முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு உன்னத கலைஞனுக்கு கிடைத்த விருது!

2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருதை (“செல்லாத பணம்” நாவலுக்காக) இமையம் பெறுகிறார் என அறிந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அண்ணனுக்கு வாழ்த்துக்களும் பேரன்பும்!
 தமிழ் இலக்கிய சூழலில் இமையத்துக்கு என சில தனிச்சிறப்புகள் உண்டு.

1) பேசுபொருளே பிரதானம் எனும் ஒரு நிலைப்பாடு பொதுவாக பல புனைவெழுத்தாளர்களுக்கு உண்டு. நாவல்களின் பின்னட்டையிலும் விமர்சனங்களிலும் யாரும் பயணிக்காத ஒரு புதிய களத்தில் இந்நாவல் புகுந்து புறப்படுகிறது என சிலாகிப்பு இருக்கும். ஆனால் இமையம் அதற்கு ஈடாக புனைவுமொழியின் தொழில்நுட்பம் குறித்த அக்கறைகள் கொண்டவர். மாதக்கணக்கில் எடுத்துக் கொண்டு தன் நாவலை திருத்தி கச்சிதமாக உருவாக்குபவர். இது சார்ந்து இளம் எழுத்தாளர்களுக்கு உதவ முன்வருபவர். 

2) இமையத்தின் புனைவுகளில், குறிப்பாக நாவல்களில், பல்குரல் தன்மை உண்டு. இது பலவித பாத்திரங்களை பேச வைப்பதில்லை. மாறாக நாவலுக்குள் இயங்கும் நான்கைந்து முக்கிய பாத்திரங்களின் தனித்துவமான் உலகங்களை அவர்களுடைய உரையாடல்கள், எண்ண ஓட்டங்கள் வழி உருவாக்கி அவை ஒன்றுக்கொன்று சோடை போகாதபடி பார்த்துக் கொள்வது. நாவல் கச்சிதமாக அமையும் போது கதைசொல்லியான பிரதான பாத்திரத்துக்கு ஈடாக ஒரு துணைப்பாத்திரத்தின் நியாயங்களும் உலகமும் இருக்கும். சட்டென ஒரு யு-டர்ன் எடுத்து அவரது பார்வையில் இருந்து மொத்த நாவலையும் திரும்பப் படிக்க முடியும். அவரது மிகப்பிரபலமான படைப்பான “பெத்தவனின்” சிறப்பு இதுதான். ஆங்கிலத்தில் இலக்கிய கோட்பாட்டாளர்கள் இதை dialogism என்கிறார்கள். குறிப்பாக மிகைல் பக்தின் இந்த சமநிலையிலான கதையுலகங்கள் தஸ்தாவஸ்கியின் நாவல்களில் ஒரு படைப்புக்குள் நிகழும் போது அது ஒன்றையொன்று எப்படி மோதி அழிக்கிறது, ஒரு திக்கற்ற நிலையை ஏற்படுத்துகிறது என விரிவாக விவாதித்துள்ளார். நான் வாசித்த வரை இந்த எழுத்துமுறையில் தமிழில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்துள்ளது இமையம் மட்டுமே. மற்ற எழுத்தாளர்களுக்கு வசனம், உரையாடல், எண்ணவோட்டம் போன்றவை ஒரு கருத்தை, உணர்ச்சியை சொல்வதற்கான கருவி. ஆனால் இமையத்துக்கோ அவை ரத்தமும் சதையுமான இருப்புகளை, முன்னுக்குப் பின் முரணான இருப்புகளை உருவாக்குவதற்கான ஒரு ஆயுதம். 

3) நகைமுரண் - நகைமுரண் என்பது ஒன்றை சொல்லி இன்னொன்றை முரணாக உணர்த்துவது மட்டுமல்ல. இலக்கியத்தில் அது மொழியை, கதைசொல்லியின் கோணத்தை மிக நுட்பமாக போகிற போக்கில் தலைகீழாக்குவதும் தான். ஜெயமோகனின் “அறம்”, “பல்லக்கு” போன்ற கதைகளில் இது நேரடியாக இருக்கும். ஆன ல் சு.ரா (“பல்லக்கு தூக்கிகள்”), புதுமைப்பித்தன் போன்றோர் இதில் வித்தகர்கள் என்றாலும் தன் உணர்ச்சிகரமான கதைகளில், நாவல்களில் இமையம் நகைமுரணை தொழில்படுத்தும் விதம் சிலாக்கியமானது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் “பெத்தவன்” குறுநாவல். அதிலுள்ள நகைமுரண் மிக மிக நுணுக்கமாக இருந்ததால், அது புரியாததாலே அது வெளிவந்த சமயம் அவர் பெண்ணியவாதிகளால் விமர்சிக்கப்பட்டார். 

4) இன்று தமிழில் பெரிதாகக் கொண்டாடப்படும் படைப்பாளிகளின் நாவல்களில் உபரியாக பல பக்கங்கள் இருக்கும். ஆனால் இமையத்தின் நாவல்களில் ஒரு சிறிய விவரணை, வசனத்தை கூட சுலபத்தில் நீங்கள் தூக்க முடியாது (அப்படி எடுக்க முடிந்தால் அவரது பிரயத்தனத்துக்குப் பின்பும் அது சரியாக எழுதப்படவில்லை எனப் பொருள்). அவ்வளவு கச்சிதமாக இருக்கும்.

5) இமையம் எந்த குழுவாதத்தையும் மேற்கொள்ளாமல், எந்த இலக்கிய மடாதிபதிகளையும் ஜால்ரா அடிக்காமல் தன் எழுத்து திறன், கலை நேர்த்தி, சமூக அக்கறையை மட்டுமே நம்பி இயங்குபவர். நன்றாக எழுதினால் எழுத்து தான் வாசகனைப் போய் அடையும், அதற்கு யாருடைய பரிந்துரையும், இதழ்களின் ஆதரவும் தேவையில்லை என்பது அவருடைய நம்பிக்கை. அந்த நம்பிக்கையே இப்போது வென்றிருக்கிறது.

6) அவரே கோரிக் கொள்ளாத போதும் நாம் அவரை ஒரு ‘தலித்’ எழுத்தாளராக மட்டுமே சுருக்கிக் கொள்வதில் நியாயமில்லை. அவர் ஒரு உன்னதக் கலைஞன். டாட்.

இமையத்தைப் பற்றி அதிகமாகப் பேசி அவரது படைப்புகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அப்படி செய்தால் தமிழில் செறிவான ஒரு இலக்கிய தடம், கலையிலும் சமூகத்திலும் ஒரே அளவு அக்கறையுடன், புரிதலுடன் இயங்கும், சுயபிரதாபங்கள், குருமடங்கள் இல்லாத ஒரு எழுத்தாள மரபு உருவாகும். அத்திசையில் நடையிடுவோம்!

கருத்துகள்

Senthil Prabu இவ்வாறு கூறியுள்ளார்…
valthukkal Imayam ayya:)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...