திமுக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.
ஸ்டாலினின் ஆளுமை குறித்த எனது அவதானிப்பு இது:
ஸ்டாலின் வெளிமுகமாய் இனிமையாய் நிதானமாய் தெரிகிறவர். ஆனால்
உள்முகமாய் சற்றும் கடுமையாய், சர்வாதிகாரத் தன்மை கொண்டவர். இந்த உள்முகம் அவர் முதல்வர்
ஆன பின் நிச்சயம் வெளிப்படும்.
ஸ்டாலின் ஜெயலலிதா அளவு சர்வாதிகார முரட்டுத்தனத்துடன் செயல்பட
மாட்டார் எனினும், ஜெயலலிதாவைப் போன்றே ஒருவித கார்ப்பரேட் அரசியலை அவர் முன்னெடுப்பார்.
அவ்விதத்தில் அவர் ஆட்சி ஜெயலலிதா ஆட்சியை ஒத்திருக்கும். கராறான நிர்வாகம், பொருளாதார
வளர்ச்சிக்கு முன்னுரிமை, மக்களிடம் எளிமையுடன் கருத்துரையாடும் (ஆனால் சொத்து சேர்ப்பதில்
சளைக்காத) அமைச்சரவை என அவரது ஆட்சி தனித்துவத்துடன் இருக்கும்.
கட்சியை பொறுத்த மட்டில் கலைஞரின் காலத்தில் இருந்த அனைவரையும்
அணைத்துப் போகும், பல்முனை அதிகார முகாம்கள் கொண்ட அமைப்பாய் ஸ்டாலின் தலைமையிலான திமுக
இருக்குமா என்பது ஐயமே. அடுத்த முதல்வராக அவர் பொறுப்பேற்ற பின், கட்சிக்குள் தனக்கு
போட்டியாக எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ளவர்களை கூட விட்டு வைக்க மாட்டார். கட்சிக்குள்
ஒவ்வொரு குண்டூசி முனையையும் தனது எந்திரப் பிடியில் வைத்திருக்க வேண்டும் எனும் முனைப்பும்
தயக்கமற்ற செயல்திறனும் அவரிடம் இருக்கும். ஆக, சகோதர சகோதரி அதிகார வட்டங்கள் அவர்
முன் முழுக்க மண்டியிட்டு அடையாளமற்று போய் விடுவார்கள். எதிரிகளைப் பொறுத்தமட்டில்
ஆர்ப்பாட்டம் அற்ற ஆனால் ஆபத்தான ஒரு அரசியல்வாதியாக
அவர் இருப்பார். ஜெயலலிதா கலைஞரை நள்ளிரவில் கைது செய்ததைப் போன்ற வெறியை, வன்மத்தை
அவர் தன் விரோதிகள் மீது காட்ட மாட்டார். ஆனால் அப்படி காட்டாமலே புன்னகைத்தபடி விரோதிகளை
காணாமல் அடித்து விடுவார்.
ஒரு முதல்வராக ஸ்டாலின் மிக நல்ல நிர்வாகியாக இருப்பார்.
சென்னை வெள்ளம் மீண்டும் வந்தால் ஜெயலலிதாவை போல செம்பரம்பாக்கம் ஏரியை நிச்சயம் திறந்து
விட மாட்டார். ஜெயலலிதாவின் நிதானமின்மை ஸ்டாலினிடம் நிச்சயம் இராது. உணர்ச்சிரீதியிலும்
உடல்நலம் சார்ந்தும் அவர் நிலையாக இருப்பார். ஆகையால் அதிர்ச்சிக்குரிய ஆபத்தான முடிவுகளை
எடுக்க மாட்டார். இது சாதகமானது. ஆனால், அதேவேளை, ஜெயலலிதாவின் பல எதிர்பாராத நலத்திட்டங்களுக்கு
(அம்மா உணவகம்) இணையான மாறுபட்ட நலத்திட்டங்களை ஸ்டாலின் கொண்டு வருவாரா என்பது ஐயமே.
ஒன்றுக்கு நூறு தடவை யோசித்து சில நல்ல யோசனைகளையும் கூட அவர் தள்ளிப் போட வாய்ப்புண்டு.
ஏன் ஸ்டாலினை ஜெயலலிதாவுடன் தொடர்ந்து ஒப்பிடுகிறேன் என்றால்,
ஆட்சி நிர்வாகத்தைப் பொறுத்த மட்டில் அவருக்கு ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை உண்டு
என அறிவேன். ஆகையால் தான் இந்த ஒப்பீடு.
ஸ்டாலினிடம் தமிழகத்தின் எதிர்காலம் பாதுகாப்பானது; அவரது
ஆட்சிக்காலம் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.