முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலகுமாரன் எனும் பேரலை (4)


 Image result for balakumaran
தங்குதடையின்றி பலவித முரணான இசைவான மன உணர்வுகள் சுழித்தோடும் ஆற்றுப்பெருக்காய் தன் மொழியை பாலகுமாரன் வைத்திருந்தது ஒரு அற்புதம்.

 இரும்புக்குதிரைகள்நாவலில் ஏழை இளம்பெண் காயத்ரி காதலெல்லாம் தனக்கு சரிப்படாது என சிந்திக்கிறாள். “தனக்கென்னவோ இவர்களை விடலைப்பையன் என்று தான் நினைக்க முடிகிறதே தவிர இவர்களோடு பேச முடியும், சிரிக்க முடியும் என்றே தோன்றவில்லை. … தெருவில் நடக்கையில் பரக்க பரக்க பார்க்கும் பையனை எப்படி நேசிப்பது?” (96).
 இதை அடுத்து அவள் சிந்தனை முன்னுக்குப் பின் முரணாய் வளர்ந்து போகும். வாலிப பையன்களா? அவர்கள் பால் எனக்கு என்ன ஈர்ப்பு வர முடியும்? இப்படி நினைத்தவள் அடுத்து தன் வீட்டுக்கு ஒருநாள் அப்பாவை பார்க்க வந்து இலக்கியமும் தத்துவமும் பேசி திளைத்துக் கொண்டிருந்த வாலிபர்களை சிலரை எண்ணி லயிக்கிறாள். அந்த இளைஞர்கள் தன் மீது காட்டிய அலட்சியம் அவளை ஈர்க்கிறது.
முதலில் அப்பா வயதுள்ள ஒருவரின் அனுபவமே தன்னை ஈர்க்கும் என்றவள் இப்போது ஏன் ஏற்கனவே மணமான இந்த இளைஞர்களை நோக்கி ததும்பி சரிகிறாள்? இந்த மனநிலை ஏன் இப்படி என பாலகுமாரன் விளக்குவதில்லை.
 ஏன் சாத்தியமில்லாத காதல் இலக்குகள் அவளை ஈர்க்கின்றன? அவள் வாழ்வு இப்படித் தான் நிழலுருவங்களை நாடிப் பாய்ந்து அல்லோலப்படப் போகிறதா? ஏன் அப்படி? தெளிவாக யோசிக்கத் துவங்கும் ஒரு பெண் தன்னையறியாது தெளிவின்மையை நோக்கி வழுவும் இந்த இடம் அழகானது. வாழ்க்கையின் ஆழம், அழகு, உண்மை, சிலாக்கியம் இந்த பகுத்தறிவை மீறின தெளிவின்மையில் தான் இருக்கிறது.
ஒரு பெண் தன் கணவன் தன்னை தேவடியா என அழைத்தாள் சிலிர்ப்பாளா? அல்லது கொந்தளிப்பாளா? சூழல், தொனி, மன அமைப்பு என பல காரணிகள் இதை தீர்மானிக்கும். ஒரு சமயம் இதைக் கேட்டு வெறுப்பாகும் ஒரு பெண் இன்னொரு சமயம் இதைக் கேட்டு லயித்து சுகிக்கலாம். “மெர்க்குரிப்பூக்களில்இதை ஓரிடத்தில் பாலகுமாரன் தொட்டுக் காட்டுகிறார்:
விரல்கள் அவள் உடம்பு முழுக்க அலைந்து என்ன செய்வது என தெரியாமல் தவித்தன. சாவித்திரி கூச்சத்துடன் நெளிந்து இன்னும் நெருக்கமானாள்.
என்ன தேடறேள் இப்போ?’ – சாவித்திரி கொஞ்சினாள். கணேசன் சாவித்திரியின்  காதைக் கடித்தான். ‘தேவிடியா தேவிடியாஎன முணுமுணுத்தான்.
சாவித்திரி கணேசனின் கன்னத்தை கிள்ளினாள்.
வெளியே சொன்னால் வெட்கக்கேடு. எப்பக் கண்டாலும் பொண்டாட்டியைத் தேவிடியான்னு கூப்பிடறது. தேவிடியாளைத் தான் பொண்டாட்டியா நினைச்சுப்பான்னு கேள்விப்பட்டிருக்கேன் இங்க என்னமோ தலைகீழ் பாடமா இருக்கே!’ ” (மெர்க்குரிப்பூக்கள், 19)
இதைச் சொல்கிற சாவித்ரி மிக முதிர்ச்சியானவள். ஆண்களின் ஆதிக்க மனப்பான்மையை அவள் நாவலில் இன்னொரு இடத்தில் விமர்சிப்பாள். “தங்கச்சிஎன சுப்பையா அவளிடம் நெகிழும் போது அவள் கூடவே கலங்குகிறாள். ஆனால் அடுத்த நாள் இந்த நெகிழ்வு ஒரு போலித்தனம் என்கிறாள்.
 தன் கணவன் கணேசனின்தேவடியாவிளியும் ஒரு ஆண்-மைய கர்வம் என அவளுக்கு பிறிதொரு சமயம் தோன்றலாம். இரண்டுமே சரி தான். இரண்டிலுமே அவள் இருக்கிறாள். மனிதர்கள் இப்படி இருப்பார்கள்; இதுவே மனிதனின் உண்மை இயல்பு; இதுவே மனித மனத்தின் அழகு என பாலகுமாரன் சுட்டிக்காட்டுகிறார்.

கருத்துகள்

Massy spl France. இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு எழுத்தாளனின் சிந்தனையின் வடிவங்கள் மற்றும் அவரது மனதின் கட்டமைப்புகளை படம் பிடித்து காட்ட முயற்சிக்கும் உங்களது பதிவு அற்புதம் நண்பரே. உமது எழுத்திலும் நல்ல முதிற்சி தெரிகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...