முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமுக தலைவர் முதல்வரானால்?

Image result for ஸ்டாலின்



திமுக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.
ஸ்டாலினின் ஆளுமை குறித்த எனது அவதானிப்பு இது:

ஸ்டாலின் வெளிமுகமாய் இனிமையாய் நிதானமாய் தெரிகிறவர். ஆனால் உள்முகமாய் சற்றும் கடுமையாய், சர்வாதிகாரத் தன்மை கொண்டவர். இந்த உள்முகம் அவர் முதல்வர் ஆன பின் நிச்சயம் வெளிப்படும்.
ஸ்டாலின் ஜெயலலிதா அளவு சர்வாதிகார முரட்டுத்தனத்துடன் செயல்பட மாட்டார் எனினும், ஜெயலலிதாவைப் போன்றே ஒருவித கார்ப்பரேட் அரசியலை அவர் முன்னெடுப்பார். அவ்விதத்தில் அவர் ஆட்சி ஜெயலலிதா ஆட்சியை ஒத்திருக்கும். கராறான நிர்வாகம், பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை, மக்களிடம் எளிமையுடன் கருத்துரையாடும் (ஆனால் சொத்து சேர்ப்பதில் சளைக்காத) அமைச்சரவை என அவரது ஆட்சி தனித்துவத்துடன் இருக்கும்.
கட்சியை பொறுத்த மட்டில் கலைஞரின் காலத்தில் இருந்த அனைவரையும் அணைத்துப் போகும், பல்முனை அதிகார முகாம்கள் கொண்ட அமைப்பாய் ஸ்டாலின் தலைமையிலான திமுக இருக்குமா என்பது ஐயமே. அடுத்த முதல்வராக அவர் பொறுப்பேற்ற பின், கட்சிக்குள் தனக்கு போட்டியாக எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ளவர்களை கூட விட்டு வைக்க மாட்டார். கட்சிக்குள் ஒவ்வொரு குண்டூசி முனையையும் தனது எந்திரப் பிடியில் வைத்திருக்க வேண்டும் எனும் முனைப்பும் தயக்கமற்ற செயல்திறனும் அவரிடம் இருக்கும். ஆக, சகோதர சகோதரி அதிகார வட்டங்கள் அவர் முன் முழுக்க மண்டியிட்டு அடையாளமற்று போய் விடுவார்கள். எதிரிகளைப் பொறுத்தமட்டில் ஆர்ப்பாட்டம் அற்ற  ஆனால் ஆபத்தான ஒரு அரசியல்வாதியாக அவர் இருப்பார். ஜெயலலிதா கலைஞரை நள்ளிரவில் கைது செய்ததைப் போன்ற வெறியை, வன்மத்தை அவர் தன் விரோதிகள் மீது காட்ட மாட்டார். ஆனால் அப்படி காட்டாமலே புன்னகைத்தபடி விரோதிகளை காணாமல் அடித்து விடுவார்.
ஒரு முதல்வராக ஸ்டாலின் மிக நல்ல நிர்வாகியாக இருப்பார். சென்னை வெள்ளம் மீண்டும் வந்தால் ஜெயலலிதாவை போல செம்பரம்பாக்கம் ஏரியை நிச்சயம் திறந்து விட மாட்டார். ஜெயலலிதாவின் நிதானமின்மை ஸ்டாலினிடம் நிச்சயம் இராது. உணர்ச்சிரீதியிலும் உடல்நலம் சார்ந்தும் அவர் நிலையாக இருப்பார். ஆகையால் அதிர்ச்சிக்குரிய ஆபத்தான முடிவுகளை எடுக்க மாட்டார். இது சாதகமானது. ஆனால், அதேவேளை, ஜெயலலிதாவின் பல எதிர்பாராத நலத்திட்டங்களுக்கு (அம்மா உணவகம்) இணையான மாறுபட்ட நலத்திட்டங்களை ஸ்டாலின் கொண்டு வருவாரா என்பது ஐயமே. ஒன்றுக்கு நூறு தடவை யோசித்து சில நல்ல யோசனைகளையும் கூட அவர் தள்ளிப் போட வாய்ப்புண்டு.
ஏன் ஸ்டாலினை ஜெயலலிதாவுடன் தொடர்ந்து ஒப்பிடுகிறேன் என்றால், ஆட்சி நிர்வாகத்தைப் பொறுத்த மட்டில் அவருக்கு ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை உண்டு என அறிவேன். ஆகையால் தான் இந்த ஒப்பீடு.
ஸ்டாலினிடம் தமிழகத்தின் எதிர்காலம் பாதுகாப்பானது; அவரது ஆட்சிக்காலம் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I 100% agree this
bandhu இவ்வாறு கூறியுள்ளார்…
இது போல நடக்க சாத்தியக்கூறுகள் மிக அதிகம்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.