முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருமல் மருந்தும் சுந்தர ராமசாமியின் பிம்பமும்



ஒரு நபரைப் பற்றி பலர் சொல்லிக் கேட்டு சிறுக சிறுக ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்வது ஒரு அலாதியான அனுபவம். பல சமயங்களில் திரிபுகளும், இடைசெருகல்களும் கொண்டிருந்தாலும் இந்த சித்திரம் தரும் கற்பனையின் கிளர்ச்சி அபாரமானது. ஒருவரை நேரில் தெரிந்து கொள்வது இப்படி பெயிண்டை உதறி சித்திரம் தீட்டுவது போல் பல்வேறு வாய்களில் இருந்து பொறுக்கி அகவய சித்திரத்தை உருவாக்குவதில் இருந்து வேறுபட்டது.

என்னோடு பணிபுரியும் நண்பர் குமார் சுந்தர ராமசாமியை அவரது வீட்டில் சென்று பார்த்திருக்கிறார். சு.ராவின் “புளியமரத்தின் கதை” நாவலில் தன் முனைவர் ஆய்வை மேற்கொண்டிருந்த ஒரு பார்வையற்ற ஆய்வாளருக்கு சு.ராவிடம் பேட்டி காண தேவை இருந்ததால் குமார் உடன் சென்றிருக்கிறார். ஆய்வாளர் ஒரு தீப்பொறி இடதுசாரி. “சக்கிலியர்களை இந்த நாவலில் நீங்கள் எப்படி கேவலப்படுத்தலாம்?” என்று துழாவும் கண்களுடன் கேள்விகளை எறிந்திருக்கிறார். சு.ராவின் முகத்தில் தீப்பிழம்பு எழுந்து வந்ததாய் குமார் சொல்கிறார். அவர் தாடியை வருடியவாறே தன் வேலைக்காரியை அழைக்கிறார். வந்தவரிடம் “இருமல் மருந்து கொண்டுவாம்மா” என்கிறார். ஒரு கோப்பையில் ஊற்றி கொண்டு வருகிறார். சு.ரா அதை சுவைத்தபடியே மேற்கொண்டு பேசுகிறார். குமார் அப்போது பொருளாதார சுயசார்பற்ற கல்லூரி இளைஞர். எழுத்தாளர்கள் கல்லூரி இளைஞர்களை நெருடல் தோன்றாத வண்ணம் உபசரிக்க வேண்டும் என்ற வலுவான எண்ணம் கொண்டிருந்தவர். உதாரணமாக, சோபாசக்தி இந்தியா வந்திருந்தபோது பார்க்க சென்றிருந்த குமார் மற்றும் அவர் நண்பர் குழாமை அவர் நன்றாகவே டாஸ்மாக்கில் உபசரித்திருக்கிறார். இரவு வரை குளிப்பாட்டி பின் சட்டை பாக்கெட்டில் 100 ரூபாய் நோட்டுகள் திணித்து, திரும்ப பயணத்திற்கு வாகனம் கூட ஏற்பாடு செய்திருக்கிறார். மிச்சமான காசில் குமார் & கோ பிரியாணி தின்றிருக்கிறார்கள். இப்படியான விருந்தோம்பலில் குளிர்ந்து தமிழ் எழுத்தாளர்கள் குறித்த கற்பனாவாத மனக்கிளர்ச்சி கொண்டிருந்த குமாருக்கு சு.ரா தனக்கு தண்ணீர் காட்டியபடி இருமல் மருந்து குடித்ததில் கடும் அதிர்ச்சி. காரணம் அது இருமல் மருந்தல்ல. விஸ்கி. பார்வையற்ற நண்பர் வேறு இடையிடையே “ஏதோ வாசம் வருகிறதே” என்று முணுமுணுக்க அவரை சமாதானம் செய்ய வேண்டி வருகிறது. சு.ரா ஒரு பதிவிசுக்கு கூட “சாப்பிடுறீங்களா” என்று கேட்க மாட்டேன் என்கிறார். தங்களை லாலிபாப் வயதினராக உத்தேசித்து அவர் தன்னை மட்டும் வளர்ந்தவராக காட்டிக் கொள்வதாக குமாருக்கு மேலும் கடுப்பு.

ஜெயமோகனின் “சு.ரா நினைவின் நதியில்” படித்திருக்கிறேன். ஜெ.மோ சு.ரா மது அருந்து பழக்கும் கொண்டிருந்தது தனக்கு மிக ஆச்சரியமான வகையில் எதேச்சையாக தெரிய வந்ததை குறிப்பிடுகிறார். அவரின் சு.ரா வசீகரமானவர்; மனவலிமையும், கூர்மையான அங்கதமும் கொண்டவர். சாமர்த்தியமான உரையாடல்காரர். நான் சு.ராவை தொண்ணூறுகளின் இறுதிகளில் அடிக்கடி சந்தித்திருக்கிறேன். நான் நேரடியாக அவதானித்தவை குறித்த மற்றொரு சந்தர்பத்தில் சொல்கிறேன். பிரமிளின் புகார்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன். மொத்தமாக சு.ரா பற்றி கிடைக்கும் சித்திரத்தில் எத்தனை முரண்படும் வண்ணங்கள். அவற்றில் இதுதான் தனிப்பட்டு நிற்பது.

சு.ரா மறைந்த நாள் நான் மாலைமலர் பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சேதி அறிந்ததும் நெஞ்சடைத்துப் போய் “சார் சுந்தர ராமசாமி இறந்து போயிட்டாராம்” என்று என் தலைமை ஆசிரியரிடம் ஒரு உள்தூண்டலில் கூவி விட்டேன். அவர் மழுங்கின முகத்துடன், மேலும் வெறுப்பாக, “யாருங்க அவரு” என்றார்.

கருத்துகள்

virutcham இவ்வாறு கூறியுள்ளார்…
அவர் குடித்தது பிரச்சனையா உங்கள் நண்பருக்கு தரவில்லை என்பது பிரச்சனையா ?
எழுத்தாளர்கள் ஒருவரை விருந்தோம்பல் செய்ய மகிழ்விக்க குடிக்க வைக்க வைக்க வேண்டுமா என்ன ?

//மிச்சமான காசில் குமார் & கோ பிரியாணி தின்றிருக்கிறார்கள். இப்படியான விருந்தோம்பலில் குளிர்ந்து தமிழ் எழுத்தாளர்கள் குறித்த கற்பனாவாத மனக்கிளர்ச்சி கொண்டிருந்த குமாருக்கு சு.ரா தனக்கு தண்ணீர் காட்டியபடி இருமல் மருந்து குடித்ததில் கடும் அதிர்ச்சி.//
இப்படியான விஷயங்கள் தான் சரியான பிம்பமோ ?
http://www.virutcham.com
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
விருந்தோம்பல் ஒரு பொதுவான மனித மாண்பு தான். மதுவானாலும், உணவானாலும் சரி. சு.ரா என் நண்பருக்கும் கொஞ்சம் ஊற்றிக் கொடுத்திருக்க வேண்டும். அதுவே நாகரிகம். ஆனால் கட்டாயம் அல்ல. ஒருவர் விருந்தோம்பல் பண்ணாமலும் இருக்கலாம். தனிப்பட்ட சுதந்திரம் அது.
virutcham இவ்வாறு கூறியுள்ளார்…
தனிப்பட்ட சுதந்திரத்தை உடைபட்ட பிம்பமாக சித்தரித்து எழுதியது ஏன்?
மது அருந்துபவர்களில் சிலர் பிறருக்கு அதை தருவதில்லை என்ற கொள்கையை கடைபிடிப்பது உண்டு. இவர் அவ்வாறு நினைத்திருக்கலாம் அல்லவா? ஒருவிதத்தில் நல்லது தானே.
உங்கள் எழுத்தில் விருந்தினருக்கு ஒன்றுமே தந்து உபசரிக்கவில்லை என்று எழுதப் பட்டு இருந்தால் ஒரு நியாயம் இருப்பதாக சொல்லலாம். உங்கள் எழுத்தின் நோக்கத்தில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை

ஒரு சிறந்த எழுத்தாளர் வீட்டுக்கு சென்று அவரோடு உரையாடும் வாய்ப்பு கிடைக்கப் பெரும் ஒருவர் மதுவை தனக்குத் தரவில்லை என்று சொல்லுவதும் ( எதை எதிர்பார்த்து ஒரு எழுத்தாளன் வீட்டிற்கு சென்றார்கள்?) அதை நீங்கள் அந்த எழுத்தாளரின் பிம்பத்தின் நீங்கள் கண்டுவிட்ட முரண்பாடாக எழுதுவதும், இதை என்னவென்று சொல்லுவது?

http://www.virutcham.com
Athisha இவ்வாறு கூறியுள்ளார்…
அபிலாஷ் இந்த பதிவை ஏனோ நான் கீழிருந்து மேல் நோக்கி வாசித்தேன்.
Madumitha இவ்வாறு கூறியுள்ளார்…
சு.ரா வின்
எழுத்துதானெ
அவரது பிம்பம்?
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
வித்யா
சு.ரா உருவாக்கின பிம்பம் உடைபட்டதாக நான் கருதவில்லை. அவர் ச்ந்தித்த எத்தனையோ பேரில் பல்வேறு பட்ட சலனங்களை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதே நான் சாராம்சமாக் சொல்வது. என் நண்பரின் நோக்கம் மிக எளிய ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனாலும் சு.ரா இன்னும் மனம் விட்டு நடந்து கொண்டிருக்கலாம் என்றே நம்புகிறேன். நான் கவனித்தது வரை சு.ரா அவ்வளவு சீக்கிரம் தன்னை நாடி வருகிறவர்களிடம் தன்னை திறக்க மாட்டார்.ஆரம்பத்தில் சற்று விலகலோடே கவனிப்பார். பல சந்திப்புகளுக்கு பிறகு அவர் நம்மை ஒரு வகைமைக்குள் அடைத்து விட்ட பின், நம்மை எப்படி நடத்துவது என்று தீர்மானிப்பார். இந்த அணுகுமுறை மீது எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. ஒரு எளிய மட்டத்தில் என் நண்பர் மது எதிர்பார்த்ததிலும் தவறில்லை. தராததனால் சு.ராவின் ஆளுமை சிறிதும் கறைபட இல்லை என்பதும் உண்மையே. சு.ராவை தாக்குவது என் நோக்கமல்ல வித்யா. அவருடன் எனக்கு மிக இனிய உறவு இருந்தது. இன்றும் மிகுந்த நெகிழ்ச்சியுடனே அவரை நினைத்துக் கொள்கிறேன்.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
மதுமிதா
சுராவின் எழுத்து ஒரு பிம்பம்
ஆளுமை மற்றொரு பிம்பம்
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
அது கூட ஒரு சுவாரஸ்ய முறை தான் அதிஷா!
virutcham இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் பதிவுக்கும் பின்னூட்டத்திற்கும் இடையிலான முரணை கொஞ்சம் கவனியுங்கள்.
சு.ரா வின் அமைதியான, மற்றவர்களோடு சட்டென்று பழகாத சுபாவம் தெரிந்து தானே உங்கள் நண்பர் அங்கு சென்று இருப்பார்.
இத்தகைய சுபாவம் உள்ள ஒருவரின் வீட்டில் அவரோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்த ஒருவர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இது என்ன மனதில் எழும் அல்ப்ப எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை அவர் இறப்புக்கு பின்னரும் சொல்லிக் கொண்டு
தவறு எதிர்பார்ப்பில் இருக்கிறதா என்றும் கொஞ்சம் யோசியுங்கள்

http://www.virutcham.com
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
வித்யா
இதற்கும் பதில் என் முந்தின பின்னூட்டத்தில் உள்ளது. சுருக்கமாக, சு.ராவை மாபெரும் எழுத்தாளுமையாக, எளிய மனிதராக இருவகையில் அணுகலாம். இரண்டிலும் தவறில்லை. நண்பர் இரண்டாவது வகைப்படி அணுகியிருக்கலாம். நான் நாளைக்கு உங்கள் வீட்டுக்கு வந்தால் இரண்டாவது வகை மனிதராக அணுகி விருந்தோம்பல் (டீ, பிஸ்கெட்)எதிர்பார்க்கலாமே!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...