முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆடும், மாடு மேய்க்கும் அரசு வேலை


 

இன்று வேளாண் பொருளாதாரக் கட்டமைப்பு இந்தியா முழுக்கவே நிலைகுலைந்து வருகிறது. ஆனாலும் தானிய உற்பத்தி குறையவில்லை. காய்கறி விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது அரசு காய்கறிகளுக்கான குளிர் வைப்பறைகளை அமைத்துத் தருவதையோ அடிப்படையான பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதையோ உத்தரவாதம் செய்யவில்லை. நீர் வளமும் எல்லா மாநிலங்களிலும் குறைந்து கொண்டே போகிறது. அதற்கும் அரசு சுற்றுச்சூழலைப் பிரதானப்படுத்தாததே காரணம். ஒரே நல்ல விசயம் ஒரு அடிப்படை விலையை தானியங்களுக்கு நிர்ணயித்து அரசு கொள்முதல் பண்ணுவதே. இதுவும் கூட விவசாயத்தைக் காப்ப்பாற்ற அல்ல, மக்கள் பசியில் வாடி பஞ்சம் வரலாகாதே என்பதற்காகத்தான்.

இந்தியா இன்னும் முழுமையான ஒரு நகர்மய, தொழிலுற்பத்தி சார் நாடாக மாறவில்லை. அதற்கே இந்த கதி. அடுத்த சில பத்தாண்டுகளில் கார்ப்பரேட் விவசாயம் இங்கு வலுக்கும் என்பது என் கணிப்பு. அதாவது இதை பாஜகவால் செய்துதர இயலவில்லை எனில் கார்ப்பரேட்டுகள் அடுத்து வரும் அரசைக் கொண்டு செய்ய வைக்கும்.
ஏனென்றால் வேளாண் மக்கள் தொடர்ந்து நகரங்களுக்குப் பயணித்து வேலை தேடுவதும் நிலங்கள் ரியல் எஸ்டேட்டுக்கு விற்கப்படுவதும் அதிரித்துக் கொண்டே போகிறது. இந்த மாற்றத்தைக் கண்ணால் நேரடியாக நம்மால் பார்க்க முடிகிற படி வேகமாக நிலைமை உள்ளது.
இது நல்லது அல்ல என்று அறிவுள்ளவர்களுக்குத் தெரியும் - உணவு உற்பத்தியை - விவசாயத்தை - அரசு பாதுகாக்காவிடில் ஏழ்மை அதிகரித்து நிலையின்மை தோன்றும். காய்கறி விலை கட்டுப்பாட்டை மீறி அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் கார்ப்பரேட் உள்ளே வந்ததும் தானிய விலை அதிகரித்தே ஆகும். அரசு மெல்ல மெல்ல குறைந்தபட்ச கொள்முதல் விலைத் திட்டத்தைக் கைவிடும். இதனால், மக்கள் மலிவு விலை துரித உணவுகளை வாங்கி சூடு பண்ணி சாப்பிடத் தொடங்குவார்கள். ஒரு கட்டத்தில் மக்களின் ஆரோக்கியம் சீர்கெடும். நோய்கள் பெருக்கும். ஆஸ்பத்திரிகள் லாபம் சம்பாதிக்கும்.
நிலைமை இம்மாதிரி சமச்சீரற்றுப் போனதற்கு நமது அரசுகளின் பொருளாதார கொள்கைகள் ஒரு காரணம் எனில் வாக்காளர்களின் அக்கறையின்மை மற்றொரு காரணம். இந்நிலையில்தான் நேற்று நான் சீமான் பேசிய ஒரு காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் எட்டு லட்சத்துக்கு மேலான இளைஞர்களுக்கு ஆடு, மாடு வாங்கிக் கொடுத்து விவசாயம் செய்ய வைப்பேன், அதுவே அரசு வேலை என்கிறார். தன்னை எல்லாரும் முட்டாள் என்கிறார்கள், ஒருநாள் மக்கள் அவரிடம் போகும் நிலை வரும் என்கிறார். இது நிச்சயம் நடக்காது. சொல்லப்போனால், சீமானின் தேர்தல் வீழ்ச்சிக்கு இந்த தற்சார்புப் பொருளாதாரப் பிரச்சாரமும் ஒரு முக்கிய காரணம். தவெக ஒரு பக்கம் இலவசங்களை அள்ளி வழங்குவதாகச் சொல்லிக் கொண்டே கார்ப்பரேட் நிதியாளர்களின் பல்வேறு உத்தரவாதங்களைச் சொல்லி பணம் பெற்றார்கள். சீமானுக்குக் கிடைத்ததை விட பல்லாயிரம் மடங்கு அதிகப் பணம் தவெகவுக்குக் கிடைத்தது இப்படித்தான். அவர்கள் மிகை-கார்ப்பரேட்வாதத்தை ஆதரிக்கிற ஒரு கட்சி. கல்வியில் முதலீடு, கட்டமைப்பு வளர்ச்சியில் முதலீடு கிட்டத்த இல்லவே இல்லை. அவர்கள் அரசு வேலைகளையும் தேர்தலுக்கு முன்பு தருகிற இலவசத் திட்டத்தைப் போன்றே பார்க்கிறார்கள். அதாவது திமுகவுக்கு சமநிலையைப் பேணும் நோக்கம் உண்டெனில் இவர்களுக்கு சுத்தமாக இல்லை. டாஸ்மாக், பேருந்து சேவை, மின்வாரியம் எல்லாமே இனி தனியார்தான். இதற்காகத்தான் கார்ப்பரேட் ஆதரவு அவர்களுக்கு தேர்தலின்போது கிடைத்திருக்க வேண்டும். ஆடு, மாடு என்றெல்லாம் பேசினால் சீமானுக்கு யார் கொடுப்பார்கள்? மேலும் படித்துவிட்டு விவசாயம் செய்வது, அடிப்படையான வசதிகளுடன் மட்டும் வாழ்ந்து வறட்சியுடன் போராடி விவசாயத்தைக் காப்பாற்ற மத்திய வர்க்க, மேல்மத்திய வர்க்க மக்கள் ஏன் விரும்ப வேண்டும்? ஆனாலும் சீமானுக்கு யார் இந்த முட்டாள்தனமான ஐடியாக்களைக் கொடுக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
கடைசியாக, இவ்வளவு பெரும் பொருளாதாரக் கொள்கை, கட்டமைப்புப் பிரச்சினையை சரிசெய்யாமல் தற்சார்பு பொருளாதாரத்துக்கு ஆடு, மாடு வளர்த்து ஒருவர் போக முடியாது. சரியான தீர்வு ஒன்றிய அரசு தன் கொள்கையை மாற்றி விவசாயத்திற்கும் விற்பனைச் சங்கிலியை உருவாக்கி குளிர் வைப்பறைகளைக் கட்டுவதற்கும் அதிகப் பணத்தை முதலீடு செய்வதே. மெல்ல மெல்ல, இதன் வழியாக ஒரு பகுதி மக்களை ஓரளவுக்கு வசதியான வாழ்க்கையை கிராமங்களில் வாழ அனுமதிப்பதே. இன்னொரு பக்கம், இருக்கிற நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதே. மக்களும் உணர்ச்சிகரப் பிரச்சினைகளை விடுத்து, பொருளாதாரம் சார்ந்து வாக்களிப்பதே.
எனக்கு நல்லவேளை சீமானுக்கு மக்கள் பலத்த ஆதரவைத் தரவில்லை என்று ஆறுதல் ஏற்பட்டது. அவருக்கு ஒன்றைச் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் அதன் வழிமுறையென்ன, பாதிப்புகள் என்னவென யோசிப்பதில்லை. தொழில்மயமாக்கலில் முதலீடு செய்து, இளைஞர்களுக்கு அதில் வேலை பெற்றுத் தராமல் தமிழ்நாடு மட்டும் ஆடு, மாடு வளர்ப்பு, இயற்கை விவசாயம் என தனி டிராக்கில் போக முடியாது. நம் இளைஞர்கள் வேறு மாநிலங்களுக்குப் படையெடுத்தால் வடக்கர்கள்தாம் இங்கு சீமானுக்காக ஆடு மெய்க்கும் அரசு வேலையில் சேர வேண்டி வரும்.
இதைப் பார்க்கும் போது ஒன்று தோன்றுகிறது: விஜய்யோ சீமானோ சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாசிக்கிற, யோசிக்கிற பழக்கமே இல்லை (அவர்கள் மட்டும் ஏன் தனி தத்திகளாக இருக்கிறார்கள் என்பது எவ்வளவு யோசித்தும் புரியவில்லை). அப்படியே படித்தாலும் அது அவர்கள் மூளையில் ஏறுவதில்லை. கமலஹாசனைப் போல. ஒரு படித்த சமூகம் அவர்கள் சொல்வதைக் கேட்டுச் சிரித்துவிட்டுப் போய்விட வேண்டும். கைத்தட்டி, வாக்களித்து அரசியலில் ஆதரித்தால் அது சமூகமாக இருக்காது, மனநல விடுதியாகிவிடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...