முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்



 வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை. 

அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார். நானும் பேசத்தான் முயன்றேன். சொற்கள் தொண்டையைத் தாண்டி வரவில்லை. கைகள் நடுங்க போனை எடுத்து வேலைக்காரியின் எண்ணை மீண்டும் அழைக்க முயன்றேன். ஆனால் என் விரல்கள் வேறு செயலிகளைத் திறந்தன. போனை மூடிவிட்டு மூச்சை இழுத்துவிட்டேன். மனைவியின் மூக்கின் கீழ் உதடுகளுக்கு மேல் அந்தப் பிளவு அழகாக இருந்ததை, அவளது உதட்டின் வலப்பக்கம் மேலாக உள்ள ஒரு மச்சம் அவளது நிறத்தை எடுப்பாகக் காட்டியதை ரசித்தேன். மோவாயின் மஞ்சள் மென்மயிர்கள். சில வினாடிகள் அவளைத் தழுவிக் கொள்ள வேண்டும் போல என் உடல் துடித்தது. அவள் தன்னுணர்வு பெற்று தன் அழகை இழந்து என்னை முறைத்து என் அருவருப்புணர்வைத் தூண்டிவிட்டு கிழவியிடம் சென்று பேச்சுக் கொடுத்தாள். ஒரு மகத்தான தருணம் மலரும்போது அதை அப்படியே நிலைகொள்ள வைக்காமல் பறித்து வீச பெண்களால் மட்டுமே முடியும். அவர்கள் எப்போது நடைமுறை உலகிலேயே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மேலும் அவளது இயல்பான உடல்மொழி எனக்கு நடுக்கத்தை வரவழைத்தது. ஏனென்றால் ஒரு பக்கம் மனதுக்குள் இவ்வளவு கிளர்ச்சி ஏற்படும்போது உடல் இன்னொரு பக்கம் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது. அவள் தனக்குத் தெரிந்த தெலுங்கில் கிழவியுடன் இயல்பாக உரையாடி அவரது மகள் எங்கே என்று விசாரிக்க அவரோ அவள் சித்தூரில் தன் கணவனுடன் இருக்கிறாள் என்கிறார். அவள் ஏன் வேலைக்கு வரவில்லை என்று கேட்டால் நான் தான் வருகிறேனே என்கிறார். இல்லை, நீங்கள் தான் வரவில்லையே, அவள் தானே வந்து கொண்டிருந்தாள் என்றால் அவர் கேலியாகச் சிரித்துவிட்டு அவள் எங்கே வந்தாள் என்று திரும்பக் கேட்கிறார். என் மனைவி இவரிடம் இதற்கு மேல் பேசினால் வேலைக்கு ஆகாது என்று அண்டை வீட்டாரின் எண்களுக்கு அழைத்து விசாரிக்கிறாள். அவர்கள் தம் வீட்டுக்குக் கிழவியே வேலைக்கு வருவதாகச் சொல்கிறார்கள். போச்சு, எல்லாருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது.

அவர் நெருப்பு வைத்துக் கொளுத்தி இறந்து போயிருந்த நிலையில் அவரது மகள் சித்தூரில் இருந்து வந்து அழுது தீர்த்துவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்து வேலையைத் தான் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி உள்ளே வந்தது இன்று நேற்றல்ல ஐந்தாண்டுகளுக்கு முன் என அவரிடம் சொன்னபோது அவர் என்ன பேசுவது எனத் தெரியாமல் திகைத்துவிட்டு தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த சின்ன பட்டன் போனை எடுத்து என் மனைவி ஐந்தாண்டுகளுக்கு முன் அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றைக் காட்டினார். அதில் சனிக்கிழமை மாலையில், அதாவது அன்றைய தினம் மாலையில், வெளியே போவதால் அவர் காலையிலே வந்து வேலையை முடித்துவிட்டுப் போல வேண்டும் என ஆங்கில லிபியில் உடைந்த தெலுங்கில் எழுதப்பட்டிருந்தது. அது ஐந்தாண்டுகளுக்கு முந்தைய சேதி என்று என் மனைவி சொன்னதும் அவர் என்னைப் பார்த்து “இந்தப் பாத்திரங்களை எல்லாம் என்ன பண்ணுறது? தேச்சுதானே ஆகணும் சொல்லுங்க?” என்றார். என்னால் மறுக்க முடியவில்லை. தேதியில் என்ன இருக்கிறது? மேலும் அந்தச் சேதி அனுப்பப்பட்ட தேதியானது கிழவி இறந்ததற்கு சில மாதங்கள் முன்புதானே. அவர் வேலை செய்து முடிக்க இன்னும் சில காலம் மிச்சம் உள்ளதே. நான் இதை நினைத்து அவரிடம் சொல்லும் முன்பு என் மனைவி சிறிது பணத்தை எடுத்து வந்து கிழவியிடம் கொடுத்து “நீங்க காசு தேவைப்பட்டா வாங்க, நாங்க தேச்சுக்கிறேன், கிளம்புங்க” என்றாள். 

என்னுடைய பயம்தான் என்னை அப்படிச் சொல்ல வைத்திருக்க வேண்டும், என் மனைவி செய்ததுதான் சரி. ஆனாலும் இத்தனை வீடுகளில் அவர் போய் வேலை செய்வது எப்படி இவ்வளவு இயல்பாக நடக்க முடியும், எங்களைப் போல அவர்களும் கிழவியைத் திருப்பி அனுப்பியிருக்க வேண்டும், கிழவியின் மகள் திரும்ப வந்திருப்பாள், அப்படி நடக்கவில்லை, எதுவே பிசகி விட்டது என்று நினைத்தேன். இன்னொரு பக்கம், கிழவி தன் மகளை விட நன்றாக வேலை பார்ப்பார், ஒழுங்காக வருவார், அவரே வரட்டுமே என அண்டை வீட்டார் நினைக்கக் கூடும், அதிலொன்றும் தவறில்லையே என்றும் தோன்றியது. மேலும், யார் எப்போது இறந்தார்கள் என்பதைக் கணக்கு வைத்துக் கொள்ள யாருக்கு நேரமிருக்கிறது, வேலை நடந்தால் போதாதா?      

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...