முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென்னாப்பிரிக்காவும் உலகக்கோப்பையும்

But Sohail Khan removed de Villiers in the 33rd over and swung the match back in Pakistan's favour

இன்று (7-3-15) நடந்த தென்னாப்பிரிக்கா-பாகிஸ்தான் லீக் போட்டி இந்த உலகக்கோப்பையின் மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்று. பாகிஸ்தான் முதலில் மட்டையாடி 222 அடித்தார்கள். தடுக்கி தடுமாறி கூட அடிந்து விடக்கூடிய எளிய ஸ்கோர். ஆனால் தென்னாப்பிரிக்கா தடுமாறிக் கொண்டே இருந்தார்கள். எழவே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள்.
 ஒன்று ஏழடி உயரமுள்ள முகமது இர்பான், இடதுகை வீச்சாளர்கள் ரகத் அலி, வஹாப் ரியாஸ் ஆகிய மந்திரப் பந்து வீச்சாளர்கள். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சின் தனித்தன்மை அவர்களால் மிகுந்த வேகத்தில் பந்தை ஸ்விங் செய்ய முடியும் என்பது. அவர்கள் நன்றாக வீசத் தொடங்கினால் பாலைவனச் சூறாவளி அடிப்பது போலத் தான். எதிர்த்து நிற்க நீங்கள் திராவிடாகவோ காலிஸாகவோ இருக்க வேண்டும். இன்று தென்னாப்பிரிக்காவை அந்த புயல் அடித்து தூக்கி சென்றது. டிவில்லியர்ஸ் மற்றுமே சற்று நேரம் எதிர்த்து நின்று சுடர்ந்து விட்டு அணைந்து விட்டார்.

தென்னாப்பிரிக்கா ஒவ்வொரு நான்கு ஓட்டங்கள் அடிக்கும் போது பாகிஸ்தான் வேகவீச்சாளர்கள் அஞ்சாமல் தொடர்ந்து விக்கெட்டுக்காக முயன்று கொண்டே இருந்தார்கள். இது ஒரு கண்காணா காட்சி. சன்னதம் வந்தது போன்ற கவனத்துடன், மன ஒழுங்குடன் ஆவேசத்துடன் வீசினார்கள்.
இரண்டாவது காரணம் தென்னாப்பிரிக்காவின் பதற்றம். தோற்று விடுவோமோ என்கிற பயம். ஒரு இலக்கை விரட்டும் போது இரண்டு ஓவர்கள் அவர்களுக்கு எதிராக நன்றாக ஆடினால் சுணங்கி விடுவார்கள். பதற்றத்தில் தடுமாறியபடி ஆடுவார்கள். பிறகு அவர்களுடையது தற்கொலை ஆட்டமாகத் தான் இருக்கும். ஆங்கிலத்தில் choking என்கிறார்கள். இந்த பிரச்சனை தென்னாபிரிக்காவுக்கு முன்னர் முக்கியமான ஆட்டங்களில் மட்டும் இருந்தது. இப்போது லீக் போட்டிகளில் கூட அவர்கள் தம் மீது போடும் கொள்ளும் அழுத்தத்தினால் சோக் ஆக ஆரம்பித்து விட்டார்கள். ஒரே விதிவிலக்கு ஹஷிம் ஆம்லா தான். அவர் பந்தை சொடுக்கி விரட்டும் போது அசருதீன் நினைவுக்கு வருகிறார். பந்து மட்டையில் படும் போது ஒரு தனித்துவமான சத்தம் வரும். இது மணிக்கட்டை சுழற்றி அடிக்கும் மட்டையாளர்களுக்கே உரித்தானது. ஆம்லாவைத் தவிர பிற தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு ஒரு ஜென் மனநிலையுடன் ஆட வரவில்லை. டிவில்லியர்ஸுக்கு கூட. அவரும் பதற்றமானால் அடிக்க ஆரம்பித்து விடுகிறார். இன்றைய ஆட்டத்தில் அவரிடத்தில் தோனி இருந்திருந்தால் ஒற்றை, ரெட்டை ஓட்டங்கள் எடுத்தே வென்றிருப்பார். ஆனால் அவர் நான்காவது கியரில் ஆடி ஆட்டம் இழந்தார்.
டிவில்லியர்ஸ் ஆம்லாவுக்கு இன்னொரு துருவம். ஆம்லாவுக்கு மணிக்கட்டும் டைமிங்கும் பலம் என்றால் இவருக்கு சமநிலையும் அடிக்கும் வலுவும் தனிச்சிறப்பு. முன்பெல்லாம் கால் பக்கமாய் விலகி நின்று பந்தை எங்கு வேண்டுமானாலும் அடித்துக் கொண்டிருந்தார். குச்சியை சுற்றி வந்து round the wicket வீசி அவரை கட்டுப்படுத்த முடிந்தது. இப்போது அம்முறையில் வீசினாலும் அதற்கும் ஒரு உபாயம் வைத்திருக்கிறார். Off குச்சிக்கு வெளியே வெகுவாக தள்ளி நின்று பந்து கால் பக்கமாய் அனாயசமாய் அடிக்கிறார். எப்படி நின்றாலும் அவரது சமநிலை குலைவதில்லை. அதனாலே அவரால் இஷ்டத்துக்கு ஆறு ஓட்டங்கள் அடிக்க முடிகிறது. அவரை இப்போது பார்க்க தொண்ணூறுகளில் சச்சினைப் பார்த்தது போல் இருக்கிறது.
டிவில்லியர்ஸ் இவ்வாறு அங்கும் இங்குமாய் தள்ளி நின்று அடிக்கையில் முழுநீளமோ யார்க்கரோ குட் லெங்தோ உதவாது. Short of the length தான் சரியான உபாயமாக இருக்கும். இன்று சொகைல் கான் அவரை அப்படித் தான் வீழ்த்தினார்.
இன்றைய ஆட்டம் பார்த்த பின்னர் தென்னாப்பிரிக்கா இந்த உலகக் கோப்பையை வெல்லும் எனும் நம்பிக்கை முழுமையாக போய் விட்டது. லீக் ஆட்டத்திலேயே இவ்வளவு கைநடுக்கம் என்றால் கால், அரை இறுதிகளில் அவர்களுக்கு பதற்றத்தில் ஜன்னியே வந்து விடும். தென்னாப்பிரிக்கா ஆடும் போது இரண்டு அணிகளுக்கு எதிராக போராட வேண்டும். ஒன்று எதிரணிக்கு எதிராக. அடுத்து தனக்கு எதிராக.

இம்முறையும் South Africa chokes again எனும் தலைப்பு செய்தி வரும் பாருங்கள். 

கருத்துகள்

Name : Rajesh RV இவ்வாறு கூறியுள்ளார்…
You exactly echoed whatever I felt too. They never tried to build an innings. Every one went to slog. Steyn out was for a wild slog. I felt like " adapavi gala, Intha team thaan world cup win pannumnu Evan data sonathu"
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
கடைசி நேரத்தில் சொதப்பல் நியுஜியும்...?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...