முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“தவமாய் தவமிருந்து”


Related image

“தவமாய் தவமிருந்து” பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்றரை மணி நேரப் படம். சோகத்தையும் செண்டிமெண்டையும் பிழிகிறார்கள். சண்டைக்காட்சி, நகைச்சுவை போன்ற திணிப்புகளோ வில்லனோ நாயகனுக்கான நேரடி சவால்களோ இல்லை. ஆனால் நேரம் போவதே தெரியாமல் பார்க்க வைக்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் சாமர்த்தியமான திரைக்கதை - பத்து நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு சிக்கல் வருகிறது – அதற்கான தீர்வு, அத்தீர்வு பயனளிக்கிறதா, இல்லையென்றால் வேறு என்ன தீர்வுகள் உண்டு என கதை நகர்கிறது.

 துவக்க காட்சிகள் ஒன்றில் ராஜ்கிரண் தன் பிள்ளைகளுக்கு தீபாவளி புதுத்துணி, பட்டாசு வாங்க வேண்டும். பணமில்லை. அப்போது ஒரு அரசியல் தலைவரின் வருகையை ஒட்டி போஸ்டர் ஆர்டர் வருகிறது. ராஜ்கிரண் அதை எடுத்து மும்முரமாய் செய்து முடிக்கிறார். இரவில் அதை ஒப்படைத்து பணம் வாங்க நினைக்கும் போது தலைவர் வரவில்லை, அதனால் போஸ்டர்கள் வேண்டாம் என மறுக்கிறார்கள். “இல்லை இந்த பணத்தை நம்பித் தான் இருக்கிறேன். தயவு செஞ்சு வாங்கிக்கிங்க” என கெஞ்சுகிறார். மறுதரப்பு மறுத்து போனை துண்டிக்கிறது. ராஜ்கிரண் தளர்ந்து போய் நாற்காலியில் சாய்கிறார். அப்போது நமக்கும் சேர்ந்து மனம் பதறுகிறது. எப்படியாவது அவருக்கு பணம் கிடைத்திடாதா என ஏங்குகிறோம். அடுத்து, ராஜ்கிரண் தன் பிரஸ் வேலையாளிடம் தன்னிடம் உள்ள சொற்ப பணத்தைக் கொடுத்து பண்டிகை கொண்டாட சொல்கிறார். ஆனால் அவரோ முதலாளியின் நெருக்கடியை உணர்ந்து பணத்தை திரும்பத் தருகிறார். ஆனால் இப்போது பிரச்சனை தீரவில்லை. இன்னும் பணம் வேண்டுமே! தெரிந்தவரிடம் போய் கடன் கேட்கிறார். “தீபாவளின்னா எல்லாருக்கும் செலவிருக்கும்ணே! இப்போ போய் கேட்கிறீங்களே” என்று மறுக்கிறார்கள். அப்போது ஒரு போன் அழைப்பு வருகிறது. போஸ்டர் ஒட்ட ஆள் வேண்டும். கூலி ஆயிரம் ரூபாய். அவர் சென்று வேலையாளை அழைத்து வந்து அந்த ஆர்டரை எடுத்துக் கொண்டு இரவெல்லாம் உழைத்து பணத்தைப் பெற்று புதுத் துணி எடுத்து, பட்டாசு வாங்கி வீட்டுக்குப் போய் பகலெல்லாம் அலுப்பு தீர படுத்துறங்குகிறார்.
இந்த காட்சித் தொடர் (sequence) நெகிழ்வாகவும் வேகமாகவும் போகிறது. ஒரு பிரச்சனை எழுந்து அதற்கு தீர்வு கிடைத்து விடும் போது பார்வையாளர்களும் சுலபத்தில் பாத்திரத்துடன் ஒன்றி விடுகிறார்கள்.
மற்றொரு அருமையான காட்சி பத்மபிரியா பிரசவமாகி ஆஸ்பத்திரியில் இருக்க, கட்டணம் செலுத்த பணமின்றி சேரன் அலைய, அவரது ராஜ்கிரண் வந்து பணம் செலுத்திப் போவது. ராஜ்கிரணுக்கு தன் மகனுக்கு திருமணமானது, குழந்தை பிறந்துள்ளது அதுவரை தெரியாது. ஆகையால் அவர் வந்து உதவும் சாத்தியம் உள்ளதாகவே நாம் எண்ண மாட்டோம். ஆனால் ராஜ்கிரண் உதவுவதற்கு ஒரு வாய்ப்பை அமைத்து அழகான எதிர்பாரா திருப்பத்தை சேரன் தந்திருப்பார்.
இப்படி, காட்சிக்குக் காட்சி நம்மை வருந்திக் கலங்க வைத்து உடனே நிம்மதியாக பெருமூச்சு விடவும் வைக்கிறார்கள். “குக்கூ” போன்ற படங்களில் வருவது போல இதில் யாரும் தொடர்ந்து துன்பம் மட்டும் படுவதில்லை. அப்படி வந்தால் படம் இழுவையாகும். துன்பத்துக்கு அடுத்தபடியாய் அதில் இருந்து தற்காலிக விடுதலை. அதை அடுத்து இன்னொரு பிரச்சனை. இதில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் எனும் கேள்வி…. இந்த பாணி காட்சி அமைப்பில் பாக்யராஜ் தான் உஸ்தாத். பாக்யராஜின் ஒரு படத்தில் அவர் வாழ்க்கை வெறுத்துப் போய் தற்கொலை பண்ணுவதற்காய் மலை மீது ஏறுவார். உண்மையிலேயே குதித்து விடுவாரோ என பார்வையாளர்கள் கையை பிசைவார்கள். மலை உச்சியை அடைந்து விடுவார். அடுத்த அடியை எடுத்து வைத்தால் பள்ளத்துக்கு போகாமல் நேராக ஒரு மேட்டுக்கு சென்று விடுவார். அந்த மலையின் அமைப்பு அப்படி. ஒரு துன்பியல் காட்சி சட்டென நகைச்சுவையாகி விடும். அதுவும் பாக்யராஜின் உடல்மொழிக்கு இது அசத்தலாக பொருந்தி விடும்.
காட்சி அமைப்பில் சேரனும் பாக்ய்ராஜுக்கு அடுத்தபடியாய் ஒரு சின்ன உஸ்தாத் தான்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I think the admin of this web site is truly working hard for
his website, as here every stuff is quality based stuff.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.