முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு மழை முடிந்த நாளில்


ஈரமும் சகதியும்
சிதறும் வாகன சக்கர சாக்கடையும்
மிச்சமுள்ள மழைத்துளிகளும்
அடையாளமாகிய இந்நாட்களில்
நாங்கள்
வீட்டில் அமர்ந்தபடி
சதா கொசுக்களை பற்றி
எச்சரிக்கையுணர்வுடன் இருக்கிறோம்

எக்கணமும்
ஏதாவதொரு கொசு
சருமத்தில் அமர்ந்து தீண்டும் எனும்
நுண்ணர்வுடன் விழித்திருக்கிறோம்

தூங்காத வேளைகளில்
கொசுக்கள் ஏன் நம்மிடம் வருவதில்லை
என வியக்கிறோம்

தூக்கத்தின் வீச்சம் அறிந்த கொசுக்கள்
அண்மையில் வட்டமிடும் போது
நமது வாசனை பற்றி
நமக்கே ஐயங்கள் தோன்றுகின்றன

கொசுக்கள் நம்மை பின் தொடர்வது
உண்மையல்ல
ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்கையில்
மற்றொரு கொசு தான்
விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறது
அதே பிடிவாதத்துடன்
இடத்தில் இருந்து இடத்திற்கு
என்பதை விட
கொசுவில் இருந்து மற்றொரு கொசுவிற்கு தான்
செல்கிறோம்
கொசுக்கள் கூட்டமாக இருந்தாலும்
தனித்தனியாக தெரிவது
இதனால் தான்

அப்போதெல்லாம்
ஒரு ஜன்னல் திறப்பின் வழி
மழையினால் பிசுபிசுப்பாகும்
ஒரு வனமிருகம் போல் புரண்டு படுக்கும்
மக்கள் திரளின்
நெருக்கடியை,
குழப்பத்தை,
தப்பித்து செல்ல முடியாமையை
பார்த்து
ஆசுவாசம் கொள்கிறோம்

எங்களது நாய்
கொசுக்களை
கடிக்க முயன்று
ஏமாற்றத்தில் அழுகிறது
ஓடி ஓடி களைக்கிறது

பூனைகள்
சுவரில் தெரிவது
கொசுக்களின் நிழல் என
தெரியாமல்
அறைந்து விளையாடுகின்றன

திடீரென்று
ஒரு பருவத்தின் விருந்தாளியாய்
வீட்டுக்குள் பிரவேசித்த பூச்சிகளை
வரவேற்பதா விரட்டுவதா
என்று அவற்றுக்கு தெரியவில்லை

மெல்ல மெல்ல வெயில் திரும்பிய
ஒரு நாளில்
துணிகளை காயப் போட்டு
படுக்கையை உதறிப் போட்டு
பொருட்கள் மேல் வந்து அமரும்
தூசியை
ஆர்வமாய் கவனித்த படி
ஜன்னல்களை திறந்து விடும் போது
மெல்லிய குற்றவுணர்வு அடைகிறோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.