முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஞ்சலி அஞ்சலி

 Image result for obituary cartoon
ஞாநியின் மறைவை ஒட்டி நூற்றுக்கணக்கான அஞ்சலிக் குறிப்புகள் நம் பேஸ்புக் டைம்லைனில் தோன்றி கண்ணீர் சிந்தின, மெல்ல அழுதன, கையைப் பற்றி அழுத்தின. நான் ஒரு நண்பரிடம் ஞாநி ஏற்படுத்தியுள்ள சமூகத் தாக்கத்தை, அபாரமான நட்பு வலையை, அவர் சம்பாதித்த நற்பெயரைப் பற்றி வியந்து பேசிக் கொண்டிருந்தேன். அந்நண்பர் சில நொடிகள் அமைதியாகி விட்டு சட்டெனக் கேட்டார்: “இவ்வளவு நாளும் இந்த அஞ்சலிக் குறிப்பாளர்கள் எங்கிருந்தார்கள்? அவர் உயிருடன் இருந்த போது அவரைப் பற்றி மிகக் குறைவான பாராட்டுரைகளே எழுதப்பட்டன. அதிகமும் அவரை விமர்சித்தும் கண்டித்தும் எதிர்த்துமே எழுதினோம். அவர் இல்லாமல் ஆன பின் எவ்வளவு ஆயிரமாயிரம் சொற்களை மாலை மாலையாய் அவர் பிம்பத்தின் மேல் சூட்டுகிறோம். ஏன் இந்த பாசாங்கு? ஏன் மரணத்தில் மட்டுமே ஒரு மனிதன் மதிப்பு பெறுகிறானா?”
 எனக்கு சட்டென விக்கித்து விட்டது. நானும் இப்பட்டியலில் சேர்வேன். ஒரு மனிதர் மறைந்த பின்னர் எல்லா கசப்புகளையும் அல்லது தயக்கங்களையும் கடந்து அவரை பாராட்டி அன்பைப் பொழிவது எளிதாகிறது. தமிழில் வாழ்ந்து மறைந்த அத்தனை ஆளுமைகளுக்கும் இது பொருந்தும். ஒருவர் இறந்ததும் அவரைப் பற்றி சொற்களை உருவாக்க நம் விரல்கள் கீபோர்டில் நர்த்தனமிட தொடங்குகின்றன. இது ஏன்?

நண்பர் போனைத் துண்டித்த பின்னரும் வெகுநேரம் இதைப் பற்றியே சிந்தித்த படி இருந்தேன். இதற்கு இரு காரணங்கள் தோன்றின. அஞ்சலிக் குறிப்பெழுதும் நம் மனநிலையை நான் இரு விதங்களில் புரிந்து கொள்கிறேன்.
ஒருவர் இருக்கும் போதை விட இறந்த பின்னரே அவரைப் பற்றி பேசுவதற்கான தேவை நமக்கு அதிகமாகிறது. இதில் பாசாங்கு ஏதும் இல்லை. அஞ்சலிக் குறிப்புகள் நமது அன்றாட அமைதிக்கு அவசியமானவை. எப்படி என சொல்கிறேன்.
1)   மனிதர்கள் எப்படி நம் வாழ்வில் இடம் பெறுகிறார்கள்? புனைவின் வழி. ஒவ்வொரு மனிதனும் பொதுவாழ்விலோ அந்தரங்க உலகிலோ தனது உரையாடல்கள் வழி தன்னை ஒரு பாத்திரமாக உருவாக்கிக் கொள்கிறான். அவனது அடிப்படையான குணாதசியம், அவனது உடன்மொழி, கையசைவு, குரல், நம்பிக்கைகள், உணர்வுநிலை என ஒவ்வொன்றாய் நம் நினைவடுக்குகளில் சேர்ந்த பின் அவன் நம் வாழ்வில் நீங்கா இடம் பிடிக்கிறான். அப்போது அவன் தன்னைப் பற்றி ஒரு கதையை உருவாக்கிக் கொண்டிருப்பான் (இதை கோட்பாடுகளில் கதையாடல் என்கிறார்கள்).
 அதாவது நமது அன்றாட வாழ்வு பல் வேறு சினிமாக்களின் தொகுப்பே. டிவியில் பார்க்கும் மனிதர்கள், பண்பலை வானொலியில் நாம் கேட்பவர்கள், சாலையில் எதிர்வருபவர்கள், அலுவலகத்து நண்பர்கள், உயரதிகாரி ஆகிய ஒவ்வொன்றும் ஒருவித சினிமா. நம் குடும்பம் நாமும் பங்கு பெறும் நாம் மட்டுமே பார்க்க முடிகிற ஒரு அந்தரங்க சினிமா. நம் மனம் இப்படித் தான் மனிதர்களையும் அவர்கள் தொடர்பான அன்றாட நிகழ்வுகளையும் புரிந்து கொள்கிறது. ஞாநியைப் போன்று ஒருவர் இறக்கும் போது என்னவாகிறது? ஒரு படத்தில் சட்டென ஒரு காட்சியில் ஒரு பாத்திரம் மட்டும் மறைந்து போனால் என்னவாகும்? அவருடன் பேசும் மற்ற பாத்திரங்கள் காட்சியில் தம் பாட்டுக்கு இயங்குகிறார்கள். ஆனால் இவரை மட்டும் காணவில்லை. எவ்வளவு அபத்தம்! இதை எப்படி எதிர்கொள்வது?
நான் சிறுவனாய் இருக்கும் போது வி.சி.ஆர் எனப்படும் வீடியோ காசெட்டை போட்டு படம் பார்க்கும் கருவி இருந்தது. ஏதாவது ஒரு விடுமுறையின் போது அதை வாடகைக்கு எடுத்து நாங்கள் படம் பார்போம். ஒருமுறை “கேப்டன் பிரபாகரன்” பார்த்துக் கொண்டிருந்தோம். நான் அப்போது தீவிர கேப்டன் விசிறி. என்னுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த அண்டை வீட்டு பையன்களும் தாம். படம் பாதியில் இருக்கும் போது மின்சாரம் போய் விட்டது. இரண்டு நாட்கள் மின்சாரம் வரவில்லை. நாங்களும் வாடகைக் காலம் முடிந்ததால் காசெட்டையும் வி.சி.ஆரையும் திரும்ப கொடுத்து விட்டோம். படத்தின் மிச்சக் கதை என்ன? அடுத்து என்ன ஆகியிருக்கும் எனும் கேள்வி எங்களை அலைகழித்தது. பரபரப்பு தாங்காமல் நாங்கள் பையன்கள் சேர்ந்து மிச்ச படத்தின் கதையை ஊகித்து ஒரு விளையாட்டாக மாற்றினோம். ஆளாளுக்கு ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு மிச்ச கதையை நாங்களே பேசி நடித்து விளையாடினோம். உண்மையில் அதை படத்தை விட நல்ல சுவாரஸ்யமான அனுபவமாய் இருந்தது. மின்சாரம் இருந்திருந்தால் நிச்சயம் இப்படி விளையாடியிருக்க மாட்டோம்.

ஒவ்வொரு ஆளுமை நம் புலன்களில் வெளியில் இருந்து மறையும் போது நாமும் இப்படியே கற்பனை செய்து விளையாடுகிறோம். அந்த விளையாட்டு தான் அஞ்சலிக் குறிப்புகள் எழுதுவது. இதன் வழி இல்லாமல் போன ஞாநியை மீட்டுக் கொணர்கிறோம். அவரது குரலை அவருக்கு மீள அளிக்கிறோம். அவரை நம் கண்முன் நிகழ்த்திப் பார்க்கிறோம். எழுத்தின் அபாரமான ஆற்றல் அது நிறுத்தாமல் கனவுகளை உற்பத்தி செய்யக் கூடியது என்பது. லூப்பில் ஒரு காட்சியை பார்ப்பது போன்றது இது.
 எழுத்தின் பதிவாகும் நினைவுகள், கனவுகள், நம்பிக்கை சித்திரங்கள் மரணமுறாது. ஆக, அஞ்சலிக் குறிப்பின் வழி நாம் ஞாநியை மரணமற்றவராய் மாற்றி நம் அருகே வைத்துக் கொள்கிறோம். அவர் சட்டென போய் விட்டாரே எனும் அதிர்ச்சி தரும் பதற்றத்தை இப்படிப் போக்குகிறோம். இந்த வாழ்வு அநிச்சயமானது என எந்த ஆளுமையின், பிரியமான நபரின் மறைவும் நமக்கு உணர்த்தும். அஞ்சலிக் கட்டுரையும் நிச்சயம் அதை உறுதிப் படுத்துகிறது. அதேவேளை முரணாய் இவ்வாழ்வு நிச்சயமானது என்பதையும் அஞ்சலிக் குறிப்பு உணர்த்துகிறது. அஞ்சலிக் குறிப்பு ஒருவிதத்தில் கர்த்தர் கல்லறையை திறந்து “லாசரஸ்! வெளியே வா” என அழைத்ததைப் போன்றது.

2)   அடுத்த காரணம் பண்பாட்டு ரீதியானது. நமது நாட்டுப்புற தெய்வங்கள் பெரும்பாலும் உண்மையாய் வாழ்ந்து மறைந்த மனிதர்களே. இம்மனிதர்கள் எப்படி தெய்வமாகிறார்கள்? தொன்மக் கதைகள், அவற்றை ஒட்டின சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் வழி. மனிதர்களை இப்படி தெய்வமாக்குவது நமது தொன்று தொட்டு இருக்கிற பழக்கம்.
இதில் ஆர்வமூட்டும் விசயம் இத்தொல் கதைகள் நேற்று உருவாகி உறைந்து போகிறவை அல்ல. எங்கள் ஊரில் உள்ள பூதத்தான், மாடன் ஆகிய சாமிகளின் தோற்றம் பற்றி உள்ள கதைகளை விட அச்சாமிகள் தம் வாழ்வில் எதிர்பட்டதைப் பற்றி எளிய மக்கள் கூறும் நடுங்கச் செய்யும் கதைகளே அதிகம். என் நண்பன் பூதத்தான் சாமியின் சலங்கை ஒலியை ஓரிரவு கேட்டதாய் என்னிடம் உணர்ச்சிபூர்வமாய் விவரித்த போது நானும் நம்பினேன். இன்னொரு நண்பன் மாடசாமி தன்னை முதுகில் அறைந்த அழைத்ததைச் சொல்லி சட்டையை அவிழ்த்து சிவந்து தடித்த தடம் ஒன்றையும் காட்டினான். இவர்கள் யாரும் மனம் பிறர்ழ்ந்தவர்கள் அல்ல. சாமிகள் இப்படித் தான் நம் வாழ்வில் நீடிக்கிறார்கள்; இப்படித் தான் நம் கை பிடித்து அவர்கள் உலவுகிறார்கள். அஞ்சலிக் குறிப்பெழுதுவதும் இந்த தொல்மரபின் ஒரு நீட்சியாக இருக்கலாம். நாம் ஓரளவுக்கு மேல் தோளில் கையிட்டு அணுக்கமாய் பழக முடியாத ஆளுமைகளை நம் கையில் அமரும் பட்டாம்பூச்சியாய் மாற்றி வைத்துக் கொள்ள அஞ்சலிகள் உதவுகின்றன.

ஆகையால் அஞ்சலிக் குறிப்புகள் நம் பாசாங்கின், போலித்தனத்தின் வெளிப்பாடு அல்ல. மரணத்தை ஏற்கவும் நிராகரிக்கவும் செய்வதற்கு நம்மிடம் உள்ள ஒரு அற்புதக் கருவியே அஞ்சலிகள்!

கருத்துகள்

premkumar இவ்வாறு கூறியுள்ளார்…
Woww superb write up sir

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...