முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இனிய சேதியில் ஆரம்பமாகும் நாள்



ஒரு இனிய செய்தியில் ஆரம்பமாகும் நாள்
அப்போதில்
இருந்து தான்
துவங்குகிறது

ஒரு இனிய நாள்
கண்டனங்கள் ஏமாற்றங்கள் வருத்தங்களில் இருந்து
மிக பாதுகாப்பாக இருக்கிறது
வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை போல்

அதற்கு மிக ரகசியமாக
உணவு போகிறது
மிக அலட்சியமாக புரண்டு படுக்கிறது
திரும்பிப் பார்க்காதவர்களுக்கு
அமைதியாக சில உதைகளை விடுகிறது

வழமையாக நம்மை
அவமானிக்கும் சங்கடப்படுத்தும் கண்ணீர் விட வைக்கும்
எதிரிகள்
ஒருநொடி குழம்பிப் போய் விடுகிறார்கள்
இனி என்ன செய்வது என.


ஒரு இனிய செய்தியுடன் துவங்கும் நாளை
யாராலும் நிறுத்த முடியாது -
துவங்கி முடியாத
அந்த நாளில்
எதேச்சையாக நீங்கள் விழிக்கிறீர்கள்

மீண்டும் அந்நாள் முடிகையில்
மழைபெய்யும் நாளில் தொப்பலாக வீடு திரும்புவது போல்
ஒவ்வொரு அறிந்த விரலாக தொட்டு
ஆசுவாசம் கொள்கிறீர்கள்
இனிய செய்தியில் ஆரம்பமாகும் நாள்
நம்மை
அவ்வளவு மூச்சு முட்ட வைக்கிறது

ஒரு இனிய செய்தியில் ஆரம்பமாகும் நாளைப் போல்
மிக அமைதியாக மகிழ்ச்சியை
வேறெதுவும்
தக்க வைப்பதில்லை
மகிழ்ச்சியோ நெகிழ்ச்சியோ எக்களிப்போ
ஒரு விரல் தீண்டலில் எதிர்தொடுகைக்கு புரிந்து விடுகிறது

நெரிசலான மக்கள் கூட்டத்தை பார்த்தபடி
அந்நியமாக தனியாக
நடைபாதையில் அமர்ந்து
கேவி கேவி அழுபவனை பார்த்திருக்கிறோம்
கடந்து போகும் நம்மை திடுக்கிட வைக்கும் படியாய்
செல்போனில் சட்டென கூவி அழும்
பெண்ணை கேட்டிருக்கிறோம்
மெல்ல கசக்கும் கண்களைப் பார்த்து
தூசா அழுகையா உண்மையா நடிப்பா என வியந்திருக்கிறோம்
துக்கத்துக்கு அவ்வளவு பிரயத்தனம் தேவையுள்ளது
நீங்கள் துக்கித்திருப்பதை நம்ப
யாருமே தயாராக இல்லை
அது சாத்தியமே இல்லை
அதில் நியாயமே இல்லை
ஒவ்வொரு பக்கமிருந்தும்
ஆறுதல் வருகிறது
களைத்து குற்றவுணர்வு அடைகிறீர்கள்

ஆனால் ஒரு இனிய செய்தியுடன் நாளை ஆரம்பித்தவனை
சட்டென்று நம்பி விடுகிறார்கள்
வறண்ட புன்னகையுடன் கைகுலுக்கிறார்கள்
மேலோட்டமான் குரலில் வாழ்த்துகிறார்கள்
கோபமாய் வெறிக்கிறார்கள்
இதெற்கெல்லாம் மகிழ்ச்சியடைவது மிகை என குறிப்புணர்த்துகிறார்கள்
துயரத்தின் போது அசலான நண்பனை கண்டறியலாம்
என யார் சொன்னது?
எனது வாழ்வின் மிக இனிய நாளின் போது
நான் கண்டேன்
ஒரு மிக இனிய நாளை
மிக கசப்பான நாளில் இருப்பவர்களால் தான்
அறிந்து கொள்ள முடியும் என

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.