Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பிக்பாஸ்: நடிப்பு எவ்வளவு சதவீதம்?


Image result for பிக்பாஸ் 2

எல்லா ரியாலிட்டி ஷோக்களையும் போலத் தான் பிக்பாஸும் – பாதி உண்மை, பாதி பொய். எல்லாமே பாதி பாதி – பாதி சந்தோஷம், பாதி கண்ணீர், பாதி கோபம், பாதி அரற்றல், பாதி வெறுப்பு, பாதி பழிவாங்கல். இம்முறை பிக்பாஸில் 2விலும் எல்லாம் பாதிக்கு பாதி நடிப்பு.
 நீங்கள் தாடி பாலாஜி, அவரது மனைவி நித்யாவின் நடவடிக்கைகளை மகத், டேனியல், வைஷ்ணவி, நித்யா, ரித்விகா, மமதி ஆகியோரின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டால் இது பளிச்சென புரியும். பாலாஜி, நித்யா அளவுக்கு பிறரால் சிறப்பாய் நடிக்க முடியவில்லை. ஆகையால் அவர்களின் சச்சரவுகள், மோதல்கள் முன்னவர்களின் பிணக்கு போல எடுபடவில்லை.

பாலாஜியின் நகைச்சுவை நடிப்பு என்றுமே என்னை சினிமாவில் கவர்ந்ததில்லை. ஆனால் பிக்பாஸில் தன் முன்னாள் மனைவியிடம் எரிச்சல் காட்டுவது, வெறுப்பு கொட்டுவது, கசப்பில் தளர்வது என நுணுக்கமாய் நல்ல கட்டுப்பாட்டுடன் நடிக்கிறார். நித்யாவும் நல்ல தேர்ச்சியாய் நடிக்கிறார். அவர்களின் மோதல் ஏன் நிஜமில்லை என்கிறேன்?
முதலில், இது ரியாலிட்டி ஷோ. “நீயா நானாவில்” கூட இயக்குநரின் ஆதிக்கம் அதிகம். யாரை எந்தளவு உணர்ச்சிவசப்பட வைக்கலாம், ஒரு மோதலை எந்த எல்லை வரை நீட்டிக்கலாம் என அவரே தீர்மானிக்கிறார் என்பதை நான் அனுபவரீதியாய் கண்டிருக்கிறேன். “பிக்பாஸ்” வேறெப்படியும் இருக்கும் என நான் நம்பவில்லை.
அடுத்து, பாலாஜியையும் நித்யாவையும் ஷோவுக்கு கொணர்ந்ததே அவர்களது நட்சத்திர குடும்ப மோதலை முன்வைத்து தான் – அதைக் கொண்டு மேலும் சிக்கலான உணர்ச்சி நாடகங்களை அரங்கேற்றி டி.ஆர்.பியை எகிற வைக்க திட்டமிடுகிறார்கள் என்பது உலகத்துக்கே தெரிந்த ஒன்று. அதை நிரூபிக்கும் வண்ணம் ஷோவில் இப்போது அவர்கள் வேண்டுமென்றே மோதுகிறார்கள், உணர்ச்சிவசப்படுகிறார்கள், ஒரு வாரம் நித்யாவை வில்லியாக காட்டினால், அடுத்த வாரம் பாலாஜியை வில்லனாக்குகிறார்கள். யார் எதை செய்தால் மக்களின் கவனத்தை திருப்பலாம் என்பதில் பிக்பாஸ் மிகுந்த தெளிவுடன் இருக்கிறார் – இப்போதைக்கு நித்யாவை அழ வைப்பது தான் பெண் பார்வையாளர்களை கவர சிறந்த வழி. அது மட்டுமல்ல, உலகத் தமிழ் பெண்கள் அத்தனை பேருக்கும் தம் கணவர்கள் மீதுள்ள வெறுப்புக்கு, கடுப்புக்கு வடிகாலாக பாலாஜியின் ஆணாதிக்க செயல்களை வடிவமைக்கிறார்கள். அதை பிக்பாஸ் கமல் கண்டிக்கையில் பார்வையாளர் பலருக்கும் ஒரு பெரிய சமூக அநீதிக்கு அவர் தீர்வு சொல்லும் திருப்தி ஏற்படுகிறது. தமிழ் சமூகத்தின் அத்தனை நாகரிகமில்லாத, வன்மமான கணவர்களையும் பிக்பாஸ் செருப்பால் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டதாய் தாய்க்குலங்கள் மகிழலாம்.
நடிப்புக்கும் இயல்பான நடத்தைக்குமான வித்தியாசம் உடல் மொழி. நாம் நமது உணர்ச்சிகளை குரலாலும் கைகளை உயர்த்தி சைகைகளாலும் காட்டுகிறோம். அதை விட அதிகமாய் நாம் மொழியை நம்பி இருக்கிறோம். ஆனால் ஒரு தேர்ந்த நடிகன் உடல்மொழியை நேர்த்தியாய் நுணுக்கமாய் பயன்படுத்துவான். கோபமாய் நடக்கையில் தன் தோள்களை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், தன் நடையின் பாணியில் எப்படி மன உணர்வை காட்ட வேண்டும் என அவன் அறிந்திருப்பான். பாலாஜியிடம் இந்த தேர்ச்சி மட்டுமல்ல, கேமரா பிரக்ஞையும் நிச்சயம் இருக்கிறது. ஆச்சரியமாய், நடிப்பு அனுபவம் அற்ற நித்யாவும் இந்த ஷோவில் நன்றாய் நடிக்கிறார்.
இவர்களைப் போல மஹத்தோ டேனியோ கோபப்பட்டு புலம்புகையில் இந்த அளவுக்கு அது ஆற்றல் மிக்கதாய் இல்லை. அவர்களிடம் பிரயத்தனம் தெரிகிறது. ஏனெனில் அவர்கள் தேர்ந்த நடிகர்கள் அல்ல.
இன்னொரு விசயம் பாலாஜி கெட்டவார்த்தை சொல்வதாய் நித்யா வைக்கும் குற்றச்சாட்டு. இது தன் பெயரைக் கெடுக்கும், மக்கள் மத்தியில் தன் பிம்பம் சரியும், இதனால் தான் வெளியேற்றப்படலாம் என பாலாஜி அறிய மட்டாரா? பிற பங்கேற்பாளர்கள் மிக மிக கவனமாய் வார்த்தைகளை வெளி விடுகையில் இவர் மட்டும் ஏன் இவ்வளவு வன்மத்தை கொட்டுகிறார்? இயக்குநரின் அறிவுறுத்தலின் படியே இந்த கெட்டவார்த்தை சமாச்சாரம் அரங்கேறுகிறது என்பது வெளிப்படை.
 முதல் வாரத்தில் நித்யா மீது எல்லாரும் புகார் கூறியும், பாலாஜியின் இழிவான பேச்சு பற்றி கமலே கண்டிக்கும் நிலை வந்த பின்னரும் அவர்கள் வெளியேற்றப்படும் நிலை கூட ஏற்படவில்லை. இதுவும் நான் மேலே குறிப்பிட்ட விசயத்துக்கு ஒரு சான்று.
ஆனால் இது தொலைக்காட்சி நாடகம் அல்ல – யாரும் வசனத்தை மனனம் செய்து மிகை உணர்ச்சியுடன் இதில் நடிப்பதில்லை. ஒருவிதத்தில் இந்த ஷோவின் வெற்றியே இப்படி எதார்த்தமாகவும் எதார்த்தமற்றதாகவும் ஒரே சமயம் அது இருப்பதில் உள்ளது.
ஒருவித நடுவாந்தரமான உண்மைத்தன்மை கொண்ட நிகழ்ச்சி இது. பார்க்கிற அத்தனை பேரும் இதை உணர்கிறார்கள். ஆனால் தமக்கு தரப்பட்ட ஒற்றை வரிக் கதையைக் கொண்டு இந்த பங்கேற்பாளர்கள் எப்படி எல்லாம் தம் கற்பனையாலும் சில நேரம் நிஜமாகவே லயித்து போயும் நடிப்பும் உண்மையுமாய் வெளிப்படுகிறார்கள் என காண்பதில் ஒரு தனி சுவாரஸ்யம் உள்ளது. சொல்லப் போனால் நிஜ நடிப்பை விட இந்த ரியாலிட்டி நடிப்பு இன்னும் உண்மையாய் தெரிகிறது.
உதாரணமாய், நித்யாவின் வேதனை நடிப்பென்றால் அதில் அவரது நிஜவாழ்வின் நினைவுகளும் தாம் உள்ளோடுகின்றன. பாலாஜியின் எரிச்சலும் அப்படியே நமக்குத் தெரிகிறது. எது திட்டமிட்டது எது நிஜமாய் இதயபூர்வமாய் வெளிப்படுவது எனும் குழப்பத்தை பிக்பாஸ் ஏற்படுத்துகிறது. இதுவே இந்நிகழ்ச்சியின் வெற்றி!

Comments

Mu.Kasilingam said…
ரம்யா தான் பாலாஜீயின் மனைவியா இந்தனநாளா நித்தியா தான் பாலாஜீயின் மனைவின்னு நினைச்சிட்டுருந்தன் சரியா அந்த ஷோவை பார்த்துகுகிட்டு இருங்கீங்க சூப்பர் சார்
Anonymous said…
ஒரு கட்டத்துல நித்யாவை ரம்யாவா ஆக்கிட்டீங்க!!!
ரம்யா என்பதை நித்யா என மாற்றவும்
shiva said…
யாரோ யாருடைய மனைவியாகவோ இருந்து விட்டுப் போகட்டும் மிகத் துல்லியமான அவதானிப்பு இது பிக் ப்ளஸ் குறித்து

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...