Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கோயில் சொத்தும் கறுப்புப்பணமும்


திருப்பதியில் பச்சன்கள்


பத்மநாபசாமி கோயிலின் தங்க புதையல் பற்றின சர்ச்சை எழுந்த போது ஜெயமோகன் எழுதின கட்டுரை நினைவிருக்கும். இவ்வளவு தங்கமும் நிலைத்திருப்பதே ராஜகுடும்பத்தின் பொறுப்பில் இருப்பதால் தான், அரசின் வசம் சென்றிருந்தால் அரசியல்வாதிகள் முழுக்க கொள்ளையடித்திருப்பார்கள் என்றார். ஆனால் இப்போது உச்சநீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் கோயில் சொத்தை அதன் ராஜகுடும்ப பொறுப்பாளர்களே கொள்ளையடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கின் மையம் கோயில் சொத்து யார் பொறுப்பில் இருந்தால் பாதுகாப்பு எனும் கேள்வி. தனியார் வசம் இருந்தால் இன்னும் ஆபத்தானது என இப்போது தெளிவாகி உள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் கீழுள்ள ஆயிரம் கோடி சொத்துக்களையும் சரியாக கணக்கு பார்த்து கட்டுப்படுத்த இச்சந்தர்பத்தை பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக கோயிலின் கீழ் சொத்தும் பணமும் அதிகாரமும் திரள்வது நிலப்பிரபுத்துவ, மன்னராட்சி காலகட்டத்தில் துவங்கிய ஒன்று. அப்போது மன்னராட்சியும் மத நம்பிக்கையும் பிணைந்திருந்தது. மேற்கில் போப்புக்கும் இந்தியாவில் பிராமணர்களுக்கும் ஆட்சியில் “நிர்வாகமற்ற” அதிகாரம் இருந்த காலம் அது. சாணக்யன் ஆட்சியை கவிழ்த்த கதைக்கு இங்கு ஒரு காவியத்தன்மையே உள்ளது. போப்புக்கும் ஆங்கில மன்னர்களுக்கும் இடையே நிகழ்ந்த அதிகார போட்டியின் விளைவாகத் தான் புரொட்டெஸ்டண்ட் மதம் தோன்றியது. ஆனால் நாம் இன்று ஒரு மதசார்பின்மை காலகட்டத்தில் வாழ்கிறோம். இயல்பாகவே தனது அன்றாட பரிபாலனத்துக்கு அன்றி கோயிலுக்கு மிகையான பணமும் சொத்தும் அவசியம் இல்லை. துரதிஷ்டவசமாக மக்களுக்கு கோயில் மீதுள்ள செண்டிமெண்ட் காரணமாக கணிசமான சொத்துக்களை கோயிலின் பெயரில் வைதிக நிர்வாகத்தினர் ஆட்சி செய்கின்றனர். இந்த பிடி வலுவானது; சமீபத்தில் இது விடுபடாது. இது முழுக்க பணமும் அதிகாரமும் மத செண்டிமண்டால் சில குறிப்பிட்ட சாதியினரிடம் தக்க வைக்கப்படும் விவகாரம்.
பொருளாதார ரீதியில் இந்த பிரச்சனையை அணுகுவது பொதுமக்களின் புரிதலுக்கு உதவும். பத்மநாபசாமி கோயிலில் நிகழ்வது போல் ஆயிரம் கோடி சொத்து ஓரிடத்தில் பயன்பாடின்றி பதுங்குவது கள்ளச்சந்தையில் பணம் பதுங்குவதற்கு சமானம். இன்னும் சொல்லப்போனால் ஸ்விஸ் வங்கியில் கறுப்புப்பணம் தூங்குவதற்கு சமானம். பணம் புழக்கத்தில் இருக்க வேண்டும். அல்லாவிட்டால் அது பொருளாதாரத்தை மந்தமாக்கும். சமீபத்தில் பா.சிதம்பரம் மக்கள் பணத்தை தங்கத்தில் முதலீடு ஆக்குவதை விமர்சித்த்து நினைவிருக்கும். மக்களுக்கு அந்த உரிமை உண்டெனிலும் பணம் ஓரிட்த்தில் உறங்குவது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இன்றைய பொருளாதாரப்படி பொருட்களை மக்கள் வாங்குவதில அதிகமாக செலவழிப்பது தான் வியாபாரத்தை ஊக்குவிக்கும். விளைவாக நாட்டின் ஜி.டி.பி வளரும். வேலை வாய்ப்பும் சம்பளமும் உயரும். சம்பளம் உயர நாம் பணத்தை மேலும் பொருள் வாங்குவதில் செலவழிக்க வேண்டும். இந்த சக்கர ஓட்ட்த்தில் தான் நவீன பொருளாதாரத்தின் ஜீவன் உள்ளது. ஆக பத்மநாபசாமி கோயிலின் தங்கத்தை நாம் மெட்ரோ ரயில் உருவாக்கவோ மேம்பாலம், விமானநிலையம் கட்டவோ அல்லது ஐ.டி பார்க் உருவாக்கவோ பயன்படுத்தினால் அது கேரள பொருளாதாரத்தை உயிர்ப்பிக்க கணிசமாய் உதவும்.
கோயில் சொத்தை அடுத்தவன் பயன்படுத்த விடவா என இந்துக்கள் யோசிப்பது வெறும் தட்டையான கோஷங்களுக்கே இட்டு செல்லும். இஸ்லாமியரை பாகிஸ்தானுக்கு விரட்டுவோம் என பா.ஜ.க கோருவது போலத் தான் இது. நமது பொருளாதாரமும், சமூக கலாச்சார முன்னேற்றமும் இஸ்லாமியரின் பங்களிப்புடனும் தான் நடக்கிறது. குறிப்பாய் இந்திய வணிகத்தில் அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. அவர்கள் என்ன இந்த லாபத்தை பாகிஸ்தானுக்கா அளிக்கிறார்கள்? அரபிய நாடுகளில் இருந்து கொண்டு வரும் பணத்தை அவர்கள் இந்தியாவுக்கு தானே அளிக்கிறார்கள். ஒரு தாராளவாத, ஜனநாயக சூழலில் “மற்றவன்” என்கிற வாதத்துக்கே இடமில்லை. பணம் பரிமாற்றத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் நாடு வளரும்.
கோயில் எனும் ஒற்றை மையத்தில் சொத்தையும் பணத்தையும் குவிக்கும் பழைய முறை வழக்கொழிந்து விட்டது என்பதை நாம் உணர வேண்டும். அமிதாப் பச்சன் தங்கக் கட்டிகளை திருப்பதி வெங்கடாசலபதிக்கு நன்கொடை கொடுத்தால் அதனால் அவரது குற்றவுணர்வு குறையலாம், நிம்மதி கிடைக்கலாம், மனம் ஆறலாம். ஆனால் சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை. அவரைப் போன்றவர்கள் சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கு இப்பணத்தை அளிக்கும்படியான நிர்பந்தத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். கோயில் நன்கொடைக்கு வரிவிலக்கு என்கிற சட்டத்தை மாற்ற வேண்டும். பதமநாதசாமி கோயில் பிரச்சனையை சரியாக கையாளும் நீதிமன்றம் அடுத்து இப்படியான அணுகுமுறையை அனைத்து கோயில் சொத்து விவகாரங்களுக்கும் எடுக்க வேண்டும்.

Comments

Unknown said…
கோவில் சொத்துக்கள் நாட்டுடைமை ஆக்கப்படவேண்டும் ,இல்லையெனில் வாரிசுகளாலும் ,அரசியல்வாதிகளாலும் கொள்ளை அடிக்கப் பட்டுவிடும் என்பதில் ஐயமில்லை !
//மெட்ரோ ரயில் உருவாக்கவோ மேம்பாலம், விமானநிலையம் கட்டவோ அல்லது ஐ.டி பார்க் உருவாக்கவோ//
வேளாண்மை தவிர்க்கப்பட்டதேனோ?

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...