முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தக கண்காட்சியை எப்படி அணுகுவது?


அன்புள்ள அபிலாஷ் சாருக்கு ,
           வணக்கம்.உங்கள் விமர்சன கட்டுரைகள் தான் என்னை உங்களை நோக்கி அழைத்து வந்தது.வாசிப்பை பற்றி நீங்கள் தெரிவிக்கும் நுட்பங்கள் மிகவும் உதவிகரமாக உள்ளது.இவ்வாண்டில் தங்களை மிகவும் கவர்ந்த புத்தகங்களை பற்றி எழுதினால் புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

                   ஜானகிராமன் 
                    நன்றி
அன்புள்ள ஜானகிராமன்
உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.
 என்ன புத்தகங்கள் வாங்குவது?
ஒரு பட்டியலைக் கையில் கொண்டு கண்காட்சிக்கு செல்வது விநாயகர் உலகை சுற்றி வரப் புறப்பட்டது போல் ஆகி விடும். எந்த நோக்கமும் இன்றி கண்காட்சியை மேய்வதே சிறந்த அனுபவம். ஆனாலும் எந்த இலக்குமின்றி, தெளிவும் இன்றி எப்படி புத்தகம் வாங்குவது என கேட்டீர்களானால் அதற்கு பதில் தேட நீங்கள் உங்களுக்குள் முதலில் தேட வேண்டும். உங்கள் ரசனை என்னவென அறிய வேண்டும்.
 கடந்த ஓராண்டில் எந்த எழுத்தாளனை தொடர்ந்து ரசித்துப் படிக்கிறீர்கள்? என்ன வகையான எழுத்து அது? அதன் பாணி, ஸ்டைல், தொனி, கருத்துக்கள், நிலைப்பாடு என்னென்ன? புது எழுத்தாளரா மூத்த எழுத்தாளரா? புனைவா, அபுனைவா அல்லது கவிதையா? அரசியலா, சமூகமா, தனி அனுபவமா, உறவுகள் பற்றின பதிவுகளா, உளவியலா, கலாச்சாரமா, அடிதடி வம்புகளா, சித்தாந்தமா, தத்துவமா, ஆய்வுக் கட்டுரைகளா?
எல்லா வகையான எழுத்துக்களும் நமக்கு அவசியமே. ஆக எந்த கூச்சமும் இல்லாமல் மேற்சொன்னவாறு தொகுத்துக் கொள்ளுங்கள். அதன்படி எப்படியான புத்தகங்களை நீங்கள் தேடப் போகிறீர்கள் என தயாரிக்கலாம்.
அடுத்து, நீங்கள் தேடும் வகை நூல்கள், படைப்பாளிகள் எந்த பதிப்பகங்களில் கிடைக்கும், கிடைப்பார்கள் என அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். உதா. புது, சமகால எழுத்துக்கள், வணிக மற்றும் தீவிர ரசனைகள் கலந்த நூல்கள், சுஜாதாவின் நூல்கள் உயிர்மையில் கிடைக்கும். பண்பாட்டு ஆய்வுகள், மொழிபெயர்ப்பு, செவ்வியல் படைப்புகள், சு.ராவின் நூல்கள் என்றால் காலச்சுவடு. கிழக்குப் பதிப்பகம் இம்முறை இலக்கிய நூல்களும் அதிகம் கொண்டு வரப் போகிறார்கள். எஸ்.ராவின் நூல்கள் அதிகமும் வேடியப்பனின் கடையிலும், சாருவின் நூல்கள் கிழக்கிலும் கிடைக்கலாம். ஜெயமோகனின் நூல்கள் நற்றிணையில் கிடைக்கலாம். இது போக எவ்வளவோ வகைவகையான நூல்கள், விதவிதமான வித்தியாசமான கடைகள் இருக்கும். புது எழுத்தாளர்களின் நூல்கள் சிதறலாய் பல கடைகளில் கிடைக்கும்.
நீங்கள் சென்னையில் இருந்தால் இம்மாதம் தொடர்ந்து நடக்க இருக்கும் நூல் வெளியீட்டு கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். இம்மாதம் வெளிவரும் சிறு, நடுநிலை பத்திரிகைகளை வாங்கி புரட்டிப் பாருங்கள். பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் முகநூலில் இருக்கிறார்கள். அவர்களைப் பின் தொடருங்கள். இவையெல்லாம் செய்தால் வரப் போகும் முக்கியமான நூல்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நான் ஒருபோதும் படிக்க வேண்டிய படைப்பாளிகளின் பட்டியலை நல்க மாட்டேன். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. மேலே குறிப்பிட்ட படைப்பாளிகள் கூட பொதுவாக இன்று பரவலாக படிக்கப்படுபவர்கள் எனும் ரீதியிலே. உங்களுக்கு ஆர்வமில்லையெனில் அவர்கள் பக்கமும் நீங்கள் நகரத் தேவையில்லை.
நாம் படித்தாக வேண்டிய நூல்கள் என்றொரு பட்டியல் நாம் சுலபத்தில் தயாரிக்கலாம். ஆனால் உங்கள் வாசிப்பு வளம் பெற அது உதவாது. என் 17 வயதில் ஜெயமோகனை சந்தித்து இதே கேள்வியை நான் கேட்க அவர் உடனடியாய் ஒரு தாளில் ஐம்பது சிறந்த கதைகளை எழுதித் தந்தார். ஆனால் அந்த பட்டியல் எனக்கு பயன்படவில்லை. ஏனெனில் என் ரசனை தனியானது. பரிந்துரைப் பட்டியல் படி வாசிப்பது நம் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவாது. நான் தமிழின் சிறந்த எழுத்துக்களை படித்து விட்டேன் என இறுமாப்பு கொள்ள ஒருவருக்கு இப்பட்டியல்கள் பயன்படலாம். ஆனால் உண்மையான வாசிப்பு அதுவல்ல. வாசிப்பு தனியான பாதை. ஒரு மின்மினியைத் தொடர்ந்து இருளில் தனியாக நடந்து செல்லும் பயணம். அதுவே உங்களை மேம்படுத்தும்!
ஜாலியாக கை வீசி நடந்து செல்லுங்கள். புத்தகங்களை நின்று கவனித்து புரட்டிப் பார்த்து முடிந்தால் அங்கேயே சில பக்கங்களை படியுங்கள். அல்லது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும்படியாய் தோன்றினால் வாங்குங்கள். புத்தகங்களுடனான நம் உறவு பார்த்ததும் காதல் என இருக்க வேண்டும். பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணமாய் இருக்கக் கூடாது.
 நான் சென்ற முறை கண்காட்சியில் ஒரு நண்பருடன் சென்றேன். அவர் எந்த கடைக்குப் போனாலும் அங்குள்ள அத்தனை கவிதை நூல்களை வாங்கி சேகரித்துக் கொண்டார். அது தன் கடமை என்பது போல் நடந்து கொண்டார். நான் மாறாக, ஒவ்வொரு கடையிலும் பத்து அல்லது இருபது கவிதை நூல்களை பொறுக்கி எடுத்து அங்கேயே அமர்ந்து அவற்றில் சில பக்கங்கள் படித்து ஒன்றிரண்டு மட்டும் தேர்ந்தெடுத்தேன். நான் கண்காட்சிக்கு சென்றே அங்கே புத்தகங்களைத் தேடுவதை விட வாசிப்பதிலே அதிகம் நேரம் செலுத்துவேன்.
இன்னொரு விசயமும் கண்காட்சியில் முக்கியம். எழுத்தாளர்களையும் நண்பர்களையும் சந்திப்பது, வேடிக்கை பார்ப்பது, சும்மா சுற்றித் திரிவது. கண்காட்சியை நான் இப்படி ஒரு சந்திப்பு முனையாக பார்க்கிறேன்.
 நீங்கள் உங்கள் காதலியைக் காண அவளது கல்லூரிக்குப் போய் காத்து நிற்கிறீர்கள். அவள் வரத் தாமதமாக அங்கு உலவும் பிற அழகிய இளம்பெண்களை ரசித்து நிற்பீர்கள் அல்லவா! கண்காட்சியிலும் அது போல் நோக்கமற்ற ரசனையும் அலைச்சலும் அருமையான அனுபவங்கள்.

சிறப்பாக அமையட்டும்!

கருத்துகள்

குலசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
அடுத்தாண்டு புத்தக கண்காட்சி தேதிகள் முடிவாகிவிட்டனவா?
Pandiaraj Jebarathinam இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதில் கட்டுரை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...