Skip to main content

கலைஞரா கருணாநிதியா?


மின்னம்பலத்தில் வெளியாகி உள்ள எனது கட்டுரை “கலைஞரா கருணாநிதியா?” (https://www.minnambalam.com/k/2018/08/22/40) சமஸ் பட்டப்பெயரை அரசியலில் பயன்படுத்துவது குறித்து எழுதின குறிப்பின் மீதான எனது எதிர்வினை. பட்டப்பெயர்கள் பயன்படுத்துவதையும் ஜனநாயகத்தையும் எதிர்மைகளாய் நாம் காணக் கூடாது என இதில் பேசி இருக்கிறேன். இக்கட்டுரைக்கு பாராட்டுக்கள் வந்தவிதமாய் உள்ளன. கீழே சில கடிதங்கள்:

பத்திரிக்கையாளர் திரு.சமஸ் குறித்து தாங்கள் எழுதிய கட்டுரை சிறப்பாக இருந்தது.நன்றி வணக்கம் -
   
                   தோழமையுடன்
                 மசி.சுதேசி
அன்புள்ள மசி. சுதேசி
உங்கள் பாராட்டுக்கு நன்றி
ஆர். அபிலாஷ்
அன்பிற்கினிய அபிலாஷ் சந்திரன்,
தங்களுடைய கட்டுரையை மின்னம்பலத்தில் படித்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. பாராட்டுகள்.
* திரு. சமஸ், தனது உண்மையான பெயரான ஸ்டாலின் என்றே, அழைத்தால் மகிழ்வாரா...அல்லது சமஸ் என அழைத்தால் ஏற்பாரா?
* உறவுப் பெயர்கள் கூட, ஒருவரை மரியாதை நிமித்தமாக அழைக்க ஏற்படுத்தப்பட்டதே. அப்படி இருக்கையில், அவருடைய அப்பாவை சந்திரசேகர் என்றும், தாயை மலர் என்றும் அழைப்பாரா சமஸ். அதேபோல், மற்றவர்களும் அப்படி அழைத்தால் மிகவும் மகிழ்வாரா? என்பதை எல்லாம் சமஸ் சிந்தித்தாரா...என்று சொன்னால் சரியாக இருக்கும்.
* இதனை பொறுத்தவரை, அவர் கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து வந்தவர் என்பதால், இயல்பாக இருக்கக் கூடிய குழப்பம் இதிலும் இருப்பதாகவே எண்ணுகிறேன். கம்யூனிசத்தை மண்ணுக்கு ஏற்ப பொருத்திப்பார்க்காமல் தோற்பது போலவே, பெயர் என்பது வெறுமனே அழைப்பதற்காக... என்று வாதிடுவதாகவே எண்ணுகிறேன்.
தங்கள் தரப்பு வாதத்தை மிகச் சிறப்பாக எடுத்து வைத்திருந்தீர்கள் என்பதில் அய்யமில்லை.
நன்றி!
அன்புடன்
செழியன்.மா.
பத்திரிகையாளர்
அன்புள்ள மா. செழியன்
தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
அதேவேளை நான் உங்கள் கேள்விகளுடன் முழுக்க உடன்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஒருவர் பொதுவெளியில் தன்னை எப்படி முன்வைக்கிறாரோ அப்படியே அவரை அழைப்பதே நியாயம் என சமஸ் சொல்கிறார். அவர் தான் சமஸ் என அறியப்பட விரும்பினால் நாமும் அவரை அவ்வாறே அழைத்தல் வேண்டும். தாயை பெயர் சொல்லி அழைக்கலாம் என்றும் சமஸ் கோரவில்லை. இந்த வழமைகளை, மரபான முறைகளை அவர் மறுக்கவில்லை.
அரசியல் களத்தில் மட்டுமே பட்டப்பெயர்கள் மக்களிடம் இருந்து தலைவர்களை முழுக்க வேறுபடுத்தி, அவர்களை அரியணையில் அமர வைத்து, நம்மை மன்னர் ஆட்சிக் காலத்தை பின்னோட்டி செல்கின்றன என்பதே சமஸின் குற்றச்சாட்டு. ஜனநாயகத்தில் அனைவரும் சமம். ஆக, ஏன் ஒரு தலைவரை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது?
என் வாதம் இவ்வாறு நேரடியாய் புரிந்து கொள்ளக் கூடாது, பெயர் மட்டுமே ஜனநாயகத்தை உருவாக்கவோ அழிக்கவோ செய்யாது என்பதே. என் ஊரில் தொட்டில் குழந்தையின் ஆண் குறியை கிள்ளி விட்டு “செல்லத் தாயளி” என்பார்கள். அது வசை அல்ல. “உன்னையெல்லாம் போடணும்டா” என நண்பர்களிடையே பேச்சு அடிபடுவதைக் கண்டிருக்கிறேன். இந்த மிகைகளைப் போன்றே “கலைஞர்”, “அம்மா” மாதிரியான பட்டப்பெயர் பயன்பாடு இருக்கிறது என்பதே என் பார்வை.
கலைஞர் குறித்த சிறப்பு நீயா நானாவில் இமையம் பேசும் போது மனம் உடைந்து பேச முடியாமல் அழுததைத் கண்டேன். அந்த அழுகையை விட உன்னதமான மொழி உண்டா? ஒரு எழுத்தாளனாய் அவர் இன்னும் கராறாய் பகுத்தறிவு நோக்குடன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளை முன்வைத்திருக்க முடியும். ஆனால் ஒரு கண்ணீர்த் துளியின் கொதிப்புடன் தன் ஆழ்மன உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியதற்கு இணையாக தன் சொற்களைக் கொண்டு, தர்க்கத்தைக் கொண்டு பேசியிருக்க முடியுமா? முடியாது.
நாம் அவ்வப்போது பகுத்தறிவை கைவிட வேண்டும் என்பதே நான் சமஸிடம் சொல்ல விரும்புவது! (அதற்காய் கலைஞருக்கான அஞ்சலிக் கூட்டத்தில் அவரும் போய் அழ வேண்டும் என நான் கோரவில்லை.) மக்களை புரிந்து கொள்ளும் போது, மக்களிடம் உரையாடும் போது பகுத்தறிவே நமது முக்கிய தடை.
நன்றி
ஆர். அபிலாஷ்

Comments

முப்பது வருடங்களுக்கு முன்னர் பொது இடமொன்றில் அவர் பெயரைச் சொல்லி நான் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து ஒரு "தொண்டர்" என் பிடரியில் தட்டி பட்டப்பெயரைச் சொல்லிப் பேசச் சொன்னார். திடீர் குறுக்கீட்டினால் என்ன என்று நான் புரிந்து கொள்வதற்குள் இரண்டாம் முறையும் பிடரியில் ஒரு "தட்டு" வாங்கினேன்! அது ஒரு அதிகாலை நேரம்!

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...