முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேஸ்புக் ஏன் உங்களுக்கு வருமானம் தருவதில்லை?


வனிதா விஜயகுமார் அண்மையில் தான் யுடியூப் சேனல் ஆரம்பித்தார். அவரது ஆரம்ப கட்ட பிரபல்யம், அடாவடிப் பேச்சு, துணிச்சல், சுயபிரஸ்தாபம், சுவாரஸ்யமான மேக் அப் காணொளிகள், தொடர்ந்து பார்க்க வைக்கும் அதே நேரம் ரொம்ப சொதப்பலான, அசுத்தமான சமையல் குறிப்பு காணொளிகள் (ஒருமுறை அவர் செய்த நெய்ச்சோறு குழைந்து விட்டது, பிட்ஸா பாதி வேகாமல் வந்தது - ஆனாலும் எனக்கு வலிக்கலியே என்பதைப் போல அதை தானும் சாப்பிட்டு தன் குழந்தைகளையும் சாப்பிட வைத்து ரொம்ப நல்லா இருக்கில்ல என சொல்ல வைத்தார்.) என பதிவேற்று நிறைய ரசிகர்களைப் பெற்றார். அடுத்து தன் திருமணத்தை நேரலையாகக் காட்டி, அதில் பீட்டர் பாலை உதட்டோடு முத்தம் பதித்து, அதன் பிறகு இதைக் கண்டு பீட்டர் பாலின் மனைவி கண்டிக்க, அதை வனிதா கண்டிக்க, நடுவே லஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, அடிக்கொரு தரம் துப்புகிற சூர்யா தேவி என ஆளாளுக்கு நடுவே புகுந்து அடிதடி கலவரம் பண்ண கடந்த சில வாரங்களாக மொத்த தமிழகமே வனிதாவைப் பற்றித்தான் பேசுகிறது. இதில்யாரும்மா நீ வனிதா?” என யுடியூபே கேட்கும் அளவுக்கு அவரது யுடியூப் புகழ் கூரையைப் பிய்த்துக் கொண்டு சென்று விட்டது. அவரது ஒரு காணொளிக்கு சராசரியாக ஐந்து லட்சம் பார்வைகள் கிடைக்கின்றன. அவர் சராசரியாக ஒரு மாதம் யுடியூபில் இருந்து 8 லட்சத்தில் இருந்து 25 லட்சம் சம்பாதிக்கிறார் என ஒரு செய்தி பார்த்தேன். வனிதா தன் வாழ்வில் ஒரு படத்துக்கான கால்ஷீட்டில் கூட இதில் பாதி சம்பாதித்திருக்க மாட்டார். யுடியூப் அப்படி வனிதாவுக்கு மட்டுமல்ல வேறு பல சாமான்ய பிரபலங்களுக்கும் பொன் முட்டையிடும் வாத்து ஆகி விட்டது. அன்னம்மா சேட்டத்தி என கேரளாவில் ஒரு கிழவி இருக்கிறார். அவருக்கு உள்ளூர் உணவுகள் மட்டுமே பண்ணத் தெரியும். குழறிக் குழறி அவர் பேசுவது பாதி பேருக்குப் புரியாது. அவருடன் சமைக்கும் மகன் தான் அவரது மலையாளத்தை மலையாளத்துக்கு மொழிபெயர்ப்பார். ஆனால் பாருங்கள் அவரை இன்றைய தலைமுறைக்கு பிடித்துப் போய் விட்டது. இந்த கடைசி காலத்தில் மாதம் பல லட்சம் சம்பாதிக்கும் வி..பி ஆகி விட்டார். இதே போலத்தான் village food factory டேடி ஆறுமுகத்துக்கும் லக்கடித்தது. அவரது மகனின் இயக்குநர்  ஷங்கர் பாணியில் பிரம்மாண்டமாக பொதுவெளியில் சமைக்கிற ஸ்டைல் மக்களின் கவனத்தைக் கவர்ந்தது, அதோடு பார்வையாளர்களுக்கு தாத்தாவின் வெகுளியான பேச்சும் எளிமையும் ரசிக்கும்படியாக இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு போராடி வாழ்ந்த டேடி ஆறுமுகம் இப்போது ரொம்ப ஈஸியாக லட்சங்களில் கொழிக்கிறார். எங்கள் ஊரை சேர்ந்த ஸ்டெபி அக்காவைப் பற்றி சொல்லவே வேண்டாம். யுடியூப் சமையல் வீடியோ உலகில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் இந்தியாவில் இருந்திருந்தால் யுடியூபில் வரும் பணத்தில் பல பங்களாக்கள் வாங்கி இருக்கலாம்


யுடியூபில் சில மணிநேரம் செலவிட்டு உழைக்கிறவர்களுக்கு அதுவே வருமானம் தரும் தொழிலாகிறது என்றால் அநேகமாய் 20 மணிநேரம் இங்கேயே பேஸ்புக்கில் குப்பை கொட்டுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சாதாரணமாய் ஒவ்வொரு பதிவுக்கும் சராசரியாய் 10,000 விருப்பக்குறிகள் பெறுகிறவர்கள் உண்டு. எனில் அவர்களுக்கான views என்பது நிச்சயம் 50,000 இருக்கும். முன்பு அம்புஜா சிமி எனும் பேக் ஐடி ஒவ்வொரு படத்துக்கும் எளிதாய் ஒரு லட்சம் விருப்பக்குறிகள் பெற்றுக்கொண்டிருந்தார். எனில் views எவ்வளவு இருக்கும்? இவர்களை வைத்து தான் பேஸ்புக்கில் விளம்பரம், அதில் இருந்து வருமானம் எல்லாம் கல்லா கட்டுகிறது. ஆனால் பேஸ்புக் இதுவரை நயா பைசா யாருக்கும் தந்ததில்லை. இந்த பேஸ்புக் பிரபலங்கள் இந்த உழைப்பை யுடியூபில் காட்டி இருந்தால் இந்நேரம் சொகுசாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் பேஸ்புக் அவர்களை அதை விட சுகமான பேர், கவனம், சமூகத்தின் பகுதியாக இருக்கிற கிளர்ச்சியை தருகிறதே, தோழிகளை, தோழர்களைப் பெற, அதைக் கொண்டு வேறு லௌகீக பயன்களைப் பெற உதவுகிறதே. நீங்கள் தினமும் சில மணிநேரம் மட்டுமே யுடியூப் பார்க்க முடியும், ஆனால் பேஸ்புக்கிலோ 18 மணிநேரம் இருந்தாலும் அலுக்காது. ஆக பேஸ்புக்கில் இருப்பதே அதற்கான உளவியல் பிரதிபலனை, லாபத்தைத் தருகிறது என ஸூக்கர்பர்க் நினைத்திருக்கலாம். உங்களுக்கு எல்லாம் இனி காசு வேற தரணுமா என்பது அவரது அணுகுமுறை. நம்மாட்களும் கரும்பு தின்னக் கூலியா என இளித்துக் கொண்டு இருந்து விட்டார்கள்.


 ஆனால் யுடியூப் ஏற்படுத்தும் தாக்கம் பலரையும் இனி பேஸ்புக்கில் இருந்து யுடியூபை நோக்கி நடை கட்ட செய்யும். இதை உணர்ந்துள்ள பேஸ்புக் இனி காணொளிப் பதிவுகளுக்கு விளம்பர வருமானம் ஏற்படுத்தித் தர திட்டமிடுவதாக சொல்கிறார்கள். இந்த திட்டம் வெற்றி பெறுமானால், என்ன நடக்கும்

பேஸ்புக்கில் எழுதுவதை வெகுவாகக் குறைத்து காணொளிகள் போடத் தொடங்குவோம். அதில் சரியான உடல்மொழி, தோற்ற மெருகு, திறன் கொண்டவர்கள் நட்சத்திரங்கள் ஆவார்கள். அவர்களுக்கு லட்சங்களில் சம்பாதிப்பார்கள். விருப்பக்குறிகளுக்காக பதிவுகள் எழுதுவோர், அதைக்கொண்டு மார்தட்டுவோர் காணொளி நட்சத்திரங்களை நோக்கி வயிற்றெரிச்சல்பட்டு எழுத்துக்கு விடை கொடுப்பார்கள். பிளாகுக்கு நடந்தது, இதற்கும் நடக்கும். பேஸ்புக் சிறுபத்திரிகைகள், வணிக பத்திரிகைகளின் இடத்தை எடுத்துக் கொண்டது ஒரு முடிவுக்கு வரும். எழுத்தை சீரியஸாக எடுப்பவர்கள் மட்டும் பதிவர்களாக நிலைப்பார்கள்.

இப்படி சில நன்மைகளும், தீமைகளும் ஏற்படும்.  

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
புளு சட்டையோட வருமானம் எல்லாவற்றயும் விட பெரிது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...