Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (3)



பாஷோவின் ஜென்

 Image result for basho
ஹைக்கூ நம் சிந்தனையை ரத்து செய்ய கோருவது. அது நம்மை சிந்தனையற்ற, நீர் வளையங்கள் அற்ற ஒரு பரப்பிற்கு நகர்த்தும் ஒரு இலக்கிய வடிவம். உதாரணத்திற்கு, பாஷோவின் இந்த மிகப்பிரபலமான கவிதையை பாருங்கள். இதற்கு ஏகப்பட்ட மொழியாக்கங்கள் உள்ளன. நான் டியோன் ஒடொனோல் என்பவரின் மொழியாக்கத்தை எடுத்து அதை தமிழாக்கி தருகிறேன்.


ஒரு பழைய அமைதியான குளம்
தொன்மையான நிச்சலத்தின் கண்ணாடி அது
ஒரு தவளை-குதிக்கும்-தொபுக்கடீர்

அமைதியான குளமொன்றில் தவளை சட்டென குதிக்கிறது; நீர் தெறிக்கிறது; ஒலி எழுகிறது. மீண்டும் ஒலி அடங்கி, குளம் நிலைபெற்று அமைதி திரும்புகிறது. இது தான் காட்சி. இது தனக்கு என்ன சொல்கிறது என்பது பாஷோவுக்கு முக்கியமில்லை. தவளை குதிக்கவில்லை; தவளை எழுப்பும் அந்த ஒலியே தவளையாக அவருக்குத் தெரிகிறது. இது ஏன் அப்படி எனக் கேட்டால் விளக்கமில்லை. ஒரு குழந்தைத்தனமான மனநிலை இது. நவீன கவிதை சிலநேரம் இதே மனநிலையை ஒரு முதிர்ச்சியுடன் முன்வைக்கும். ஆனால் ஹைக்கூ அதே குழந்தைமையுடன் அதை வெளிப்படுத்தும். நவீன வாழ்க்கை தரும் புரிந்துணர்வு, சமூக பொறுப்புணர்வு, விழிப்புணர்வு, அறைகூவல், கேள்வி கேட்கும் விருப்பம், விமர்சிக்கும் நோக்கு, அவதானிக்கும் மனப்பாங்கு ஆகியவற்றுக்கு ஹைக்கூவில் இடமில்லை. 

மற்றொரு ஹைக்கூவில் பாஷோ இருக்கும் குடிசையின் கூரை எரிந்து போகிறது. அட, இப்போது பௌர்ணமி நன்றாய் தெரிகிறது என பாஷோ களிப்படைகிறார். இதை நேர்மறையான அணுகுமுறை என கருத முடியாது. ஏனெனில் நிலவையாவது காண்கிறேனே என மகிழ்வது நேர்மறை எனில் அதன் பின்னால் கூரை எரிந்து விட்டதே எனும் கசப்பை காணாமல் தவிர்க்கும் புத்திசாலித்தனம் மறைந்திருக்கிறது. பாஷோவிடம் இப்படி எந்த அணுகுமுறையும் இல்லை. பேதையாய் வாழ்வின் சின்ன சின்ன அதிசயங்களை கண்டு வியப்பது, எதிலும் தர்க்க விளக்கங்களை நாடாதிருப்பது அவரது உளவியல். இது ஒரு ஜென் மனநிலையுமே. இதிலென்ன ஜென் உள்ளது?

தவளை நீருக்குள் குதிக்கிறது என சொன்னால் யாரும் கேள்வியின்றி ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஒருவேளை தவளை குதிக்கும் போது, அதாவது அது தாவி எழும்பி காற்றில் அரை நொடி மிதந்து செல்கையில், நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அது நீரை நெருங்கி அமிழ்ந்து நீர்ப்பரப்புக்குள் மறைவதை பார்க்கவில்லை. அதற்குள் மிக வேகமாய் தவளை மறைந்து விட்டது. ஆனால் தவளை குதித்ததை அது குதிப்பதை முழுக்க பார்க்காமலே எப்படி கண்டீர்கள்? அந்த தொபுக்கடீர் எனும் ஓசை தவளை குதித்து மறைந்த காட்சியின் இடத்தில் அந்த ஒலி வந்து அமர்கிறது. தவளைக்கு பதில் ஒலி குதிக்கிறது; நீர்ப்பரப்பை கிழித்து தவளை எழுப்பும் ஒலி தோன்றி மறைகிறது. இப்படியும் பார்க்கலாம் (சாரி கேட்கலாம்) தானே? இந்த இடத்தில் பார்ப்பதும் கேட்பதும் ஒன்றாகிறது.
கூரை எரிந்து விட்டது எனும் போது சட்டென புலனாகும் ஆகாயத்தை நாம் பார்க்க தவறுகிறோமே எனும் இரண்டாவது ஹைக்கூ முதல் சாத்தியத்தை மறுக்கவில்லை. கூரை எரிந்ததும் உண்மையே; அதே போல வானம் அப்போது வெகு சிலாக்கியமானது என்பதும் உண்மையே. நாம் ஒன்றை மறுத்து இன்னொன்றை விடாப்பிடியாய் கவனிப்பது அபத்தம் என்கிறது இக்கவிதை. இப்படி சொல்கிறது என்று கூட சொல்லக் கூடாது. இப்படியும் பார்க்கும் ஒரு மனநிலையை நமக்கு சித்தரிக்கிறது.




Comments

Sendhilkumar AV said…
இயற்கையில் எல்லாமே இரண்டு தன்மைகள்தான் ஆனால் இரண்டையும் வெவ்வேறாக பார்க்காமல் ஒரே மாதிரி கவனிப்பது அல்லது சும்மா இருப்பது அல்லது சம நிலையில் இருப்பது இயற்கையின் நோக்கத்தையே தகர்த்தெரிந்து விடுவது போல.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...