியுமா என எனக்கு இப்போது ஐயம் ஏற்படுகிறது. எனக்கு மட்டுமல்ல, யாரிடம் பேசினாலும் “மீண்டும் மோடியா? ஐயய்யோ” என அலறுகிறார்கள். (ஆனால் தினமும் போட்டு அடிக்கும் குடிகார கணவனை பாதுகாக்கும் மனைவிமார் போல இவர்களே மோடிக்கு மீண்டும் வாக்களித்து கூடுதலாய் தம் வயிற்றில் அடித்துக் கொள்வார்கள் என்பதே உண்மை!)
இந்த தேசம் நாம் வாழத் தகுதியற்றதாய் போய் விட்டது. ஒரு நவீன தாது வருச பஞ்சத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். நகரங்களில் கடைகள் எப்போதும் திறந்திருக்கும். எங்கும் செல்வம் கொழிக்கும். யாராவது பார்களில் குடித்தும் பப்களில் ஆடிக் கொண்டும் இருப்பார்கள். பளபளப்பான கார்கள் வரிசை வரிசையாய் நகரும். ஆனால் மக்களுக்கு சாப்பிட பணம் இருக்காது. குடியிருக்க வீடிருக்காது. தம்மைச் சுற்றி பணத்தை அள்ளி செலவழிக்கும் ஒரு சில மக்களிடம் மட்டும் எப்படி பணம் வருகிறது என வியந்தபடி பெரும்பாலான மக்கள் சாலைகளில் அலைந்து திரிவார்கள். ஒரு பகுதியினரிடம் வீடுகள் இருக்கும். கார் இருக்கும். ஆனால் வங்கியில் கடனை திரும்ப செலுத்த முடியாது திகைப்பார்கள். இருக்கும் ஆனால் இருக்காது என்பது தான் புதிய தாதுவருச பஞ்சமாக இருக்கும்.
இந்த தேசத்தில் இனி இரு தரப்பினர் தாம் வாழ இயலும்:
1)   வெற்றிகரமான வியாபாரிகள்.
2)   வெளிநாடு சென்று பத்திருபது வருடங்கள் நிறைய சம்பாதித்து விட்டு திரும்புகிறவர்கள்.

வேறு எல்லாரும் எலிகளைப் போல் ஓடிப் போய் கடலில் குதிக்க வேண்டியது தான்!

கருத்துகள்

நெல்லைத் தமிழன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த தேசத்தில் இனி இரு தரப்பினர் தாம் வாழ இயலும் - அரசியல்வாதிகளை விட்டுவிட்டீர்களே. மற்றபடி கட்டுரையின் கருத்து ஏற்கத்தக்கது.
Mahesh இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையா பதிவு, கசப்பான உண்மை....இது ஒரு மெல்லிய கோடு மாதிரியானது, ஆனால் வேகமாக நிகழ்கிறது.
ராஜி இவ்வாறு கூறியுள்ளார்…
இருக்கும்... இருக்காது போல...

வாழலாம். ஆனா வாழமுடியாது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.