முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (3)



பாஷோவின் ஜென்

 Image result for basho
ஹைக்கூ நம் சிந்தனையை ரத்து செய்ய கோருவது. அது நம்மை சிந்தனையற்ற, நீர் வளையங்கள் அற்ற ஒரு பரப்பிற்கு நகர்த்தும் ஒரு இலக்கிய வடிவம். உதாரணத்திற்கு, பாஷோவின் இந்த மிகப்பிரபலமான கவிதையை பாருங்கள். இதற்கு ஏகப்பட்ட மொழியாக்கங்கள் உள்ளன. நான் டியோன் ஒடொனோல் என்பவரின் மொழியாக்கத்தை எடுத்து அதை தமிழாக்கி தருகிறேன்.


ஒரு பழைய அமைதியான குளம்
தொன்மையான நிச்சலத்தின் கண்ணாடி அது
ஒரு தவளை-குதிக்கும்-தொபுக்கடீர்

அமைதியான குளமொன்றில் தவளை சட்டென குதிக்கிறது; நீர் தெறிக்கிறது; ஒலி எழுகிறது. மீண்டும் ஒலி அடங்கி, குளம் நிலைபெற்று அமைதி திரும்புகிறது. இது தான் காட்சி. இது தனக்கு என்ன சொல்கிறது என்பது பாஷோவுக்கு முக்கியமில்லை. தவளை குதிக்கவில்லை; தவளை எழுப்பும் அந்த ஒலியே தவளையாக அவருக்குத் தெரிகிறது. இது ஏன் அப்படி எனக் கேட்டால் விளக்கமில்லை. ஒரு குழந்தைத்தனமான மனநிலை இது. நவீன கவிதை சிலநேரம் இதே மனநிலையை ஒரு முதிர்ச்சியுடன் முன்வைக்கும். ஆனால் ஹைக்கூ அதே குழந்தைமையுடன் அதை வெளிப்படுத்தும். நவீன வாழ்க்கை தரும் புரிந்துணர்வு, சமூக பொறுப்புணர்வு, விழிப்புணர்வு, அறைகூவல், கேள்வி கேட்கும் விருப்பம், விமர்சிக்கும் நோக்கு, அவதானிக்கும் மனப்பாங்கு ஆகியவற்றுக்கு ஹைக்கூவில் இடமில்லை. 

மற்றொரு ஹைக்கூவில் பாஷோ இருக்கும் குடிசையின் கூரை எரிந்து போகிறது. அட, இப்போது பௌர்ணமி நன்றாய் தெரிகிறது என பாஷோ களிப்படைகிறார். இதை நேர்மறையான அணுகுமுறை என கருத முடியாது. ஏனெனில் நிலவையாவது காண்கிறேனே என மகிழ்வது நேர்மறை எனில் அதன் பின்னால் கூரை எரிந்து விட்டதே எனும் கசப்பை காணாமல் தவிர்க்கும் புத்திசாலித்தனம் மறைந்திருக்கிறது. பாஷோவிடம் இப்படி எந்த அணுகுமுறையும் இல்லை. பேதையாய் வாழ்வின் சின்ன சின்ன அதிசயங்களை கண்டு வியப்பது, எதிலும் தர்க்க விளக்கங்களை நாடாதிருப்பது அவரது உளவியல். இது ஒரு ஜென் மனநிலையுமே. இதிலென்ன ஜென் உள்ளது?

தவளை நீருக்குள் குதிக்கிறது என சொன்னால் யாரும் கேள்வியின்றி ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஒருவேளை தவளை குதிக்கும் போது, அதாவது அது தாவி எழும்பி காற்றில் அரை நொடி மிதந்து செல்கையில், நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அது நீரை நெருங்கி அமிழ்ந்து நீர்ப்பரப்புக்குள் மறைவதை பார்க்கவில்லை. அதற்குள் மிக வேகமாய் தவளை மறைந்து விட்டது. ஆனால் தவளை குதித்ததை அது குதிப்பதை முழுக்க பார்க்காமலே எப்படி கண்டீர்கள்? அந்த தொபுக்கடீர் எனும் ஓசை தவளை குதித்து மறைந்த காட்சியின் இடத்தில் அந்த ஒலி வந்து அமர்கிறது. தவளைக்கு பதில் ஒலி குதிக்கிறது; நீர்ப்பரப்பை கிழித்து தவளை எழுப்பும் ஒலி தோன்றி மறைகிறது. இப்படியும் பார்க்கலாம் (சாரி கேட்கலாம்) தானே? இந்த இடத்தில் பார்ப்பதும் கேட்பதும் ஒன்றாகிறது.
கூரை எரிந்து விட்டது எனும் போது சட்டென புலனாகும் ஆகாயத்தை நாம் பார்க்க தவறுகிறோமே எனும் இரண்டாவது ஹைக்கூ முதல் சாத்தியத்தை மறுக்கவில்லை. கூரை எரிந்ததும் உண்மையே; அதே போல வானம் அப்போது வெகு சிலாக்கியமானது என்பதும் உண்மையே. நாம் ஒன்றை மறுத்து இன்னொன்றை விடாப்பிடியாய் கவனிப்பது அபத்தம் என்கிறது இக்கவிதை. இப்படி சொல்கிறது என்று கூட சொல்லக் கூடாது. இப்படியும் பார்க்கும் ஒரு மனநிலையை நமக்கு சித்தரிக்கிறது.




கருத்துகள்

Sendhilkumar AV இவ்வாறு கூறியுள்ளார்…
இயற்கையில் எல்லாமே இரண்டு தன்மைகள்தான் ஆனால் இரண்டையும் வெவ்வேறாக பார்க்காமல் ஒரே மாதிரி கவனிப்பது அல்லது சும்மா இருப்பது அல்லது சம நிலையில் இருப்பது இயற்கையின் நோக்கத்தையே தகர்த்தெரிந்து விடுவது போல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...