Skip to main content

நம் காலத்தின் பாசிசம் எது?




எஸ்.வி சேகர் பிரச்சனையை ஒட்டி ராஜன் குறை எழுதிய ஒரு பதிவின் மீதான என் எதிர்வினை இது.
அணி சேர்ந்து அரசியல் போராட்டம் செய்யும் போது எப்படி முரண்களை கையாள்வது என்பதே ராஜன் குறையின் குறிப்பின் மையம். தெளிவும் சித்தாந்த ஒழுங்கும் கொண்டு விவாதித்து முரண்களை கையாள வேண்டும் என அவர் சொல்வதாய் நான் புரிந்து கொள்கிறேன். எனக்கு அவரது தரப்பில் உள்ள மாறுபட்ட கருத்து இது: அணி அமைத்து செய்யப்படும் அரசியலின் அடிப்படையில் சில சிக்கல்கள் இல்லையா? ஒரு மக்களாட்சி அமைப்பில் பிரதிநுத்துவ அரசியலுக்கு குழு செயல்பாடு தேவையே. ஆனாலும் இக்குழு செயல்பாடுகள் மானுட அறத்தை மறுக்கும் எல்லைக்கும் போகலாமே? அப்போது என்ன செய்வது?
குழு அரசியலில் சுயசிந்தனை, ஒருவரது அற உணர்வுக்கு அங்கு இடம் என்ன? என் குழு ஒரு பொதுநல நோக்குக்காக ஒரு தப்பான காரியத்தை ஆதரித்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

தேர்தலின் போது எப்படி செயல்பட வேண்டும்? அணியாகவா தனித்தா? அணியாக எனில் அது ஜனநாயக விரோதம் அல்லவா? அப்போது தனித்தென்றால் இப்போது நாம் கூட்டுமனப்பான்மையை கேள்வியின்றி ஏற்கலாமா?
நமது அரசியலமைப்பு அணி செயல்பாட்டை ஏற்கிறது. அதேவேளை நமது சுதந்திரத்தை, தேர்வுகளை, முடிவுகளை நாம் தனிமனிதர்களாகவே முன்னெடுக்க வேண்டும் என்கிறது.


உதாரணமாய் நீங்கள் ஒரு தனிமனிதராக ஒரு அணியின் சார்பில் வாக்கு அளிக்க முடியாது. ஒரு அணியின் தவறுகளுக்கு பொறுப்பாகி ஒரு தனிமனிதர் சிறை செல்ல முடியாது. சாதி, மதத்தின் அடிப்படையில் தொகுதி சாத்தியமில்லை. தமிழ் தேசியர்கள் எங்கள் தொகுதியில் தமிழ் தேசியர் மட்டுமே போட்டியிட வேண்டும் என கோர முடியாது. ஆக நமது மக்களாட்சி அமைப்பு தனிமனிதருக்கும் அணிகளுக்கும் இடையில் ஒரு சமரசத்தை கோருகிறது. இங்கு தான் பிரச்சனையே எழுகிறது:


ராஜன் குறை இந்துத்துவாவுக்கு எதிரான அணிகள் முழுக்க தீவிரவாதத்தை ஆதரிக்கவோ அனைவரையும் பாசிஸ்டுகள் என முத்திரை குத்தக் கூடாது என்கிறார். இது ஒரு முக்கியமான பார்வை இதை நான் ஏற்கிறேன். ஆனால் ஒரு மக்கள் திரள் கூட்டாக செயல்படும் போது இடதுசாரி கட்சியினரைப் போல சித்தாந்த தெளிவுடன், தர்க்க ஒழுங்குடன், நிதானத்துடன், பிசிறின்றி இயங்குவது சாத்தியமா? அப்படியே அது சாத்தியப்பட்டாலும் ஒழுங்கு, ஒற்றுமை, கட்சிக்கட்டுப்பாடு ஆகிய தேவைகளின் பொருட்டு நியாயம், அறம், உண்மை ஆகியவற்றை கைவிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட மாட்டோமா? இது நம் வரலாற்றில் இடது அமைப்புகளில் தொடர்ந்து நிகழ வில்லையா? நக்சல்பாரி அமைப்பை இடதுகட்சிகள் மிகக்கொடூரமாய் அழித்தது குறித்த பதிவுகள் இல்லையா? அதற்கு எதிராய் கட்சிக்காரர்கள் அமைதி காத்தது நியாயமா?
பாசிசத்துக்கு எதிரான குரல்களைத் தொகுக்கும் போது நாம் ஆதரிக்கும் மக்களிடையே பாசிசம் தென்பட்டால் என்ன செய்ய? சிங்கூரில் நடந்தது போல் நிகழ்ந்தால் இடதுசாரி தோழர்கள் மௌனம் காத்தது போல் மௌனிக்க வேண்டுமா? பாசிசத்துக்கு எதிரான அணி ஒற்றுமையை பாதுகாப்பது முக்கியமெனில் மௌனிக்கத் தானே வேண்டும்? அப்படியான மௌனம் நம்மை அழிவை நோக்கி இட்டுச் செல்லும்.
என் தீர்வு: இனி வரும் காலத்தில் அறவழியிலான அரசியல் என்பது சிதைவின் அரசியலாக இருக்கும். அணி சேர்க்க வேண்டும். ஆனால் எப்போது வேண்டுமெனிலும் அந்த அணியை சந்தேகிக்கவும் ஆய்வு செய்யவும் தேவைப்பட்டால் உடைத்து எறியவும் தயாராக வேண்டும். அணிகள் தொடர்ந்து தோன்றி உடைகிறவையாய் இருக்கட்டும். அவற்றுக்கு என உறுதியான கட்டுக்கோப்பான சித்தாந்தங்கள் வேண்டாம். மக்களின் எழுச்சியும் மனசாட்சியும் உள்ளுணர்வும் கோரும் நியாயங்களை ஒட்டி அரசியல் உருவாகட்டும். அவற்றின் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அந்த அமைப்புகள் சிதையட்டும். சிதைவுற்ற இடத்தில் புது அமைப்புகள் பிறக்கட்டும்.
இனி பாசிசம் என்பது வலதுசாரிகள் கட்டமைப்பது மட்டுமாக இருக்காது. பெரிய கட்டுறுதியான அமைப்புகளை யாரெல்லாம் உருவாக்கி வளர்த்தாலும் அது பாசிசத்தை நோக்கி இட்டுச் செல்லும். கேள்விக்குட்படுத்த தகாத சித்தாந்தங்களை யார் முன்வைத்தாலும் அவை அழிவு சக்திகளாய் உருமாறும். இடதோ வலதோ எந்த சாரிகளையும் நான் சந்தேகத்துடனே பார்ப்பேன். வேறு வழியே இல்லை.


Comments

Muthuvelavan said…
இங்கு எல்லாமே பண ஆதாரத்திலேயே நடக்கிறது. பணபலமில்லாமல் கட்சி கிட்சி ஒன்றும் நடக்காது என்கிற நிலைமைக்குக் வந்தாகிவிட்டது. மக்களும் தான் சார்ந்த கட்சியை கண்மூடித்தனமாக ஆதரிப்பது எதிர்ப்பவரை வசைபாடுவது வழக்காகிவிட்டது. என்னைக்கேட்டால் எந்தக்கட்சிக்கும் உறுப்பினர் சேர்க்கையையே அனுமதிக்கக்கூடாது. உறுப்பினர் என்பதாலேயே கண்மூடிக்கொண்டு ஆதரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டையே அனைவரும் கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியமான அரசியல் அதனால்தான் உருவாகவேயில்லை.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...