"அகழ்" இணையதளத்தில் வந்த பேட்டியில் தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் பெங்களூரில் உள்ளதைப் போல கலைப்பாடங்களுக்கு போதிய கவனமோ முக்கியத்துவமோ இருப்பதில்லை எனக் கூறியிருந்தார். இது ஒரு முக்கியமான பிரச்சினை - தமிழ்நாட்டு அரசுகள் பொதுவாகவே மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகக் காட்டிக் கொள்ளும். இலக்கிய விழாக்கள், விருதுகள் போன்ற விசயங்கள் நிஜமாகவே ஆர்வமும் செலுத்தும். சிலநேரங்களில் இவற்றைத் தம் அரசுக்கான பிரச்சாரமாகவும் மாற்றிக் கொள்ளுமென்றாலும் இவை முக்கியமான செயல்பாடுகளே. ஆனால் இவ்வளவு புத்துயிருப்புடன் உயர்கல்வியில் கலைப்பாடங்களும், மொழிப்பாடங்களும் இல்லை; தொழில்நுட்ப, மருத்துவக் கல்விக்கு ஈடாக கலை மற்றும் மானுடவியல் படிப்புகளுக்கு சமூகமோ நிர்வாகமோ முக்கியத்துவம் அளிப்பதில்லை. குறிப்பாக இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது சமூகவியல், தத்துவம் போன்ற படிப்புகள்தாம். அவற்றை மொத்தமாக ஒழித்துவிட்டார்கள். மொழியும் இலக்கியமும் ஒண்டிக்கொண்டு இருக்கின்றன.
பெருமாள் முருகன் சொல்வதை இரு கோணங்களில் பார்க்கிறேன்:1) முதலில் நடைமுறைப் பிரச்சினை - பெங்களூர் மாதிரியான நகரங்களில் இசை, நாடகம், இலக்கியம் ஆகியவற்றை ஊடகவியல், உளவியலுடன் கலந்து கொடுத்தால் நிறைய பேர்கள் இணைய வருகிறார்கள் (டபுள் மேஜர், டிரிப்பிள் மேஜர்). இலக்கியத்தை படைப்பாக்க பட்டப்படிப்பாகவும் சொல்லித் தருகிறார்கள் (MFA, BA in Creative Writing போல). இதற்கும் தேவை உள்ளது. தமிழ்நாடு இப்போக்கை இன்னும் கையில் எடுக்கவில்லை எனக் கருதுகிறேன். மாணவர் சேர்க்கை இல்லாததால் பல கல்லூரிகளில் மொழித்துறையை மூடியே விடுகிறார்கள்.
2) அடுத்து அரசியல் - கலை மற்றும் மானுடவியல் துறைகளுக்கான இடம் சுதந்திர சிந்தனை, படைப்பாக்கம், விவாதம், புதிய போக்குகள், ஜனநாயக விழுமியங்கள் ஆகியனவற்றை உள்ளடக்கிய ஒரு தளத்தில் அமைந்துள்ளது. இவற்றின் வேரை நாம் ஐரோப்பிய புத்தொளிக் காலத்தில், மதசார்பற்ற சிந்தனையில் காண முடியும். இதைப் பழைய (நேருவிய) பொருளாதாரம் ஊக்குவித்தது. ஆனால் 90களுக்குப் பிறகு இங்கு வந்த திறந்தநிலை, உலகயமய தாராளவாத பொருளாதாரம் இரு பத்தாண்டுகளில் வலதுசாரி பாசிச மனநிலையை ஊக்கப்படுத்துகிறது; இன்று பொருளாதார சக்திகளின் முகமாக வாதுசாரி சிந்தனையாளர்களே இருக்கிறார்கள். உலகம் முழுக்க இப்போக்கே காணப்படுகிறது. அவர்கள் கலையையும் மானுடவியலையும் எதிர்ப்பரசியலாகக் காண்கின்றன. அதாவது சிந்தனையளவில் இத்துறைகள் இன்று பாரம்பரிய அறிவை நோக்கியோ இடதுசாரி அரசியலை நோக்கியோ இரண்டின் கலவையாகவோ நிலைகொள்கின்றன. இதை சமகால அரசியல் விரும்புவதில்லை. ஆகையால் இத்தகைய தொழில்களுக்கான இடத்தை, முதலீட்டை வெகுவாகக் குறைத்து விட்டார்கள். கல்விப் புலத்தில், ஊடகங்களில், ஆலோசனைக் குழுக்களில் 'சிந்தனையாளர்கள்', 'படைப்பாளர்களுக்கான' இடத்தை ஒழித்தே விட்டார்கள். அந்த இடத்தில் ஒன்று அரசின் பிரச்சாரகர்களோ தகவலைத் தொகுத்துச் சொல்பவர்களோ இருக்கிறார்கள். இப்படி ஒழிக்கிறவர்கள் நேரடி வலதுசாரி அரசுகள் மட்டுமல்ல - முற்போக்காகக் காட்டிக் கொள்கிறவர்களும் இப்படியே இருக்கிறார்கள்; மாற்றுச் சிந்தனையாளர்களைக் கண்டாலே கதவை மூடிவிடுகிறார்கள். இதை நான் பலரிடமும் இருந்தும் கேள்விப்பட்டிருக்கிறேன். தாம் நினைப்பதை கேள்வியின்றி ஏற்பவர்களும் வழிமொழிபவர்களுமே இன்று எந்த குழுவிலும் அணியிலும் இருக்க முடிகிறது.
இதனால், கடந்த சில பத்தாண்டுகளில் புதிய சிந்தனைகளே அருகி வருகின்றன. இது தற்செயல் அல்ல. மக்கள் சிந்திக்கக் கூடாது, மந்தையாக இருக்க வேண்டும் என்றே இன்றைய அரசுகளும் முதலீட்டாளர்களும் விரும்புகிறார்கள்.
அதேநேரம் இவர்களே சதாசர்வ நேரமும் படைப்பாக்கம், புத்தாக்கம் என்றே பேசுவார்கள் - இவ்விசயங்களை விற்கத்தக்க பண்டங்களின் கண்டுபிடிப்பில் (அறிவியல், மின்னணு தொழில்நுட்பம், ஏவுகணைகள்) மட்டும் செலுத்த விரும்புகிறார்கள். உண்மையான படைப்பூக்கமான எந்த கண்டுபிடிப்பும் புதிய சிந்தனை இன்றி, சுதந்திரமான உரையாடல் இன்றி தோன்றாது என்று யாரும் புரிந்து கொள்வதில்லை.
அதனாலே நான் கலை, இலக்கிய, மானுடவியல் துறைகளில் உலகம் முழுக்க ஒரு தேக்க நிலை தோன்றுகிறது என நினைக்கிறேன். இதற்கும் இன்றுள்ள உலகு தழுவிய பாசிச அரசியலுக்கும் ஒரு தொடர்பு உண்டு.
கூடுதலாக செய்யறிவும் வந்துவிட்டது - அதைப் பயன்படுத்துகிறவர்கள் சுயமாகச் சிந்திக்கும், அலசி ஆராயும் திறனையே இழக்கிறார்கள். இன்றுதான் அதனால் கலை, மானுடவியல், இலக்கிய படிப்புகள் நமக்கு அதிகமாகத் தேவையுள்ளன. நமக்கு மட்டும்தான், அவர்களுக்கு அல்ல.
Comments