முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கத்தியின் அம்மணம்



ஒரு கத்தியை போல்
பூமிக்குள்
மறைத்துக் கொள்ள வேண்டும்
என் உடலை

ஒரு கத்தி யாரிடம் இருந்து தன்னை
பாதுகாக்கிறதோ
அவரையும் தான் தன்னிடம் இருந்து
பாதுகாக்கிறது
என்பதை அறியும்

ஒளிந்திருக்கும் கத்தி ஒரு போதும்
தூக்கம் அறியாது
ஆனாலும் அது
உடல்கள் நிறைந்த பிரபஞ்சத்தை பார்க்கையில்
முதன்முதலாய் புத்தாடையை அறியும்
குழந்தையை போல்
மெலிதாய் கூச்சம் அடைகிறது

கத்தி
ஒரு உடலுக்குள் நுழையும் போதே
தான் முழுநிர்வாணம் கொள்கிறோம்
என்பதை அறிந்திருக்கிறது
ஒளிந்திருக்கும் போது அது
அம்மணக் கடற்கரையில்
எதேச்சையாய் ஆடைகளுடன் நுழைந்தவனைப் போல்
அந்நியமாய் உணர்கிறது

வெளிப்பட்டு உடலுக்குள் நுழைவதற்கு இடையிலான
காலத்திலே
அது
மனிதனுக்கு
ஆடை என்பது
எவ்வளவு முக்கியம் என்பதை உணர்கிறது

தன்னைப் போல் ஒளிந்திருக்கும்
பல்லாயிரம் கத்திகளை
அது அறியும்
இறகுகள் புடைத்த வெள்ளை அன்னத்தை போல்
அவை அத்தனையும்
ஒருநாளில் வெளிப்பட துடிக்கின்றன
அவற்றை தடுப்பது
பறத்தலுக்கும் இருத்தலுக்கும் இடையிலான ஒருகண தயக்கம்

கத்தி தான் பயப்படுவது
தன் நிர்வாணத்தையா ஆடைகளையா
என்று அடிக்கடி யோசிக்கிறது
ஆடையை களைவதற்கும் களைந்ததற்கும் இடையில்
ஏதோ ஒன்று நிகழ்கிறது

காமமும்
சுயபரிசீலனையும்
நிர்பந்தமும்
அவநம்பிக்கையும்
சுயபிரேமையும்
ஒரு பிரேதத்தின் விரைப்பும்
அவமானப்படுத்தப்படும் பயன்படுத்தப்படும் கிழிக்கப்படும்
உடலின் கண்களில் மிளிரும் ஒளியும்
வெவ்வேறு அம்மணங்கள்

ஆனால் கத்தி பயப்படுவது
அத்தகைய விடுவிப்பையோ கைவிடுதலையோ அல்ல

ஒளிந்திருந்து பாயும் முன்
இப்பூமியின் அத்தனை கத்திகளும்
உறங்காதிருப்பது அதனால் தான்.

(புறநடை பத்திரிகையில் வெளியான கவிதை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.