முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம் காலத்தின் பாசிசம் எது?




எஸ்.வி சேகர் பிரச்சனையை ஒட்டி ராஜன் குறை எழுதிய ஒரு பதிவின் மீதான என் எதிர்வினை இது.
அணி சேர்ந்து அரசியல் போராட்டம் செய்யும் போது எப்படி முரண்களை கையாள்வது என்பதே ராஜன் குறையின் குறிப்பின் மையம். தெளிவும் சித்தாந்த ஒழுங்கும் கொண்டு விவாதித்து முரண்களை கையாள வேண்டும் என அவர் சொல்வதாய் நான் புரிந்து கொள்கிறேன். எனக்கு அவரது தரப்பில் உள்ள மாறுபட்ட கருத்து இது: அணி அமைத்து செய்யப்படும் அரசியலின் அடிப்படையில் சில சிக்கல்கள் இல்லையா? ஒரு மக்களாட்சி அமைப்பில் பிரதிநுத்துவ அரசியலுக்கு குழு செயல்பாடு தேவையே. ஆனாலும் இக்குழு செயல்பாடுகள் மானுட அறத்தை மறுக்கும் எல்லைக்கும் போகலாமே? அப்போது என்ன செய்வது?
குழு அரசியலில் சுயசிந்தனை, ஒருவரது அற உணர்வுக்கு அங்கு இடம் என்ன? என் குழு ஒரு பொதுநல நோக்குக்காக ஒரு தப்பான காரியத்தை ஆதரித்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

தேர்தலின் போது எப்படி செயல்பட வேண்டும்? அணியாகவா தனித்தா? அணியாக எனில் அது ஜனநாயக விரோதம் அல்லவா? அப்போது தனித்தென்றால் இப்போது நாம் கூட்டுமனப்பான்மையை கேள்வியின்றி ஏற்கலாமா?
நமது அரசியலமைப்பு அணி செயல்பாட்டை ஏற்கிறது. அதேவேளை நமது சுதந்திரத்தை, தேர்வுகளை, முடிவுகளை நாம் தனிமனிதர்களாகவே முன்னெடுக்க வேண்டும் என்கிறது.


உதாரணமாய் நீங்கள் ஒரு தனிமனிதராக ஒரு அணியின் சார்பில் வாக்கு அளிக்க முடியாது. ஒரு அணியின் தவறுகளுக்கு பொறுப்பாகி ஒரு தனிமனிதர் சிறை செல்ல முடியாது. சாதி, மதத்தின் அடிப்படையில் தொகுதி சாத்தியமில்லை. தமிழ் தேசியர்கள் எங்கள் தொகுதியில் தமிழ் தேசியர் மட்டுமே போட்டியிட வேண்டும் என கோர முடியாது. ஆக நமது மக்களாட்சி அமைப்பு தனிமனிதருக்கும் அணிகளுக்கும் இடையில் ஒரு சமரசத்தை கோருகிறது. இங்கு தான் பிரச்சனையே எழுகிறது:


ராஜன் குறை இந்துத்துவாவுக்கு எதிரான அணிகள் முழுக்க தீவிரவாதத்தை ஆதரிக்கவோ அனைவரையும் பாசிஸ்டுகள் என முத்திரை குத்தக் கூடாது என்கிறார். இது ஒரு முக்கியமான பார்வை இதை நான் ஏற்கிறேன். ஆனால் ஒரு மக்கள் திரள் கூட்டாக செயல்படும் போது இடதுசாரி கட்சியினரைப் போல சித்தாந்த தெளிவுடன், தர்க்க ஒழுங்குடன், நிதானத்துடன், பிசிறின்றி இயங்குவது சாத்தியமா? அப்படியே அது சாத்தியப்பட்டாலும் ஒழுங்கு, ஒற்றுமை, கட்சிக்கட்டுப்பாடு ஆகிய தேவைகளின் பொருட்டு நியாயம், அறம், உண்மை ஆகியவற்றை கைவிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட மாட்டோமா? இது நம் வரலாற்றில் இடது அமைப்புகளில் தொடர்ந்து நிகழ வில்லையா? நக்சல்பாரி அமைப்பை இடதுகட்சிகள் மிகக்கொடூரமாய் அழித்தது குறித்த பதிவுகள் இல்லையா? அதற்கு எதிராய் கட்சிக்காரர்கள் அமைதி காத்தது நியாயமா?
பாசிசத்துக்கு எதிரான குரல்களைத் தொகுக்கும் போது நாம் ஆதரிக்கும் மக்களிடையே பாசிசம் தென்பட்டால் என்ன செய்ய? சிங்கூரில் நடந்தது போல் நிகழ்ந்தால் இடதுசாரி தோழர்கள் மௌனம் காத்தது போல் மௌனிக்க வேண்டுமா? பாசிசத்துக்கு எதிரான அணி ஒற்றுமையை பாதுகாப்பது முக்கியமெனில் மௌனிக்கத் தானே வேண்டும்? அப்படியான மௌனம் நம்மை அழிவை நோக்கி இட்டுச் செல்லும்.
என் தீர்வு: இனி வரும் காலத்தில் அறவழியிலான அரசியல் என்பது சிதைவின் அரசியலாக இருக்கும். அணி சேர்க்க வேண்டும். ஆனால் எப்போது வேண்டுமெனிலும் அந்த அணியை சந்தேகிக்கவும் ஆய்வு செய்யவும் தேவைப்பட்டால் உடைத்து எறியவும் தயாராக வேண்டும். அணிகள் தொடர்ந்து தோன்றி உடைகிறவையாய் இருக்கட்டும். அவற்றுக்கு என உறுதியான கட்டுக்கோப்பான சித்தாந்தங்கள் வேண்டாம். மக்களின் எழுச்சியும் மனசாட்சியும் உள்ளுணர்வும் கோரும் நியாயங்களை ஒட்டி அரசியல் உருவாகட்டும். அவற்றின் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அந்த அமைப்புகள் சிதையட்டும். சிதைவுற்ற இடத்தில் புது அமைப்புகள் பிறக்கட்டும்.
இனி பாசிசம் என்பது வலதுசாரிகள் கட்டமைப்பது மட்டுமாக இருக்காது. பெரிய கட்டுறுதியான அமைப்புகளை யாரெல்லாம் உருவாக்கி வளர்த்தாலும் அது பாசிசத்தை நோக்கி இட்டுச் செல்லும். கேள்விக்குட்படுத்த தகாத சித்தாந்தங்களை யார் முன்வைத்தாலும் அவை அழிவு சக்திகளாய் உருமாறும். இடதோ வலதோ எந்த சாரிகளையும் நான் சந்தேகத்துடனே பார்ப்பேன். வேறு வழியே இல்லை.


கருத்துகள்

Muthuvelavan இவ்வாறு கூறியுள்ளார்…
இங்கு எல்லாமே பண ஆதாரத்திலேயே நடக்கிறது. பணபலமில்லாமல் கட்சி கிட்சி ஒன்றும் நடக்காது என்கிற நிலைமைக்குக் வந்தாகிவிட்டது. மக்களும் தான் சார்ந்த கட்சியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எதிர்ப்பவரை வசைபாடுவது வழக்காகிவிட்டது. என்னைக்கேட்டால் எந்தக்கட்சிக்கும் உறுப்பினர் சேர்க்கையையே அனுமதிக்கக்கூடாது. உறுப்பினர் என்பதாலேயே கண்மூடிக்கொண்டு ஆதரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டையே அனைவரும் கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியமான அரசியல் அதனால்தான் உருவாகவேயில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.