வணக்கம் அபிலாஷ்
நான் சசி, சேலம்.
நாங்கள் நண்பர்கள் எழுவர் சொற்சுனை எனும் அமைப்பில் ஒன்றுகூடி இலக்கிய உரையாடலை நிகழ்த்துவோம். பெரும்பாலும் சிறுகதைகள் குறித்து உரையாடுவோம். ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு கதைகளை தேர்வு செய்து நாள் முழுக்க பேசி விவாதிப்போம். இம்முறை நான் தேர்வு செய்தது நீங்கள் எழுதி உயிர்மையில் வெளியான தேவி எனும் சிறுகதை. கதையின் களம், தன்மை, நகர்தல் , சொல்முறை என எல்லா கோணத்திலும் இக்கதை என்னை வெகுவாக ஈர்த்திருக்கிறது. அடிப்படையில் நான் பஷீரின் வாசகன். அவரது எழுத்தின்வழி, அவர் குறித்த பிறரின் எழுத்தின்வழி நான் அறிந்த பஷீரை அவரது பலம், பலவீனம் உட்பட சகல பரிமாணங்களோடும் ஒரு சிறுகதைக்குள் மீளுருவாக்கியிருப்பது சாதாரண விஷயமல்ல. உண்மை மனிதர்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட கதைகளில் தேவி தனித்துவமானது. பஷீரை அவரது ஆன்மாவை எழுத்தின்வழி நெருங்கி உணர்ந்தாலொழிய இக்கதை சாத்தியமே இல்லை.
எங்கள் விவாதத்தில் ஏறக்குறைய எல்லோரும் இக்கதையின் குறிப்பிட்ட பகுதியை நெருங்குகையில் கொஞ்சம் தடுமாறித்தான் போனோம். ஆம்...தான் எழுத்தில் தான் அறிமுகப்படுத்திய பஷீரை, தன்னைப்போன்றே ஆதர்சமாக்கிக்கொண்ட தன் மாணவி தேவியோடு காணப்போகிறார் ஆசிரியர். தனக்குள் தானே நிகழ்த்திய உரையாடலுக்கு பின் குழப்பங்கள் தெளிந்து, இந்தச் சந்திப்பை முன்வைத்து தன் காதலை சொல்லிவிடலாம் என தயாராகிறார். பஷீரின் விசித்திர நடவடிக்கையில் (இதுவும் ஆசிரியருக்கு தெரிந்ததுதான்) தவிர்க்கமுடியாமல் தேவியை அவரிடத்தே அதுவும் இரவில் விட்டுவிட்டு போகவேண்டியதாகிறது. விடிந்ததும் பயமும் ஏமாற்றமும் நிறைந்த பதட்டத்துடன் பஷீரை சந்தித்து தேவி குறித்து விசாரிக்கையில் அப்படி யாரும் இங்கு வரவில்லை எனும் அவரது பதில் வாசகனிடத்தும் பல்வேறு கேள்விகளை எழ செய்கிறது. உண்மையில் தேவி என்னவானாள்??? அல்லது அப்படியொரு சந்திப்பே நிகழவில்லையா???
எங்களில் ஒரு நண்பர் அப்படியொரு சந்திப்பு நிகழவில்லை. தேவியை பஷீரிடத்து விட்டதும் தான் விலகியதும் எல்லாம் இல்யூஷன் என்றார். சரிதான்...பஷீருடனான அச்சந்திப்பை நேரடியாக அர்த்தம்கொள்ளாது அந்த ஆசிரியரின் கற்பனையாக மட்டும் எடுத்துக்கொண்டால் வேறொரு விரிந்த அர்த்தம் புலனாகிறது. பஷீர் பிரத்யேக ஒளியைப்போன்றே சகலவற்றிலும் ஊடுருவுபவர். அக்னியை போன்று எல்லாவற்றையும் தனக்குள் இழுத்து அவற்றின் பரு உருவை இல்லாமலாக்குபவர் எனும் புரிதலுக்கும் சாத்தியமுண்டு. ஆனால் கதை சொல்முறையிலும் நடையிலும் வெளிப்படும் யதார்த்த தன்மை இவ்வகை புரிதல் கோளாறெனும் வாதத்திற்கும் நகர்த்துகிறது.
உண்மையில் கதையின் இறுதிப்பகுதி தெளிவானால் நிச்சயம் இதன் முழுமையை உணர்ந்த பேரனுபவம் கிட்டுமென்று நம்புகிறேன். ஓர் அடர்வனத்தினூடே பிரயாணிக்கையில் திடீரென்று கவிந்த இருளில் தடுமாறுவது போன்றிருக்கிறது.
மீள் வாசிப்புகளில் வழி தென்படலாம். ஆனாலும் எழுதியவன் துணைவரவேண்டிய தருணமிது. கதையின் சூட்சுமத்தை நோக்கி அழைத்துச்சென்றால் முழுமைகொள்வேன்.
அன்புள்ள சசி
தாமதமாக பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும். உங்களுடைய எதிர்வினை / பாராட்டு என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. மீண்டும் சிறுகதை எழுதத் தூண்டுதல் ஏற்பட்டது. நீங்கள் சொல்வது உண்மை தான் - அக்கதையில் மொழியின் பாய்ச்சல், உணர்ச்சிபூர்வமான ஒன்றுதல் நன்றாக அமைந்து வந்துள்ளது. வைக்கம் முகம்மது பஷீரின் ரசிகனாக எனது ஒரு tribute ஆகவும் அக்கதையை அமைத்துக் கொண்டேன். இதற்கு முன்பு எனக்கு நகுலனைப் பற்றி இப்படி ஒரு கதை எழுத தூண்டுதல் ஏற்பட்டது. ஆனால் செய்யவில்லை. அதற்கான சரியான ஒரு வடிவம் வசப்படவில்லை என நினைக்கிறேன். இக்கதைக்கு அதன் வடிவம் அதிர்ஷ்டவசமாக எனக்கு சரியாகவே அமைந்தது.
பஷீரின் மேதைமை ஒரு பக்கம் இருக்க, என்னைக் கவர்ந்தது அவரது பித்து. அந்த பித்துடன் மிக இயல்பாக அசாதாரணமாக அவர் வாழ்ந்தது. அதைக் குறித்த குறிப்புகள் அவரது “மதிலுகள்” நாவலிலே வருகிறது. தனக்கு மனப்பிரச்சனை இருந்ததைப் பற்றி வேறு இடங்களில் எந்த மிகையும் இன்றி வெளிப்படையாகப் பேச அவர் தயங்கியிருந்ததில்லை. இதைப் பற்றி அலுவலகத்தில் யோசித்திருந்த ஒருநாள் பஷீர் தன் வீட்டு முற்றத்தில் மரத்தடியில் சாய்வு நாற்காலியில் சட்டையின்றி அமர்ந்திருக்கும் கறுப்பு வெள்ளைப் படத்தை என்னுடைய லேப்டாப்பில் வால்பேப்பராக வைத்திருந்தேன். அதைக் கண்ட என் பக்கத்து இருக்கை நண்பர் “உங்களுக்கு நான் பஷீரைப் பற்றி ஒரு வித்தியாசமான கதையை சொல்லட்டுமா?” என ஆரம்பித்தார். அவரது நண்பரான கேரளாவை சேர்ந்த ஒரு கல்லூரி ஆசிரியர் பஷீரின் பரம ரசிகர். அவர் பஷீரை ஒருநாள் தன் தோழியுடன் பார்க்க சென்ற போது நடந்ததாக சொன்ன ஒரு கதைதான் இந்த சிறுகதையின் கரு.
நான் அக்கதை நிகழும் காலத்தை, அப்போது பஷீர் இருந்த நிலைமை கற்பனை செய்து அமைத்துக்கொண்டேன். கூடுதலாக பஷீர் குறித்து ஆய்வு செய்தேன். கதையை அந்த பேராசிரியரின் பார்வையில் இருந்து சொல்ல வேண்டும் என முடிவு செய்தேன். கதை எதைப் பற்றியது எனும் கேள்வி வந்தது: புதிதாக சந்திக்க நேர்கிற ஒரு பெண்ணிடம் பஷீர் அதிர்ச்சிகரமாக என்ன சொல்கிறார் என்பது கதையாக இருக்கக் கூடாது என நினைத்தேன். இது பித்து பற்றின கதையாக இருக்க வேண்டும். ஆனால் பஷீரின் பித்து அல்ல. அவரைப் பார்க்க செல்லும் அந்த நண்பரின் பித்து. அவரது பித்தின் வழி பஷீரின் பித்தை நோக்க வேண்டும். கூடவே சுதந்திரத்துக்குப் பின்பான, காந்திக்குப் பின்பான இந்தியாவில் பொதுமக்களின் பித்தையும் லேசாய் குறிப்புணர்த்த வேண்டும் என நினைத்தேன். அதையும் விவரணைகளில் கொண்டு வந்தேன். அது தான் “தேவி”.
உங்கள் கேள்விக்கு பதில் சொல்லி விட்டேன் என நினைக்கிறேன்: ஆம், அப்பெண் அவர்கள் இருவரின் மனப்பிரமையின் ஒரு வடிவம். பஷீரின் வழி அந்த மனிதர் காணும் பிரமை தான் அவள்.
கருத்துகள்