முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாதி திறந்த கையை அசைத்தசைத்துப் பேசுபவர்கள்

சுந்தர ராமசாமி - மனித மனதின் உள் அடுக்குகளில் பயணிக்கும் எழுத்தாளர்! கதை  சொல்லிகளின் கதை - பாகம் 35 | Life history of Tamil Writer Sundara Ramasamy  - the story of ...

நான் படிக்கத் தொடங்கிய காலத்தில் சு.ராவின் மொழிநடை மீது பலரையும்போல எனக்கும் பெரும் மயக்கம் இருந்தது. பரந்து பட்டு நான் வாசிக்கத் தொடங்கியபோது சு.ராவைப் போன்ற பிற நடையாளர்களையும் கண்டேன். கருத்தாக்கம், கருத்தியல், தத்துவம், கோட்பாடு என என் வாசிப்பின் நாவு நீண்டு நீண்டு புதிய ருசிகளைக் கண்டது. ரெண்டாயிரத்தில் எனக்கு ஒரு புதிய எண்ணம் உண்டானது - இலக்கிய நடையில் உருவகங்கள் அதிகமாக வருவதால் கருத்துக்களைத் தெளிவாக, கூர்மையாகச் சொல்ல முடிவதில்லை, எதையும் நேராக தெளிவாகச் சொல்ல வேண்டும், அப்பட்டமாக எழுத வேண்டும், 'சொல்லலாம்', 'கூறப்படுகிறது' 'நினைக்கலாம்' எனும் கமறல்கள், நழுவல்கள் தேவையில்லை என்று நினைத்தேன். அதன் பிறகு விமர்சன வாசிப்பும் தத்துவமும் என் பிரக்ஞையில் அதிக இடம் பிடித்த காலம் வந்தது. எதையும் நேரடியாகச் சொல்லி அதன் காரண காரியங்களை விளக்கி, சான்றுகளைத் தொகுத்துச் சொல்லி ஒரு புதிய பார்வையுடன் முடிக்க வேண்டும் என நம்பினேன். முனைவர் பட்ட ஆய்வின் காலம் வந்தது. எதையும் புதிதாக எழுதும் முன்பு அதைக் குறித்து பிறர் என்ன சொல்லியிருக்கிறார்கள் எனத் தெரிந்து அதைத் தொகுத்துச் சொல்லி அதில் இருந்து நான் எப்படி வேறுபடுகிறேன் எனச் சொல்ல வேண்டும் எனும் நம்பிக்கை ஏற்பட்டது. மீண்டும் ஒரு தத்துவத் தேடல் காலம் வந்தது. நான் ஒரு கருத்தை அதன் பின்னுள்ள தத்துவக் கருத்தை, தர்க்கத்தை, அதில் பிடிபடாமல் நழுவும் முரண்களை நாடி விவாதிக்க விரும்பினேன். இப்படி என் உரைநடை கடந்த கால் நூற்றாண்டில் மாறி வந்துள்ளது. தெரியாததைப் பற்றிப் பேசக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, பாவனை கூடாது என்பதைத் தாண்டி வேறு பல விசயங்கள் மாறிவிட்டன.

அண்மையில் சு.ராவின் ஒரு பழைய கட்டுரையைப் படித்தேன். ஒரு நவீன கற்பனாவாத எழுத்தாளரின் கதைகளைக் குறித்த அவரது நளினமான, அதே நேரம், கடுமையாக விமர்சனம். ஒவ்வொரு சொற்றொடரிலும் ஒரு உருவகம் தோன்றும், உவமைகளின் எதிர்பாராத போக்குவரத்து நெரிசல், யுடர்ன்கள் இருக்கும். அதில் ஒரு சுவையும் அழகும் இருக்கும். ஒவ்வொன்றையும் நின்று படித்து ரசித்தேன். இதைத்தானே ஒரு காலத்தில் எதிர்த்தோம் என்று தோன்றியது. இதுவும் நன்றாகத் தானே இருக்கிறது, இதைத் தவிர்க்க வேண்டும் என ஏன் நினைத்தேன் எனத் தோன்றியது. சு.ரா எதையெல்லாம் பேசத் தவறுகிறார் என்று எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது. இதே போன்ற நடையில் டி.எஸ் எல்லியட் இன்னும் ஆழமாக எழுதிள்ள கட்டுரைகள் நினைவுக்கு வந்தன. ஆனால் எலியட்டிடம் கூட சு.ராவின் திகைப்பூட்டும் அழகு இல்லை. கேரளாவின் குன்றும் பள்ளங்களுமான இருமருங்கும் ஏறி ஏறி நின்று பார்க்கும் மரங்களும், மறைந்து சிரிக்கும் செடிகளும், பலவித வர்ணங்கள் கொண்ட ஆகாயமும் எப்படி இருக்குமே அப்படியான நடை. இன்று அனேகமாக யாரும் இவ்வாறு எழுதுவதில்லை. என் நடை மட்டுமல்ல, தமிழின் உரைநடையே வெகுவாக மாறியிருக்கிறது.
இந்த நடையுடன் சு.ராவிடம் ஒரு உறுதியான நம்பிக்கை இருந்தது. அதையும் அவர் பயமின்றி முன்வைத்தார். தடுமாற்றமே இல்லை. தடுமாற்றம் நம் வாக்கிய அமைப்பிலேயே தெரிந்துபோகும். சுராவிடம் தன் நினைத்ததை உங்களை நம்ப வைக்க வேண்டும் எனும் முனைப்பே அதிகம், அதை நீங்கள் தவறென நினைத்துவிடுவீர்களோ எனும் கவலையில்லை. புனைவில் மட்டுமே வருகிற நுட்பமான் உருவகம் மொழியைக் கொண்டு சில புதிரான விசயங்களை புனைவெழுத்தைக் குறித்துச் சொல்ல முயல்கிறார். இவற்றை நேராகச் சொல்லலாமே எனத் தோன்றினாலும் இது கூட அழகுதானே. இதற்குள் அபிநயம் காட்டி ஒருவரை இழுக்கிற நாட்டியப் பாங்கு இருக்கிறது. மூக்கிலேயே குத்தி காலரைப் பற்றி இழுத்துப் போகக் கூடாது, நைசாக அழைத்து நைசாகச் சொல்லி ஒருவர் தன்னை ஏற்கவும் மறுக்கவும் வெளியைத் தக்க வைக்க வேண்டும் எனும் ஜனநாயக நம்பிக்கை இருக்கிறது.
சு.ராவிடம் இருந்து நிறைய மாறுபடலாம், ஆனால் ரசிக்காமல் இருக்க இயலாது. அவரிடம் உள்ள ஒன்று நம் காலத்தில் இல்லையென்பதால். அழகு. பாதி மலர்ந்த மலரின் அழகு. அந்தி இன்னும் முடியவில்லை, நான் பாதி திறந்த நிலையில் உங்களைப் பார்ப்பேன் எனும் மலரின் பாதி ப்பரிமளித்த அழகு. பாதி அழகு இன்று நமக்குள் ஒருவித பதற்றத்தை அளிப்பதைப் போல, இதற்கு அப்பால் என்ன, ஒன்றுமில்லைதானே எனும் கேள்வியை எழுப்புவதைப் போல அவர் காலத்தில் இல்லை.
பக்கத்தில் உள்ளவரின் கையைப் பிடிவாதமாகத் திறந்து பார்த்து சூனியம்தானே என்று சொல்லி இளிக்கும் போக்கும் அவர்களிடம் இல்லை. பாதி திறந்த கையை அசைத்தசைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய மொழியும் அவ்வாறே இருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...