முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோயில் சொத்தும் கறுப்புப்பணமும்


திருப்பதியில் பச்சன்கள்


பத்மநாபசாமி கோயிலின் தங்க புதையல் பற்றின சர்ச்சை எழுந்த போது ஜெயமோகன் எழுதின கட்டுரை நினைவிருக்கும். இவ்வளவு தங்கமும் நிலைத்திருப்பதே ராஜகுடும்பத்தின் பொறுப்பில் இருப்பதால் தான், அரசின் வசம் சென்றிருந்தால் அரசியல்வாதிகள் முழுக்க கொள்ளையடித்திருப்பார்கள் என்றார். ஆனால் இப்போது உச்சநீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் கோயில் சொத்தை அதன் ராஜகுடும்ப பொறுப்பாளர்களே கொள்ளையடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கின் மையம் கோயில் சொத்து யார் பொறுப்பில் இருந்தால் பாதுகாப்பு எனும் கேள்வி. தனியார் வசம் இருந்தால் இன்னும் ஆபத்தானது என இப்போது தெளிவாகி உள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் கீழுள்ள ஆயிரம் கோடி சொத்துக்களையும் சரியாக கணக்கு பார்த்து கட்டுப்படுத்த இச்சந்தர்பத்தை பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக கோயிலின் கீழ் சொத்தும் பணமும் அதிகாரமும் திரள்வது நிலப்பிரபுத்துவ, மன்னராட்சி காலகட்டத்தில் துவங்கிய ஒன்று. அப்போது மன்னராட்சியும் மத நம்பிக்கையும் பிணைந்திருந்தது. மேற்கில் போப்புக்கும் இந்தியாவில் பிராமணர்களுக்கும் ஆட்சியில் “நிர்வாகமற்ற” அதிகாரம் இருந்த காலம் அது. சாணக்யன் ஆட்சியை கவிழ்த்த கதைக்கு இங்கு ஒரு காவியத்தன்மையே உள்ளது. போப்புக்கும் ஆங்கில மன்னர்களுக்கும் இடையே நிகழ்ந்த அதிகார போட்டியின் விளைவாகத் தான் புரொட்டெஸ்டண்ட் மதம் தோன்றியது. ஆனால் நாம் இன்று ஒரு மதசார்பின்மை காலகட்டத்தில் வாழ்கிறோம். இயல்பாகவே தனது அன்றாட பரிபாலனத்துக்கு அன்றி கோயிலுக்கு மிகையான பணமும் சொத்தும் அவசியம் இல்லை. துரதிஷ்டவசமாக மக்களுக்கு கோயில் மீதுள்ள செண்டிமெண்ட் காரணமாக கணிசமான சொத்துக்களை கோயிலின் பெயரில் வைதிக நிர்வாகத்தினர் ஆட்சி செய்கின்றனர். இந்த பிடி வலுவானது; சமீபத்தில் இது விடுபடாது. இது முழுக்க பணமும் அதிகாரமும் மத செண்டிமண்டால் சில குறிப்பிட்ட சாதியினரிடம் தக்க வைக்கப்படும் விவகாரம்.
பொருளாதார ரீதியில் இந்த பிரச்சனையை அணுகுவது பொதுமக்களின் புரிதலுக்கு உதவும். பத்மநாபசாமி கோயிலில் நிகழ்வது போல் ஆயிரம் கோடி சொத்து ஓரிடத்தில் பயன்பாடின்றி பதுங்குவது கள்ளச்சந்தையில் பணம் பதுங்குவதற்கு சமானம். இன்னும் சொல்லப்போனால் ஸ்விஸ் வங்கியில் கறுப்புப்பணம் தூங்குவதற்கு சமானம். பணம் புழக்கத்தில் இருக்க வேண்டும். அல்லாவிட்டால் அது பொருளாதாரத்தை மந்தமாக்கும். சமீபத்தில் பா.சிதம்பரம் மக்கள் பணத்தை தங்கத்தில் முதலீடு ஆக்குவதை விமர்சித்த்து நினைவிருக்கும். மக்களுக்கு அந்த உரிமை உண்டெனிலும் பணம் ஓரிட்த்தில் உறங்குவது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இன்றைய பொருளாதாரப்படி பொருட்களை மக்கள் வாங்குவதில அதிகமாக செலவழிப்பது தான் வியாபாரத்தை ஊக்குவிக்கும். விளைவாக நாட்டின் ஜி.டி.பி வளரும். வேலை வாய்ப்பும் சம்பளமும் உயரும். சம்பளம் உயர நாம் பணத்தை மேலும் பொருள் வாங்குவதில் செலவழிக்க வேண்டும். இந்த சக்கர ஓட்ட்த்தில் தான் நவீன பொருளாதாரத்தின் ஜீவன் உள்ளது. ஆக பத்மநாபசாமி கோயிலின் தங்கத்தை நாம் மெட்ரோ ரயில் உருவாக்கவோ மேம்பாலம், விமானநிலையம் கட்டவோ அல்லது ஐ.டி பார்க் உருவாக்கவோ பயன்படுத்தினால் அது கேரள பொருளாதாரத்தை உயிர்ப்பிக்க கணிசமாய் உதவும்.
கோயில் சொத்தை அடுத்தவன் பயன்படுத்த விடவா என இந்துக்கள் யோசிப்பது வெறும் தட்டையான கோஷங்களுக்கே இட்டு செல்லும். இஸ்லாமியரை பாகிஸ்தானுக்கு விரட்டுவோம் என பா.ஜ.க கோருவது போலத் தான் இது. நமது பொருளாதாரமும், சமூக கலாச்சார முன்னேற்றமும் இஸ்லாமியரின் பங்களிப்புடனும் தான் நடக்கிறது. குறிப்பாய் இந்திய வணிகத்தில் அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. அவர்கள் என்ன இந்த லாபத்தை பாகிஸ்தானுக்கா அளிக்கிறார்கள்? அரபிய நாடுகளில் இருந்து கொண்டு வரும் பணத்தை அவர்கள் இந்தியாவுக்கு தானே அளிக்கிறார்கள். ஒரு தாராளவாத, ஜனநாயக சூழலில் “மற்றவன்” என்கிற வாதத்துக்கே இடமில்லை. பணம் பரிமாற்றத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் நாடு வளரும்.
கோயில் எனும் ஒற்றை மையத்தில் சொத்தையும் பணத்தையும் குவிக்கும் பழைய முறை வழக்கொழிந்து விட்டது என்பதை நாம் உணர வேண்டும். அமிதாப் பச்சன் தங்கக் கட்டிகளை திருப்பதி வெங்கடாசலபதிக்கு நன்கொடை கொடுத்தால் அதனால் அவரது குற்றவுணர்வு குறையலாம், நிம்மதி கிடைக்கலாம், மனம் ஆறலாம். ஆனால் சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை. அவரைப் போன்றவர்கள் சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கு இப்பணத்தை அளிக்கும்படியான நிர்பந்தத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். கோயில் நன்கொடைக்கு வரிவிலக்கு என்கிற சட்டத்தை மாற்ற வேண்டும். பதமநாதசாமி கோயில் பிரச்சனையை சரியாக கையாளும் நீதிமன்றம் அடுத்து இப்படியான அணுகுமுறையை அனைத்து கோயில் சொத்து விவகாரங்களுக்கும் எடுக்க வேண்டும்.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
கோவில் சொத்துக்கள் நாட்டுடைமை ஆக்கப்படவேண்டும் ,இல்லையெனில் வாரிசுகளாலும் ,அரசியல்வாதிகளாலும் கொள்ளை அடிக்கப் பட்டுவிடும் என்பதில் ஐயமில்லை !
சேக்காளி இவ்வாறு கூறியுள்ளார்…
//மெட்ரோ ரயில் உருவாக்கவோ மேம்பாலம், விமானநிலையம் கட்டவோ அல்லது ஐ.டி பார்க் உருவாக்கவோ//
வேளாண்மை தவிர்க்கப்பட்டதேனோ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...