Skip to main content

தென்னாப்பிரிக்காவும் உலகக்கோப்பையும்

But Sohail Khan removed de Villiers in the 33rd over and swung the match back in Pakistan's favour

இன்று (7-3-15) நடந்த தென்னாப்பிரிக்கா-பாகிஸ்தான் லீக் போட்டி இந்த உலகக்கோப்பையின் மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்று. பாகிஸ்தான் முதலில் மட்டையாடி 222 அடித்தார்கள். தடுக்கி தடுமாறி கூட அடிந்து விடக்கூடிய எளிய ஸ்கோர். ஆனால் தென்னாப்பிரிக்கா தடுமாறிக் கொண்டே இருந்தார்கள். எழவே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள்.
 ஒன்று ஏழடி உயரமுள்ள முகமது இர்பான், இடதுகை வீச்சாளர்கள் ரகத் அலி, வஹாப் ரியாஸ் ஆகிய மந்திரப் பந்து வீச்சாளர்கள். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சின் தனித்தன்மை அவர்களால் மிகுந்த வேகத்தில் பந்தை ஸ்விங் செய்ய முடியும் என்பது. அவர்கள் நன்றாக வீசத் தொடங்கினால் பாலைவனச் சூறாவளி அடிப்பது போலத் தான். எதிர்த்து நிற்க நீங்கள் திராவிடாகவோ காலிஸாகவோ இருக்க வேண்டும். இன்று தென்னாப்பிரிக்காவை அந்த புயல் அடித்து தூக்கி சென்றது. டிவில்லியர்ஸ் மற்றுமே சற்று நேரம் எதிர்த்து நின்று சுடர்ந்து விட்டு அணைந்து விட்டார்.

தென்னாப்பிரிக்கா ஒவ்வொரு நான்கு ஓட்டங்கள் அடிக்கும் போது பாகிஸ்தான் வேகவீச்சாளர்கள் அஞ்சாமல் தொடர்ந்து விக்கெட்டுக்காக முயன்று கொண்டே இருந்தார்கள். இது ஒரு கண்காணா காட்சி. சன்னதம் வந்தது போன்ற கவனத்துடன், மன ஒழுங்குடன் ஆவேசத்துடன் வீசினார்கள்.
இரண்டாவது காரணம் தென்னாப்பிரிக்காவின் பதற்றம். தோற்று விடுவோமோ என்கிற பயம். ஒரு இலக்கை விரட்டும் போது இரண்டு ஓவர்கள் அவர்களுக்கு எதிராக நன்றாக ஆடினால் சுணங்கி விடுவார்கள். பதற்றத்தில் தடுமாறியபடி ஆடுவார்கள். பிறகு அவர்களுடையது தற்கொலை ஆட்டமாகத் தான் இருக்கும். ஆங்கிலத்தில் choking என்கிறார்கள். இந்த பிரச்சனை தென்னாபிரிக்காவுக்கு முன்னர் முக்கியமான ஆட்டங்களில் மட்டும் இருந்தது. இப்போது லீக் போட்டிகளில் கூட அவர்கள் தம் மீது போடும் கொள்ளும் அழுத்தத்தினால் சோக் ஆக ஆரம்பித்து விட்டார்கள். ஒரே விதிவிலக்கு ஹஷிம் ஆம்லா தான். அவர் பந்தை சொடுக்கி விரட்டும் போது அசருதீன் நினைவுக்கு வருகிறார். பந்து மட்டையில் படும் போது ஒரு தனித்துவமான சத்தம் வரும். இது மணிக்கட்டை சுழற்றி அடிக்கும் மட்டையாளர்களுக்கே உரித்தானது. ஆம்லாவைத் தவிர பிற தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு ஒரு ஜென் மனநிலையுடன் ஆட வரவில்லை. டிவில்லியர்ஸுக்கு கூட. அவரும் பதற்றமானால் அடிக்க ஆரம்பித்து விடுகிறார். இன்றைய ஆட்டத்தில் அவரிடத்தில் தோனி இருந்திருந்தால் ஒற்றை, ரெட்டை ஓட்டங்கள் எடுத்தே வென்றிருப்பார். ஆனால் அவர் நான்காவது கியரில் ஆடி ஆட்டம் இழந்தார்.
டிவில்லியர்ஸ் ஆம்லாவுக்கு இன்னொரு துருவம். ஆம்லாவுக்கு மணிக்கட்டும் டைமிங்கும் பலம் என்றால் இவருக்கு சமநிலையும் அடிக்கும் வலுவும் தனிச்சிறப்பு. முன்பெல்லாம் கால் பக்கமாய் விலகி நின்று பந்தை எங்கு வேண்டுமானாலும் அடித்துக் கொண்டிருந்தார். குச்சியை சுற்றி வந்து round the wicket வீசி அவரை கட்டுப்படுத்த முடிந்தது. இப்போது அம்முறையில் வீசினாலும் அதற்கும் ஒரு உபாயம் வைத்திருக்கிறார். Off குச்சிக்கு வெளியே வெகுவாக தள்ளி நின்று பந்து கால் பக்கமாய் அனாயசமாய் அடிக்கிறார். எப்படி நின்றாலும் அவரது சமநிலை குலைவதில்லை. அதனாலே அவரால் இஷ்டத்துக்கு ஆறு ஓட்டங்கள் அடிக்க முடிகிறது. அவரை இப்போது பார்க்க தொண்ணூறுகளில் சச்சினைப் பார்த்தது போல் இருக்கிறது.
டிவில்லியர்ஸ் இவ்வாறு அங்கும் இங்குமாய் தள்ளி நின்று அடிக்கையில் முழுநீளமோ யார்க்கரோ குட் லெங்தோ உதவாது. Short of the length தான் சரியான உபாயமாக இருக்கும். இன்று சொகைல் கான் அவரை அப்படித் தான் வீழ்த்தினார்.
இன்றைய ஆட்டம் பார்த்த பின்னர் தென்னாப்பிரிக்கா இந்த உலகக் கோப்பையை வெல்லும் எனும் நம்பிக்கை முழுமையாக போய் விட்டது. லீக் ஆட்டத்திலேயே இவ்வளவு கைநடுக்கம் என்றால் கால், அரை இறுதிகளில் அவர்களுக்கு பதற்றத்தில் ஜன்னியே வந்து விடும். தென்னாப்பிரிக்கா ஆடும் போது இரண்டு அணிகளுக்கு எதிராக போராட வேண்டும். ஒன்று எதிரணிக்கு எதிராக. அடுத்து தனக்கு எதிராக.

இம்முறையும் South Africa chokes again எனும் தலைப்பு செய்தி வரும் பாருங்கள். 

Comments

You exactly echoed whatever I felt too. They never tried to build an innings. Every one went to slog. Steyn out was for a wild slog. I felt like " adapavi gala, Intha team thaan world cup win pannumnu Evan data sonathu"
கடைசி நேரத்தில் சொதப்பல் நியுஜியும்...?

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...