முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டிவில்லியர்ஸ்: என்னடா பண்றது உன்னை?




தோனி, கெய்ல், மேக்ஸ்வெல் போன்று பல ராட்சச மட்டையாளர்கள் இருந்தாலும் அவர்களின் வாணவேடிக்கை ஷாட்கள் ஒருவழி டிராபிக் தான். தோனிக்கு பந்து நேராகவோ காலிலோ விழ வேண்டும். கெய்லுக்குக்கும் கிட்டத்தட்ட அது தான் ஏரியா. மேக்ஸ்வெலுக்கும் கால்பக்கம் அடிக்க பிடிக்கும். அவருக்கு வாரியடிக்கும் விதம் பந்தை கொஞ்சம் வைடாக போட்டால் இன்னும் இஷ்டம். தூக்கி அடிக்கையில் மட்டையின் அந்த வளைவு அவருக்கு முக்கியம். இவர்களை பலவீனமான இடங்களில் பந்து வீசி தடுக்க முடியும். ஆனால் ஆப், நேரே, உயரப்பந்து, கால் திசை என எங்கும் சமநிலை இழக்காமல் சிக்ஸ் அடிக்கக் கூடியவர் எ.பி.டிவில்லியர்ஸ் தான். நேற்றைய ஐ.பி.எல் ஆட்டத்தை அவர் தன்னந்தனியாக வென்றளித்தார். மகாபாரதத்தில் அர்ஜுன்ன் அம்பு ஒன்று பத்தாகி, பத்து நூறாகி ஆயிரமாகி பொழிவது போல் இருக்கிறது ஏ.பி அடிக்கும் சிக்ஸர்கள். 360 கோணத்தில் அனாயசமாய் சிக்ஸர்கள் விளாசக் கூடியவர் இவர் மட்டும் தான்.
இது எப்படி சாத்தியமாகிறது? முக்கிய காரணம் தோனி, கெய்ல் போன்று டிவில்லியர்ஸுக்கு ஒரு நிலைத்த ஸ்டான்ஸ் இல்லை. ஒரு பனிச்சறுக்கு வீரரை போல் நிற்கிறார். கையில் மட்டையும் இளகலாக லேசாக பற்றியிருக்கிறார். மைய குச்சியை காட்டியபடி விலகி நிற்கிறார். கால்பக்கம் விழுந்தால் மேக்ஸ்வெல் பாணியை குறுக்கே கோரி அடிக்கிறார். நேராய் வந்தால் தோனி பாணியில் அடிக்கிறார். அதே பந்து ஆப் குச்சியில் விழுந்தால் மிட் ஆப் அல்லது கவருக்கு மீதாக சிக்ஸ் அடிக்கவும் முடிகிறது. இப்படித் தான் அடிக்கப் போகிறேன் என திட்டமிடாத திடமற்ற ஸ்டான்ஸும் அபாரமான சமநிலையும் தான் டிவில்லியர்ஸை இந்த அதிசயங்களை செய்ய உதவுகிறது. முன்பு இதே போல் ஒரு பந்தை இறுதி நொடியில் எந்த திசையிலும் மாற்றி அடிக்கக் கூடியவராக சச்சின் இருந்தார். இந்த பாணி மட்டையாட்டத்தின் உச்சம் அவர் நேற்று ஸ்டெயினின் படுவேக பந்தை கொஞ்சம் ஆப் பக்கம் விலகி முட்டியிட்டு ஸ்வீப் சிக்ஸர் அடித்தது தான். அதையும் அவர் திட்டமிடாமல் தான் நின்றபடி தான் நிகழ்த்தினார். சட்டென காலை வழுக்கி திரும்பி லகுவாக பற்றியிருந்த மட்டையின் பிடியை மாற்றி அடித்து விட்டார்.
டிவில்லியர்ஸுக்கு ஒரு சின்ன பலவீனம் உண்டு. ரவுண்ட் த விக்கெட், அதாவது நடுவருக்கு வலப்பக்கமாய், வந்து கால் குச்சியில் இருந்து நடுக் குச்சிக்கு போகிற மாதிரி வீசிப் பார்க்கலாம். இது அவரது இளகலான ஸ்டான்ஸை அனுமதிப்பாது. பொதுவாக நான் பார்த்தது வரை இடதுகை வீச்சாளர்களும் கால் சுழல் வீச்சாளர்களும் அவரிடம் நன்றாகவே வீசி வந்துள்ளார்கள். ஹஷீம் ஆம்லாவைப் போல் கவர் மற்றும் கல்லி பகுதிகளில் பந்தை தூக்கி அடிக்கும் ஒரு சின்ன பலவீனமும் அவருக்கு உண்டு. ஆனால் ஆம்லாவைப் போல் கால்பக்கம் போட்டால் தன் சுழலும் மணிக்கட்டை பயன்படுத்தி சொடுக்கி அடிக்கும் திறன் டிவில்லியர்ஸுக்கு இல்லை.
யாரும் இந்த உத்தியை அவருக்கு எதிராக இன்னும் பயன்படுத்தி பார்க்கவில்லை. எதிர்காலத்தில் பார்ப்போம். இப்போதைக்கு எங்கு போட்டாலும் சிக்ஸர் அடிப்பார், யார்க்கரே ஒரே உபயம் எனும் எண்ணம் தான் பந்து வீச்சாளர்களுக்கு. யாரேனும் வித்தியாசமாய் முயல்வார்களா எனப் பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.