முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனமற்றுப் போவதன் அச்சம்

 




பாலன் எனும் சிறுவன் (Balan the Boy) படத்தின் முதற்பாதியை நேற்றுப் பார்த்து சற்று மனம் உடைந்து போனேன். உணர்வளவில் அப்படம் என்னை வெகுவாகத் தொந்தரவு பண்ணியது. அதைக் கசப்பென்றோ அவல உணர்வென்றோ சொல்ல முடியாது. நாம் கைவிடப்பட்டவர்களின் கதையைப் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். ஆனால் இது துரத்தப்படுகிற அச்சத்தால் எங்குமே - உறவுகள், தனிமனித அடையாளம், நிலம், நினைவுகள் - நிலைக்க முடியாதவர்களின் கதை. இதைத் துன்பம் என்று வரையறுக்க முடியாது என்பதுதான் இதை இன்னும் பயங்கரமாக்குகிறது என நினைக்கிறேன். துன்பத்தில் ஒரு மானுட அம்சம் உண்டு. இப்படத்தில் முழுக்க முழுக்க அச்சம் மட்டுமே உள்ளது. அதுவும் பார்வையாளர்கள் உணரும் திகிலுணர்ச்சியின் அச்சம் அல்ல. இது பாத்திரங்கள் தம் அகத்தே உணரும் அச்சத்தையும், அதை மட்டுமே உணர்ந்து வாழ்தலையும் பேசுகிறது.

இதில் வரும் குழந்தைக்கு ஆபத்தில் இருந்து தப்பக்க சின்னச்சின்ன தந்திரங்களை அம்மா சொல்லித் தருகிறாள். யாரிடமும் பேசாமல் இருப்பது. உண்மையை முழுமையாக மறைப்பது. தன்னை அடையாளமற்றவனாக ஆக்கிக் கொள்வது. தன் அம்மா தன்னை அழைத்துப் போக வரவில்லை என உணரும் அவன் தன்னைப் பற்றி மக்கள் விசாரிக்கிறார்கள் என உணர்ந்ததுமே தன் சட்டையையும் நிக்கரையும் கழற்றி பையில் வைத்து பின்னால் உள்ள புதரில் வீசிவிட்டு வெறும் ஜட்டியுடன் நிற்கிறான். யார் விசாரித்தாலும் எதையும் சொல்ல மறுக்கிறான். பின்னர் ஒரு போலீஸ்காரர் அந்தப் பையை அவனுக்குப் பின்னாலே கண்டுபிடிக்கிறார். இப்படி அவன் செய்யும் சின்னச்சின்ன தந்திரங்கள் பொய்க்கும்போது அவனது களங்கமின்மையும் பலவீனமும் நம்மை இன்னும் அச்சுறுத்துகிறது. பேயறைந்தாற் போன்ற பாவனையைச் சுமந்த அந்த அம்மாவின் விழிகளை மறக்கவே முடியவில்லை.
படத்தில் ஒரு மனநலமழிந்த பெண் வருகிறார். அவரை நாயகி ஒரு பேருந்து நிலையத்தில் கண்டு அவரது அடையாள அட்டையைத் திருடிக் கொள்கிறார். கிட்டத்தட்ட அவருக்கு வெகு அருகில் மனதளவில் இருக்கிற பெண்ணாகவே இவரும் இருக்கிறார். ஆனால் நாம் சினிமாவில் பார்க்கிற மனநலமற்றவர்களைப் போல் அல்லாமல் இவர் அபலையாகக் காட்டப்படவில்லை. கொடூரமாகச் சிந்திக்கவும் அதர்க்கமாகவும் நடந்துகொள்ளவும் கூடியவர். இரவில் உறக்கத்தில் திடுக்கிட்டு விழிக்க தலையணையில் காதருகே பெரிய சிலந்தியொன்று படர்ந்து நிற்பதைப் போன்ற உணர்வு அவரை நினைக்கையில் வருகிறது.

நான் பார்த்தவரைக்கும், இதனாலே இப்படம் நல்ல படமா என்று சொல்லத் தெரியவில்லை. சில கொடூரமான தனிமனிதக் குற்றங்களைப் பற்றிப் படிக்கையிலோ காட்சிகளைப் பார்க்கையிலோ ஏற்படும் உணர்வையே இப்படமும் தருகிறது. எதுவோ ஒன்று இதை முழுக்க உண்மையாக்காமல் தடுக்கிறது. ஒரு நாவலில் பேசுவதற்குத் தோதான விசயத்தை சிந்தனையோட்டமோ உணர்வுத் தடுமாற்றங்களோ இன்றி திரைக்கதை நுட்பங்களின் வழியாக மட்டுமே திரையில் காட்டுவதால் வருகிற சிக்கலா? சிந்தனையோ நினைவோ அற்ற விலங்காக இருவரையும் மாற்றுவதால் வருகிற பிரச்சினையா? மனிதன் விலங்கு அல்லன், அவன் மனநிலை சீர்குலையும்போது கூட விலங்கு அல்லன் என்று நமது ஆழ்மனது சொல்வதால் இப்படம் அதிகம் தொந்தரவு பண்ணுகிறதா?

பாதிக்கே இந்தக் கதி. மிச்சத்தை இன்று பார்க்கப் போகிறேன். அதன் பிறகு தோன்றுவதைப் பின்னர் எழுதுகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...