இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே?
பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவசியம். இல்லாவிடில் அந்நியமாதல் அதிகமாகும் உங்களுக்கு இச்சமூகத்திடம் கோபம் ஏற்படும். இது கூடிக்கூடி அண்மையில் நடந்த கரப்பான் போராட்டங்களை நோக்கி இட்டுச் செல்லக் கூடும். பிரபலங்களின் நேர்முகங்களாலும் அவர்களைக் குறித்த மனிதநேயச் செய்திகளாலும் இது மறைமுகமாகத் தடுக்கப்படுகிறது. ஒரு பிரபலம் பல தியாகங்கள் செய்து கடுமையாக உழைத்தார் என்று சொல்லும்போது அவரைப் போன்று அல்லது அவரை விட பல்லாயிரம் மடங்கு அதிகம் உழைத்தும் வறுமை நீங்காத மக்களுக்கு அவரும் தாமும் அருகில் ஒரே நேர்கோட்டில் சமநிலையில் வாழ்வதாக ஒரு பிரமை ஏற்படுகிறது. இது நம்மை ஆறுதல்படுத்துகிறது. நமது வறுமையும் அவர்கள் வறுமையும் ஒன்றல்ல, நமது காயங்களும் அவர்களுடைய மனக்காயங்கள் ஒன்றல்ல என நமக்குத் தெரியும் என்றாலும் எல்லாம் சரியாகிவிட்டதாக ஒரு கணம் நினைக்கிறோம். நமக்கு இத்திருப்தியைத் தரும் நோக்கிலேயே இத்தகைய நேர்முகங்கள் செய்யப்படுகின்றன. அவை திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டு பாலினம், வர்க்கம் ஆகிய அலகுகளின் படி உணர்வுகள் தூண்டப்படுகின்றன. பிரபலங்களுக்கு நீதி கேட்டு நாம் சிந்திக்கிறோம், பேசுகிறோம்; இது நாம் நமக்காக நீதி கேட்காமலும் பேசாமலும் இருக்கச் செய்கிறது.
இதை நாம் உணரும் போது போலி உணர்ச்சிகளைக் குறைத்துக் கொண்டு நம் வாழ்க்கையை நமக்காக வாழ ஆரம்பிப்போம். ஏனெனில் பிரபலங்கள் நாம் இந்த உலகை நேரடியாகச் சொந்தம் கொண்டாடாமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்டவர்கள். பிரபலங்கள் நம்மைப் பொறுப்பற்றவர்களாகவும் மாற்றுகிறார்கள்.
கருத்துகள்