ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணம் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்குவதா, அவருக்கு நியாயமான முறையில் அடக்கம் பண்ண விடாமல் திமுக பாகுபாடாக நடந்துகொண்டதா, ஆம்ஸ்ட்ராங் உண்மையில் ஒரு போராளியா, அரசியல் தலைவரா அல்லது தாதாவா, இது ஆருத்திரா மோசடிப் பண கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தின் போதான மோதலின் விளைவாக நடந்ததா போன்ற கேள்விகள் திட்டமிட்டு எழுப்பப்படுகின்றன என நினைக்கிறேன். இன்னொரு பக்கம், சூத்திரர்கள் vs தலித்துகள் எனும் முரணும் கூர்தீட்டப்பட்டு மக்களிடம் பிரிவினையை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. இதை வேறெவரையும் விட பாஜக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது - அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் தலித்துகள் திமுக - அதிமுக என வாக்களிப்பது பாஜகவை மிகவும் சோர்வடைய வைக்கிறது (அண்மையில் நடந்த மக்களைத் தேர்தலிலும் இந்தியாவின் வேறு மாநிலங்களிலும் பழங்குடியினரைத் தவிர தலித்துகள் இவ்வாறே பாஜகவுக்கு எதிராக வாக்களித்தார்கள்.). இந்த களேபரத்தில் நாம் கேட்காத ஒரு முக்கிய கேள்வி உண்டு:
இந்த படுகொலை காவல்துறைக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த படுகொலை என்றல்ல எல்லா முக்கிய பிரமுகர்களின் கொலையும் ஏற்கனவே தெரிந்துதான் நடக்கின்றன. ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்ததும் காவல் துறை வந்து நிமிஷ நேரத்தில் லபக்கென்று குற்றவாளிகளைப் பிடிக்கிறது. ராஜீவ் காந்தி படுகொலையின் போதும் இது நடந்தது. இந்த துரிதமும் சுலபத்தன்மையும் இயல்புமீறியவை, சந்தேகத்துரியவை. அதுவும் குற்றவாளிகள் உடனே சரணடைவது எல்லாம் எதார்த்தத்தை மீறியது. ஏதோ போன் பண்ணி வரச்சொல்வதைப் போல இது நடக்கிறது.
சரி, தெரிந்தே நடந்தது எனில் ஏன்? எப்போதுமே இதற்கான பதில் பணம் மற்றும் அதிகாரத்துக்காக என்பதே. இதை குற்றவாளிகளுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் கொடுத்தது - அதாவது குற்றத்திற்கு நிதியளித்தது - யார்? ஆனால் இந்த கேள்வியை யாருமே கேட்க மாட்டார்கள் (திருமா லேசாக இதை எழுப்பினார், ஆனால் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.). எந்த பத்திரிகையாளரும் சற்று விசாரித்து இதைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். ஸ்வாதி படுகொலையைப் போன்றே இந்த கொலையும் பல ஊகங்களுடன் முடிந்துபோகும்.
இதற்குப் பின்னிருக்கும் அந்த பெரிய கை இந்நேரம் இங்கு நடக்கும் விவாதங்களைப் பார்த்து கால் மேல் காலிட்டு சிரித்துக் கொண்டிருப்பார். பெரும் பணமும் அதிகாரமும் படைத்தவராக இருப்பது ரொம்ப ஜாலியானது தான் - நீங்கள் மனிதர்களின் சிந்தனையை, நடத்தையை கட்டுப்படுத்த முடியும். கிட்டத்தட்ட ஒரு கடவுளைப் போல.
அந்த கிட்டத்தட்ட கடளுக்காக நாம் நமது நேரத்தையும் ஆற்றலையும் ஏன் வீணடித்து முட்டாளாகிறோம்?
Comments