முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேஸ்புக் ஏன் உங்களுக்கு வருமானம் தருவதில்லை?


வனிதா விஜயகுமார் அண்மையில் தான் யுடியூப் சேனல் ஆரம்பித்தார். அவரது ஆரம்ப கட்ட பிரபல்யம், அடாவடிப் பேச்சு, துணிச்சல், சுயபிரஸ்தாபம், சுவாரஸ்யமான மேக் அப் காணொளிகள், தொடர்ந்து பார்க்க வைக்கும் அதே நேரம் ரொம்ப சொதப்பலான, அசுத்தமான சமையல் குறிப்பு காணொளிகள் (ஒருமுறை அவர் செய்த நெய்ச்சோறு குழைந்து விட்டது, பிட்ஸா பாதி வேகாமல் வந்தது - ஆனாலும் எனக்கு வலிக்கலியே என்பதைப் போல அதை தானும் சாப்பிட்டு தன் குழந்தைகளையும் சாப்பிட வைத்து ரொம்ப நல்லா இருக்கில்ல என சொல்ல வைத்தார்.) என பதிவேற்று நிறைய ரசிகர்களைப் பெற்றார். அடுத்து தன் திருமணத்தை நேரலையாகக் காட்டி, அதில் பீட்டர் பாலை உதட்டோடு முத்தம் பதித்து, அதன் பிறகு இதைக் கண்டு பீட்டர் பாலின் மனைவி கண்டிக்க, அதை வனிதா கண்டிக்க, நடுவே லஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, அடிக்கொரு தரம் துப்புகிற சூர்யா தேவி என ஆளாளுக்கு நடுவே புகுந்து அடிதடி கலவரம் பண்ண கடந்த சில வாரங்களாக மொத்த தமிழகமே வனிதாவைப் பற்றித்தான் பேசுகிறது. இதில்யாரும்மா நீ வனிதா?” என யுடியூபே கேட்கும் அளவுக்கு அவரது யுடியூப் புகழ் கூரையைப் பிய்த்துக் கொண்டு சென்று விட்டது. அவரது ஒரு காணொளிக்கு சராசரியாக ஐந்து லட்சம் பார்வைகள் கிடைக்கின்றன. அவர் சராசரியாக ஒரு மாதம் யுடியூபில் இருந்து 8 லட்சத்தில் இருந்து 25 லட்சம் சம்பாதிக்கிறார் என ஒரு செய்தி பார்த்தேன். வனிதா தன் வாழ்வில் ஒரு படத்துக்கான கால்ஷீட்டில் கூட இதில் பாதி சம்பாதித்திருக்க மாட்டார். யுடியூப் அப்படி வனிதாவுக்கு மட்டுமல்ல வேறு பல சாமான்ய பிரபலங்களுக்கும் பொன் முட்டையிடும் வாத்து ஆகி விட்டது. அன்னம்மா சேட்டத்தி என கேரளாவில் ஒரு கிழவி இருக்கிறார். அவருக்கு உள்ளூர் உணவுகள் மட்டுமே பண்ணத் தெரியும். குழறிக் குழறி அவர் பேசுவது பாதி பேருக்குப் புரியாது. அவருடன் சமைக்கும் மகன் தான் அவரது மலையாளத்தை மலையாளத்துக்கு மொழிபெயர்ப்பார். ஆனால் பாருங்கள் அவரை இன்றைய தலைமுறைக்கு பிடித்துப் போய் விட்டது. இந்த கடைசி காலத்தில் மாதம் பல லட்சம் சம்பாதிக்கும் வி..பி ஆகி விட்டார். இதே போலத்தான் village food factory டேடி ஆறுமுகத்துக்கும் லக்கடித்தது. அவரது மகனின் இயக்குநர்  ஷங்கர் பாணியில் பிரம்மாண்டமாக பொதுவெளியில் சமைக்கிற ஸ்டைல் மக்களின் கவனத்தைக் கவர்ந்தது, அதோடு பார்வையாளர்களுக்கு தாத்தாவின் வெகுளியான பேச்சும் எளிமையும் ரசிக்கும்படியாக இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு போராடி வாழ்ந்த டேடி ஆறுமுகம் இப்போது ரொம்ப ஈஸியாக லட்சங்களில் கொழிக்கிறார். எங்கள் ஊரை சேர்ந்த ஸ்டெபி அக்காவைப் பற்றி சொல்லவே வேண்டாம். யுடியூப் சமையல் வீடியோ உலகில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் இந்தியாவில் இருந்திருந்தால் யுடியூபில் வரும் பணத்தில் பல பங்களாக்கள் வாங்கி இருக்கலாம்


யுடியூபில் சில மணிநேரம் செலவிட்டு உழைக்கிறவர்களுக்கு அதுவே வருமானம் தரும் தொழிலாகிறது என்றால் அநேகமாய் 20 மணிநேரம் இங்கேயே பேஸ்புக்கில் குப்பை கொட்டுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சாதாரணமாய் ஒவ்வொரு பதிவுக்கும் சராசரியாய் 10,000 விருப்பக்குறிகள் பெறுகிறவர்கள் உண்டு. எனில் அவர்களுக்கான views என்பது நிச்சயம் 50,000 இருக்கும். முன்பு அம்புஜா சிமி எனும் பேக் ஐடி ஒவ்வொரு படத்துக்கும் எளிதாய் ஒரு லட்சம் விருப்பக்குறிகள் பெற்றுக்கொண்டிருந்தார். எனில் views எவ்வளவு இருக்கும்? இவர்களை வைத்து தான் பேஸ்புக்கில் விளம்பரம், அதில் இருந்து வருமானம் எல்லாம் கல்லா கட்டுகிறது. ஆனால் பேஸ்புக் இதுவரை நயா பைசா யாருக்கும் தந்ததில்லை. இந்த பேஸ்புக் பிரபலங்கள் இந்த உழைப்பை யுடியூபில் காட்டி இருந்தால் இந்நேரம் சொகுசாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் பேஸ்புக் அவர்களை அதை விட சுகமான பேர், கவனம், சமூகத்தின் பகுதியாக இருக்கிற கிளர்ச்சியை தருகிறதே, தோழிகளை, தோழர்களைப் பெற, அதைக் கொண்டு வேறு லௌகீக பயன்களைப் பெற உதவுகிறதே. நீங்கள் தினமும் சில மணிநேரம் மட்டுமே யுடியூப் பார்க்க முடியும், ஆனால் பேஸ்புக்கிலோ 18 மணிநேரம் இருந்தாலும் அலுக்காது. ஆக பேஸ்புக்கில் இருப்பதே அதற்கான உளவியல் பிரதிபலனை, லாபத்தைத் தருகிறது என ஸூக்கர்பர்க் நினைத்திருக்கலாம். உங்களுக்கு எல்லாம் இனி காசு வேற தரணுமா என்பது அவரது அணுகுமுறை. நம்மாட்களும் கரும்பு தின்னக் கூலியா என இளித்துக் கொண்டு இருந்து விட்டார்கள்.


 ஆனால் யுடியூப் ஏற்படுத்தும் தாக்கம் பலரையும் இனி பேஸ்புக்கில் இருந்து யுடியூபை நோக்கி நடை கட்ட செய்யும். இதை உணர்ந்துள்ள பேஸ்புக் இனி காணொளிப் பதிவுகளுக்கு விளம்பர வருமானம் ஏற்படுத்தித் தர திட்டமிடுவதாக சொல்கிறார்கள். இந்த திட்டம் வெற்றி பெறுமானால், என்ன நடக்கும்

பேஸ்புக்கில் எழுதுவதை வெகுவாகக் குறைத்து காணொளிகள் போடத் தொடங்குவோம். அதில் சரியான உடல்மொழி, தோற்ற மெருகு, திறன் கொண்டவர்கள் நட்சத்திரங்கள் ஆவார்கள். அவர்களுக்கு லட்சங்களில் சம்பாதிப்பார்கள். விருப்பக்குறிகளுக்காக பதிவுகள் எழுதுவோர், அதைக்கொண்டு மார்தட்டுவோர் காணொளி நட்சத்திரங்களை நோக்கி வயிற்றெரிச்சல்பட்டு எழுத்துக்கு விடை கொடுப்பார்கள். பிளாகுக்கு நடந்தது, இதற்கும் நடக்கும். பேஸ்புக் சிறுபத்திரிகைகள், வணிக பத்திரிகைகளின் இடத்தை எடுத்துக் கொண்டது ஒரு முடிவுக்கு வரும். எழுத்தை சீரியஸாக எடுப்பவர்கள் மட்டும் பதிவர்களாக நிலைப்பார்கள்.

இப்படி சில நன்மைகளும், தீமைகளும் ஏற்படும்.  

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
புளு சட்டையோட வருமானம் எல்லாவற்றயும் விட பெரிது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...