பிரதமர் மோடியின் காணொளியொன்று பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. அதில் அவர் தேர்வுத்தாள் கசிவைக் குறித்து கவலை தெரிவித்து என்னென்னமோ பேசியிருந்தார். ஒரு பக்கம் மனம் கசியப் பேசிவிட்டு இன்னொரு பக்கம் போலிசாரை விட்டு மாணவர்களை அவர் பெல்லட் குண்டு தாக்குதல், லத்தி சார்ஜ் பண்ணியதால் இந்த அணுக்கம் காட்டும் காணொளி அவரை இளைஞர்களிடம் இருந்து அகலத் துரத்தியது. அவர்கள் இவரை பயங்கரமாகக் கலாய்த்து டுரோல் பண்ண "பிராண்ட்ஸ்" எனும் அவரது அழைப்பு தேசிய கேலிச் சொல்லானது. இந்த களேபரத்துக்கு இடையில்தான் பேஸ்புக் இரவு 12: 30க்கும் காலை 5 மணிக்கும் இடையில் அவரது காணொளியைத் தூக்கியது. இது தற்செயலாக நடந்த ஒரு தொழில்நுட்பப் பிழை என்று மெட்டா நிர்வாகம் விளக்கம் அளித்தாலும் பாஜக அதை ஏற்காமல் இம்மாதம் 3ஆம் தேதி மெட்டா நிர்வாகிகளை அழைத்து இன்னும் மூன்று நாட்களுக்குள் மார்க் ஸுக்கர்பர்க் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும், இல்லாவிட்டால் பேஸ்புக்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்க்கிறார்கள். அந்த நள்ளிரவு வேளை அவரது காணொளி காணாமல் போனதால் என்ன நஷ்டம் ஏற்பட்டிருக்க முடியும்? அதை ஒரேயடியாகத் தூக்கியிருந்தால் அவரது பெயர் கெடாமல் காப்பாற்றியிருக்கலாமே. இதை ஏன் பெரிது பண்ணுகிறார்கள்?
இரண்டு காரணங்கள்:
மோடி ரொம்ப தொட்டாற்சிணுங்கி மனிதர். அவர் மட்டுமல்ல எல்லா சர்வாதிகாரிகளும் அப்படித்தான். இளைஞர்கள் தன்னை அவமதித்து நிராகரித்த கோபத்தை இங்கு கொட்டுகிறார். அதாவது முகம் சரியில்லை என கண்ணாடியை உடைப்பதைப் போல.
இன்ஸ்டாவில் எப்படி கரப்பான்களுக்கும் புதிய போராட்ட அமைப்புகளுக்கும் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பின்தொடர்வோரை அளிக்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறார்கள். அதாவது இந்தியாவின் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் சேர்த்து 25 மில்லியன் பின் தொடர்வோர் என்றால் இந்த இளைஞர்களுக்கு எப்படி 27 மில்லியன் வர முடியும் என்பது அவர்களை உறுத்துகிறது. எந்தப் புது டிரெண்ட், அமைப்பு வந்தாலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்விதம் இன்ஸ்டா அல்காரிதம் உள்ளது பாஜகவுக்குப் பிடிக்கவில்லை. இதையும் கண்டித்திருக்கிறார்கள்.
இளைஞர்கள் ஒரு கடுப்பில் இதிலெல்லாம் சேர்ந்து டிரெண்ட்டிங் செய்கிறார்கள், அவர்களுக்கு வழமையான அரசியல் அந்நியமாகத் தெரிகிறது என்பது நிஜமான பிரச்சினைதான். ஆனால் அதற்குத் தீர்வு சமூகவலைதளத்தை ஒரு கட்சி தன் பிரச்சார தளமாக மட்டும் இருக்க வேண்டும், தனக்குப் பிடிக்காதவர்களைத் தடை செய்ய வேண்டும், அல்காரிதமை அவர்களுக்கு எதிராகவும் தமக்குச் சாதகமாகவும் மாற்ற வேண்டும் எனக் கேட்பதல்ல. அப்படி நடந்தால் கோடி மீடியா போல மெட்டாவும் படுத்துவிடும். இளைஞர்கள் புதிய இணைய வெளிகளைத் தேடுவார்கள்.
அதாவது அமெரிக்கார்கள் தமக்கு எதிராக எதையோ செய்கிறார்கள் என பாஜக நம்புகிறது. எப்போதெல்லாம் இந்தியாவில் ஆட்சி மாற்றம் வருமோ அப்போதெல்லாம் இப்படி ஒன்று நடக்கும், இப்படியான குற்றச்சாட்டுகள் எழுமெனச் சொல்வார்கள். இம்முறை என்ன நடக்குமெனப் பார்ப்போம்.
கருத்துகள்