முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா: அதி-புத்திசாலித்தன யுக்தியும் விளைவும்


 

எதிரியை யுக்திபூர்வமாகக் கையாள்வது என்று சொல்வார்கள். இதுவரைக்கும் பாஜகவை பல கிறிஸ்துவ சிறுபான்மை நிறுவனங்கள் அவ்வாறுதான் நடத்தி வந்தார்கள் என்பது என் அவதானிப்பு. தொடர்ந்து கிறிஸ்துவ சிறுபான்மை நிறுவனங்களில் படித்தும் பணியாற்றியும் வந்தவன் எனும் நிலையில் நான் இதை அருகில் இருந்து கவனித்திருக்கிறேன் - இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தபோது என்

வகுப்பில் அமெரிக்காவில் பலியானவர்களுக்காக பிரார்த்தனை பண்ணினார்கள். எதுக்குடா அவங்களுக்காக நீங்க பண்றீங்க என யோசித்தபோதே அப்போதிருந்த அரசியல் விளங்கியது: அப்போது உலகம் முழுக்க கிறிஸ்துவர்களில் ஒரு பகுதியினர் யூத ஆதரவு, இஸ்லாமிய எதிர்ப்பு எனும் வெளியுறவு யுக்தியை மதசார்பாக வகுத்துக் கொண்டனர். பாஜக ஆட்சிக்கு வந்து இரண்டாவது முறை ஒன்றியத்தில் தொடர்ந்து வென்றபோது பல கிறிஸ்துவ நிறுவனங்கள் வெளிப்படையாகவே பாஜக ஆதரவு என நிலைப்பாடு எடுத்தன. இந்துத்துவாவை எதிர்ப்பது அரசை எதிர்ப்பதாகிவிடும், சிறுபான்மை அரசியலைக் கூடப் பேசக் கூடாது என்றே அவர்கள் மறைமுக தணிக்கையை கல்லூரி, பள்ளிகளில் நடைமுறைப்படுத்தினர். இது பயத்தினால் அல்ல, பாஜகவின் கூட்டு சக்தியாகத் தாம் மாற வேண்டும், இந்துத்துவாவின் கார்ப்பரேட் ஆதரவைப் பயன்படுத்த வேண்டும் எனும் ஆசையினாலே தோன்றியது. கேரளாவில் பல கிறிஸ்துவர்கள் வெளிப்படையாக இந்துத்துவா பேச 'கிறிஸ் சங்கிகள்' எனும் பெயரே அவர்களுக்கு வழங்கப்பட்டது. இஸ்மாலியர் மீது தாக்குதல் நடத்தப்படும்போது வாயை மூடிக்கொண்டு வேறு திசை பார்த்து நிற்பது அவர்கள் வழக்கமாகியது. கிறிஸ் சங்கிகளுக்குப் பாஜகவில் இருந்து நிதியும் சென்றது. தமிழ்நாடு சற்றே விதிவிலக்காக இருந்தாலும் இங்கும் தவெகவை கொண்டு வருவதில் சில கிறிஸ்துவ நிறுவனங்களில் வெளிப்படையாக வேலை பார்த்தது செய்தித்தாள்களில் வந்தது. இஸ்லாமிய விரோத நிலைப்பாட்டுக்கு கிறிஸ்துவ நிறுவனங்களை பாஜக கொண்டு வந்து விட்டது, சிறுபான்மை மக்களை இரண்டாகப் பிளந்துவிட்டது என நண்பர்கள் என்னிடம் கூறினர். நான் அவர்களைப் பொறுமை காக்கக் கேட்டேன். பாஜகவின் திட்டம் சிறுபான்மையினரை உடைத்து தனித்தனியாக அடிப்பதுதான். அவர்கள் ஒவ்வொருவரிடமாக வருவார்கள். நைசாக நைச்சியமாகப் பேசுவார்கள். ஆனால் மடியில் இருப்பதைப் பிடுங்கி தனிமைப்படுத்துவார்கள். சட்டத்தால், நடைமுறையால் அடிப்பார்கள்.
முதலில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சம்பாதிக்கும் செயல்படுவதால் வரி செலுத்த வேண்டும் எனச் விதிமுறை போட்டார்கள். அதை எதிர்த்து இவர்கள் நீதிமன்றம் போனார்கள். அடுத்து வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா (FCRA) வருகிறது. இதற்கான நியாயமாக அவர்கள் சொல்வது வெளிநாட்டு நிதியெனும் பெயரில் கறுப்புப் பணம் இந்தியாவில் கொண்டு வரப்படுகிறது என்பது. இதில் ஓரளவுக்கு உண்மையும் உள்ளது என்றாலும் பாஜகவின் நோக்கம் கறுப்புப் பண ஒழிப்பு மட்டுமல்ல, சிறுபான்மையினரின் நிதி ஆதாரங்களைக் கட்டுப்படுத்துவதுதான். தற்போது கிறிஸ்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பு அமித் ஷாவைச் சந்தித்து தம் கவலைகளைத் தெரிவித்திருக்கிறார்கள். அவர் இது அனைத்து மதங்களுக்குமான மசோதாதான் எனப் போலிச் சமாதானம் சொல்லியிருக்கிறார். இங்கு ஸ்டாலினைச் சந்தித்து உதவி கேட்டிருக்கிறார்கள். ஆனால் மசோதாவைத் தடுக்க முடியாது.
எந்த விசயத்திலும் அரசை எதிர்க்காமல் யுக்தி பூர்வமாக இருந்ததன் விளைவுதான் அவர்களுக்கு எனப் பிரச்சினை உதிக்கும்போது பொதுமக்களின், பிற சிறுபான்மையினரின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்காமல் போயிருப்பது.
மற்றொரு காரணம் மதத்தைப் பரப்புவது, பொதுச்சேவை செய்வது எனும் பெயரில் நடத்தப்படும் நிறுவனங்கள் பெரும் கார்ப்பரேட்டுகளாகி விட்டன. அவர்களுடைய வரவுசெலவில் தில்லுமுல்லு நடப்பதாகப் புகார்கள் வருகின்றன. கல்லூரி, பல்கலைகளில் இடம் பெற லஞ்சம் வாங்குகிறார்கள். சில பாதிரியார்கள் தனிப்பட்ட முறையில் உறவினர்கள் பெயரில் நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு சொத்து வாங்கிப் போடுகிறார்கள். கடந்த ஆண்டு நான் கோவை சென்றிருந்தபோது ஒரு கேரளாவைச் சேர்ந்த விரிவுரையாளரிடம் பேசினேன். அவர் தன் வீட்டருகே உள்ள நூறு கோடி சொத்தை ஒரு கத்தோலிக்கச் சாமியார் வந்து 'ஹாட் கேஷ்' கொடுத்து வாங்கிப் போனதாகச் சொன்னார். எளிய கடவுளின் பிள்ளைகளாக இருக்க வேண்டியவர்களுக்கு எதற்கு இவ்வளவு சொத்து? எதற்கு வெளிநாட்டு கார்? ஏன் தாய்லாந்துக்கு உல்லாசப் பயணம்? இதே போல, இயற்கைப் பேரிடர் வரும்போது சில என்.ஜி.ஓக்கள் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகையை வாங்கி அப்படியே முழுங்கி விடுகிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கும் பொதுமக்களுக்கு எரிச்சல் வராதா? வரும். அதுவும் இவர்களைத் தனிமைப்படுத்தி இருக்கிறது.
நீதியற்ற யுக்தியும் கிறிஸ் சங்கித்தனமும் கறுப்புப் பணமும் முறையற்ற சம்பாதித்தியமுமாக இருக்கும்போது பாஜகவின் இந்த மசோதாவை எதிர்க்கும் அற வலிமையை இழந்து விடுகிறார்கள். தொண்டு செய்யும் மனநிலை கொண்ட அசல் சாமியார்களும் நீதிவான்களும் உண்டு. அவர்கள்தாம் இந்த சுயநலக் கார்ப்பரேட் சிறுபான்மை நிறுவனங்களுக்கும் பாஜகவுக்கும் இடையில் அதிகமாகச் சிக்கி பாதிப்படைவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...