முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனுஷ்யபுத்திரன் ஏன் எப்போதும் மதவாதிகளுக்கு இலக்காகிறார்?


Image result for h rajaImage result for manushya puthiran


தனது “ஊழியின் நடனம்” கவிதைக்காக தற்போது எச். ராஜா உள்ளிட்ட தமிழக இந்துத்துவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார் மனுஷ்யபுத்திரன். அது சற்றே சிக்கலான கவிதை; அதை எச். ராஜா படித்து புரிந்து கண்டித்து மனுஷை கைது செய்ய வேண்டுமென கோரியிருக்கிறார் என்பதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. இதுவரை எத்தனையோ முறை மனுஷ் மோடியையும் பாஜகவினரையும் கடுமையாய் தாக்கி எழுதியிருக்கிறார். ஏன் அப்போதெல்லாம் கொதிக்காத ராஜா இப்போது கொந்தளிக்கிறார்? ஏன் மனுஷின் தொலைபேசி எண்ணை பகிர்ந்து, அவரைத் தாக்கும்படி தன் கட்சியினரை தூண்டி விட்டு, மனுஷை நிலைகுலைய வைக்க முயல்கிறார்?

முகநூலில் ராஜன் குறை குறிப்பிட்டது போல இது ஒரு அரசியல் வியூகம் மட்டுமே. மனுஷ்யபுத்திரன் ஒரு இஸ்லாமியர், ஒரு இஸ்லாமியர் இந்துக்களை அவமதிக்கிறார் எனும் சித்திரத்தை உருவாக்குவதே எச். ராஜாவின் நோக்கம். ஆனால் அவர் நிச்சயம் வெல்லப் போவதில்லை; ஏனெனில் தமிழகத்தில் இஸ்லாமிய வெறுப்பின் சுவடுகள் இருந்ததில்லை; இஸ்லாமியரை மற்றமையாய் பார்க்கும் மரபோ வரலாறோ நமக்கு இல்லை. இஸ்லாமிய படையெடுப்பினால் நாம் நிலைகுலைந்த தருணங்கள் நம் வரலாற்றில் இல்லை. ஆனாலும் இது ஒரு சள்ளுபிடித்த பிரச்சனை தான். ஒருவர் சாக்கடையில் விழுந்து குதித்தால் சாலையில் போகிறவர்களின் மீது தான் சாக்கடை நீர் பட்டு அழுக்காகும். இந்துத்துவர்கள் அப்படி தம்மையும் சேறாக்கி வழிப்போக்கர்களையும் சேறாக்க போகிறார்கள்.
என்ன வியப்பென்றால், மனுஷ்யபுத்திரன் இதே போல முன்பு ஜனாய்லுதீன் தலைமையிலான பிற்போக்காளர்களால் தாக்கப்பட்டிருக்கிறார் – அப்போது அவர் (நக்கீரனில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில்) இஸ்லாத்தை அவமதித்து விட்டார் என சொன்னார்கள். அப்போது அவர் இஸ்லாத்தை விமர்சித்த ஒரு இஸ்லாமியர்; இப்போது அவர் இந்து தெய்வத்தை அவமதித்த இஸ்லாமியர். இஸ்லாத்தை விமர்சிப்பவர் இஸ்லாமியரே அல்ல தானே; அப்படி எனில் இஸ்லாத்தில் இருந்து வெளியே வந்து விட்ட மனுஷ், இப்போது “ஊழியின் நடனம்” எழுதிய மனுஷ், இஸ்லாமியர் அல்ல தானே?
இஸ்லாத்தின் உள்ளே இருந்தும் அடி, வெளியே இருந்தும் இடி என்பதே அவரது அவல நிலை.
ஒரு காரணம் மனுஷ் ஒரு முற்போக்காளர், தன் மதத்தை துறந்த முற்போக்காளர், என்பது. ஆனால் இந்தியாவில் நீங்களே மதத்தை துறந்தாலும் மதம் உங்களைத் துறக்காது.
இது மேற்கில் நிகழாது – அங்கே பெர்ட்னெண்ட் ரஸலை யாரும் கிறித்துவர் எனப் பார்க்க மாட்டார்கள்; அவர் ஒரு நாத்திகர். அவர் ஒருவேளை இஸ்லாத்தை விமர்சித்து எழுதியிருந்தால் இஸ்லாமிய அமைப்பினர் ஒரு கிறுத்துவர் தம்மை அவமதித்து விட்டார் எனப் பார்க்க மாட்டார்கள். நம் நாட்டில் மட்டுமே மதம் ஒரு நிழல் போல நம்மைத் தொடர்கிறது.
“ஊழியின் நடனம்” ஒரு அரசியல் கவிதை – ஆக அது நேரடியாகவும் கூர்மையாகவும் உள்ளது. நகைமுரணே அதன் தொனி.
“தேவி
உன் விடாய்க் குருதி
ஊழிக் காலங்களை
உருவாக்க வல்லதா?”
எனக் கேட்கையில் சபரி மலையில் பெண்கள் நுழைவதற்கு உரிமை கோரும் போராட்டத்தை, அதன் மீதான தெய்வ சாபமே இப்போதைய கேரள வெள்ளம் எனும் சர்ச்சையை குறிக்கிறார்.
“உன் விடாய்க் குருதியை
அசுத்தம் என்றார்கள்
தீட்டு என்றார்கள்
உன் குருதியின் வெள்ளம்
இந்த நிலத்தின் மீதிருக்கும்
அத்தனையையும்
முழுமையாக கழுவிக் கொண்டிருக்கிறது
இவ்வளவு தூய்மை
எங்களுக்கு வேண்டாம்”
இந்த இடத்தில் நகைமுரண் தோன்றுகிறது. தேவியின் விடாய்க் குருதி அல்ல, பக்தைகளின் விடாய்க் குருதி அல்ல, இந்துத்துவர்களின் வெறியே அசிங்கம் என சுட்டுகிறது. இந்த வெள்ளம் அதைக் கழுவுவதற்கான தேவ கோபம் என்கிறது. போதும், கருணை காட்டு என தெய்வத்தை கோருகிறது.
இது ஒரு எளிய கவிதை தான். ஆனால் இதன் நகைமுரணை புரிந்து கொள்ளும் திறன் நம் சங்கிகளுக்கு உண்டா எனத் தெரியவில்லை.
சரி, இது போன்ற சர்ச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மனுஷ் என்ன செய்ய வேண்டும்?
ஒன்றும் செய்ய முடியாது – அவர் எந்த மதத்தையும் சாராதவராய், எல்லா மதங்களையும் விமர்சிப்பவராக, அதே நேரம் தன் பிறப்படையாளத்தை அழிக்க முடியாதவராய் (அது அவர் தவறல்ல என்றாலும்) இருக்கும் வரையில், இது போன்ற தாக்குதல்கள் வந்து கொண்டே தான் இருக்கும்.

கருத்துகள்

ஆதி இவ்வாறு கூறியுள்ளார்…
முற்போக்களரா?காரியவாதியா? தான் வளர்த்த திறன் கொண்டு பணம்பண்ணும் வேடதாரிகள், ராஜாவும்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
dont support this poem. What a man knows about women's menstrual blood?
kirukan இவ்வாறு கூறியுள்ளார்…
(சிறுநீர்) ராஜா போன்ற சங்கிகளுக்கு புரிந்தது தெரிந்தது எல்லாம் சூழ்ச்சியும் வன்மமுமே. நகைமுரணமாவது மண்ணாவது.
சங்கிகளுக்கு சமாதி கட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.