முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீன, அமெரிக்க, இந்தியப் பெருமுதலாளிகளின் சதுரங்கம்

 



இந்த போர் நிறுத்தம் எத்தனை நாட்கள் நீடிக்கும் எனத் தெரியவில்லை, ஆனால் ஏதோ அஜித்குமாரின் GBU போல கன்னாபின்னாவெனப் போய்க்கொண்டிருந்த யுத்தம் கரெண்ட் போனதைப் போல நின்றுவிட்டது. தாக்குதல், மறுதாக்குதல், நான் தாக்கவில்லை, அவன்தான் முதலில் தாக்கினான், மொத்தமா அழிச்சிட்டு போட்டியை ஆரம்பித்தலில் இருந்தே ஆடுவோம் எனப் போய்க்கொண்டிருந்த கொடுங்கனவை அமெரிக்காவும், பின்னணியில் சீனாவுமாக போதும் விடுங்க புரோ எனச் சொல்லி நிறுத்தியிருக்கிறார்கள். நிம்மதியாக இருக்கிறது. திரும்ப அடிப்போம், பாடம் கற்றுக்கொடுப்போம், ராணுவத்துடன் நிற்போம், பேரணி நடத்துவோம் என்பதெல்லாம் கேட்க நன்றாக இருக்கும், ஆனால் குண்டு விழுந்து சாகும் மக்களுக்கு இப்போர் ஈடுகட்ட முடியாத பெரும் இழப்புகளைக் கொண்டு வந்திருக்கிறது.

அடுத்து, இதன்பின்னுள்ள வணிகச் சக்திகளின் நோக்கம். இந்தப் போர் ஆரம்பித்ததும் சீனாவின் ராணுவப் பங்குகள் எழுச்சி கண்டன. அதாவது இப்போரை ஆயுத நிறுவனங்களில் முதலீடு பண்ணுபவர்கள் உற்று கவனிக்கிறார்கள். ஆயுதச் சந்தைக்கு இது உத்வேகம் அளித்திருக்கிறது. சீனா பாகிஸ்தானுக்கு நவீன ஆயுதங்களைக் கொடுப்பதன் ஒரு நோக்கம் இது. அடுத்ததாக, சீனா பாகிஸ்தானில் செய்துவருகிற பல ஆயிரம் மில்லியன் மதிப்புள்ள கட்டமைப்புப் பணிகளுக்கு அங்கு மக்களிடையே எதிர்ப்புள்ளது. ராணுவத்துக்கு நற்பெயரை உருவாக்கி அரசாங்கத்தைக் காப்பற்றி போராட்டங்களையும் மட்டுப்படுத்த இப்போர் உதவியிருக்கக் கூடும். அதற்கு அடுத்ததாக, இப்போரில் ஒருவேளை அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் இரண்டாவது, மூன்றாவது கட்டங்களுக்கு பாக்-இந்திய ராணுவங்கள் சென்றிருந்தால், அது சீனாவுக்கே உதவியிருக்கும் என மேற்கத்திய ஊடகங்கள் கருதுகின்றன - ஏனென்றால் சீனாவின் ராணுவம் இந்திய ராணுவத்தைவிட பலம்பொருந்தியது. இந்தியாவை ஒரு நெருக்கடியில் தள்ளி எல்லையில் உள்ள தம் ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்தவும் தம் கூட்டாளியான பாகிஸ்தானை உத்வேகப்படுத்தவும், இந்தியாவின் வணிக முடிவுகளில் தலையிடும் சட்டாம்பிள்ளையாக அமெரிக்காவின் இடத்தை எடுக்கவும் இப்போரை சீனா பயன்படுத்திருக்கும். ஆனால் அதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. அது உள்ளே புகுந்து ஆட்டத்தைக் கலைத்துவிட்டது. இந்தியாவுக்கும் முதலீடு சார்ந்து சீனா முக்கியமான பங்காளியாக இருப்பதால் சீனாவுடன் போர் என்பது இந்திய பெருமுதலாளிகளுக்குப் பாதகமாகும். அதனால் இந்திய அரசும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.

எப்படிப் பார்த்தாலும் சீனா-பாகிஸ்தான்-இந்தியா-அமெரிக்கா எனும் நால்முனை யுக்தி விளையாட்டாகவே இப்போர் இருக்கிறது. சதுரங்கத்தைப் போல எதிராளி எடுக்கப்போகும் நகர்வை முன்னிறுத்தி நாம் ஒரு நகர்வைச் செய்தால் அவர் இன்னொரு முடிவெடுத்தாலும் கடைசியில் இருவருமே எங்குமே நகர முடியாதபடிக்கு கள அமைப்பு மாறியிருக்கிறது. பெல்ஹாம் தீவிரவாதத் தாக்குதல் இந்த ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கியதே தவிர இது அதற்கான போர் அல்ல. ஒருவேளை இந்த வணிக நகர்வையும் பேச்சுவார்த்தையும் ஆரம்பிப்பதற்காகக் கூட பாகிஸ்தானை சீனா தூண்டிவிட்டு தீவிரவாதிகளுக்கு ஆணையிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. பாகிஸ்தான் அரசுக்கு எந்தளவுக்கு பயன்கிடைத்தது எனத் தெரியவில்லை. சர்வதேச நாணய நிதியம் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு 7 மில்லியன் டாலர்களை கடனாகக் கொடுத்திருக்கிறது. அதாவது பாகிஸ்தான் இப்போரை முன்னிட்டு சீனாவின் பக்கம் அப்பட்டமாய் சாய்வதால் ஒரு பெரிய தொகையைக் கொடுத்து அவர்களுடைய நன்றியுணர்வை தம் பக்கம் திருப்ப அமெரிக்கா முயல்கிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் இந்தக் கன்னத்தில் சீனா முத்தமிட்டாலும் வாங்கிக்கொள்கிறது, டிரம்ப் உதட்டைக் குவித்தாலும் இன்னொரு கன்னத்தை உடனடியாகக் கொடுக்கிறது. இரண்டு காதலர்களின் பொறாமையையும் தூண்டிவிட்டால் தனக்கு நிறைய பரிசுகள் கிடைக்கும் என அது நம்புகிறது. பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு கற்பனைத் தெலுங்கு வில்லன். தெருவில் சும்ம போய்க்கொண்டிருந்த இந்தியாவைப் பார்த்து "என் கையைப் பிடிச்சு இழுத்திட்டான்" எனக் கூச்சலிட்டு சண்டைக்கும் இழுத்தத்தில் அது முதல்வெற்றியைப் பெற்றது. அதைக் கொண்டு அது சீனாவையும் அமெரிக்காவையும் தன் வசம் வைத்துக்கொள்ள முயல்கிறது. சீனாவுக்கு தான் அமெரிக்காவுக்கு இணையாகப் போட்டியில் இருப்பதே லாபம் தான். அதுவும் 200% இறக்குமதி வரியை டிரம்ப் அறிவித்து சீனாவின் சந்தையை உருக்குலைத்த பிறகு இது அமெரிக்காவைச் சீண்டும் ஒரு கௌரவச் சண்டையாகி விட்டது.

அமெரிக்காவின் ஐ.எம்.எப் கடன், சீனாவின் ராணுவ உதவியையும் கருத்திற்கொண்டால் இப்போரில் பாகிஸ்தானுக்கு நட்டத்தைவிட லாபமே அதிகம். பாகிஸ்தான் ராணுவமும் பாகிஸ்தான் மக்கள் மத்தியில் தம்மை வலுப்படுத்தி இருக்கிறது. இந்திய அரசின் பிம்பத்துக்கு இது மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது, மோடி நாயகனாகிவிட்டார், எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியை மிமிக்றி செய்யும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். காங்கிரஸை பாஜக கிட்டத்தட்ட தன் பாடி சோடாவாகியது. ஷஷி தரூர் மருவொன்றை வைத்துக்கொண்டு பாஜகவின் கட்சி பீரங்கியாக முழங்கினார். ஊடகங்கள் முழுநேர பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டன. இந்தியா என்றால் அது ஆளுங்கட்சி, இந்தியா என்றால் அது மோடி எனும் பிம்பத்தை மீண்டும் நிறுவ எதிர்க்கட்சியும் ஊடகங்களும் கைகோர்த்தன. எதிர்க்கட்சியின் யுக்தியில் மிகப்பெரிய சறுக்கல் இது.

உயிரை இழந்தவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்துக்கும் தாம் இந்த பொருளாதார சதுரங்க ஆட்டத்தில் ஈடுசெய்ய முடியாத நட்டம் ஏற்பட்டது. இதை இவர்கள் முழுக்க தேசபக்தியின் பெயரில் ஆடியதால் பகுத்தறிவுடன் யாரும் கேள்விகேட்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் அது எப்படி இப்போரின் முடிவில் சீன நிறுவனங்களின், சீனாவில் முதலீடும் பண்ணப்போகும் இந்திய பெருமுதலாளிகளின் வங்கிக்கணக்குகளில் பணம் குவியும், ஐ.எம்.எப் கடனை முழுங்கப்போகும் பாகிஸ்தான் ராணுவமும், அரசியல்வாதிகளும் விருந்தில் மகிழ்ச்சியாக சியர்ஸ் சொல்ல்லப் போகிறார்கள் எனும் கேள்விக்கு தேசபக்தர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். இந்தப் போரை உலகப் பெருமுதலாளிகள் தம் அவகாசத்துக்கும் தேவைக்கும் ஏற்ப நடத்தி முடித்துவிட்டார்கள். போர் நிறுத்த அறிவிப்பு வந்ததுடன் பாகிஸ்தான் சீனா, அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கு குறிப்பாக நன்றிசொல்லி இந்தியாவை எதிரி நேசம் என அறிவித்தது இதனால்தானோ எனத் தோன்றுகிறது. இந்த 'பெரியண்ணன்களைத்' தம் மேஜைக்கு வரவழைக்க, அவர்களுடைய நிதியுதவியைப் பெற, அவர்களுடைய வணிகப் பேச்சுவார்த்தைக்கு தம்மை சைட் டிஷ்ஷாக மாற்றிக்கொள்ளும் மானமற்ற பிறவி தானெனக் காட்டிக்கொள்ள பாகிஸ்தானுக்கு இப்போர் உதவியது. அதற்கு பாகிஸ்தானுக்கு இந்தியா என்றும் 'எதிரி நாடாக' நீடிக்க வேண்டும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இந்த போருக்கான சந்தர்ப்பம் நீடித்தாலே இந்தியாவின் எல்லை சார்ந்த முடிவுகளில் தலையிடவும், வணிக முடிவுகளைத் தீர்மானிக்கவும் அவசியம். சொல்லப்போனால் இந்தியாவிடம் யாருக்கு அதிக அதிகாரம் எனும் கேள்வியில் அமெரிக்கா தனக்கே எனச் சொல்லி துண்டு போட்டிருக்கிறது, ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை, எதிர்காலத்தில் நாங்களும் அவ்விடத்துக்கு வருவோம் என சீனா அமெரிக்காவுக்கு உணர்த்திருக்கிறது. அப்படித்தான் முன்பு (அமெரிக்க சார்பு அரசுக்கும் வியட்நாமிய படைகளை எதிராகவும்) கம்போடியா போரிலும், அதன்பிறகு இலங்கையின் உள்நாட்டுப் போரிலும் சீனா தலையிட்டு ஆயுதங்களை வழங்கி அந்நாடுகளின் சந்தைகளைக் கைப்பற்றி கடனாளி ஆக்கியது.
இந்த ஆதிக்க நாடுகளின் அரசுகள் பேசுவதும் தம் நாட்டு முதலீடுகளின் வசதிக்காகத்தான். நாம் இவர்களுடைய வலையில் எலிகளாக இருக்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.