இந்த சுபாஷ் சந்திரா எப்படி 22,000 கோடியை யெஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் இருந்து கடனாகப் பெற்று அது தள்ளுபடி செய்யப்பட்டு அதை வைத்து ஒரு லாபம் ஈட்டியிருக்கிறார் என நேற்று தேடிப் படித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. கொயிங்கா குடும்பம் தானிய வியாபாரிகள். நீண்ட காலமாக அப்படித்தான் இருந்தார்கள். சுபாஷ் சந்திரா வந்த பின்னர்தான் உற்பத்தி, ஊடகம், டிவி எனப் பெரும் வளர்ச்சி அடைகிறார்கள். அதிலும் அவர் நிதியைப் பெற்றதிலும் கடனை வாங்கி தன் நிறுவனங்களுக்குள் சுற்ற விட்டதிலும் பல ஊழல்கள் பண்ணியுள்ளார். அவர் மட்டுமல்ல மேலும் சில பெரும் கார்ப்பரேட்டுகளின் தலைமையில் உள்ள குடும்பங்கள் இவ்வாறு பண்ணியிருக்கிறார்கள் என்றாலும் சந்திரா விசயத்தில் ஒரு தனித்துவம் இவர் பத்து பதினைந்து கம்பெனிகளை எஸல் எனும் பெயரில் ஆரம்பித்து அவற்றுக்குக் கடன் கொடுக்க தானே உத்தரவாதமளிப்பதாக ஒப்பமிட்டுக் கொடுத்துள்ளார். ஆனால் இவ்வளவு ஆயிரம் கோடிகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் அளவுக்கு இவரிடம் சொத்தோ பணமோ இல்லை. இதை விசாரிக்காமல் அல்லது பொருட்படுத்தாமல் கடனை அள்ளிக் கொடுத்ததுதான் மோசடியின் ஆரம்பம். ஏனென்றால் வங்கியின் நிர்வாகிகளுக்கு இதில் ஏதோ ஒரு லாபம் இருந்திருக்கிறது. இவர் பாஜகவுக்கு பயங்கர கூஜாவாக இருந்ததால் வங்கிகளுக்கும் நம்பிக்கை பிறந்தது. இப்படி ஒரு வஞ்சகர் கூட்டம் தோன்றித் திருடியிருக்கிறார்கள். இப்போது அவர்களே எட்டாயிரம் கோடிக் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டாம், ரத்து பண்ணலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். எல்லாம் மக்கள் பணம்.
சந்திரா என்ன செய்கிறார் என்றால் ஒரு கம்பெனி இன்னொரு கம்பெனிக்கு கடன் கொடுத்ததாகவும், அக்கம்பெனி இன்னொரு கம்பெனியில் முதலீடு பண்ணுவதாகவும் ஆவணங்களில் கணக்குக் காட்டுகிறார். இந்தப் பரிவர்த்தனையின் சங்கிலியில் பணம் எங்கோ நட்டமாகி மறைந்து விடுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கடன் கொடுத்த, வாங்கிய, செலவழித்த நிறுவனங்கள் எல்லாமே சந்திராவுடையதே. அதாவது இவற்றின் அதிகப் பங்குகள் கொயிங்கா குடும்பத்தினரிடமே உள்ளன.
இதையே நீங்கள் செய்தால் எப்படி இருக்கும் என யோசிங்கள்: உங்கள் நண்பரின் கம்பெனி பத்து கோடி கடன் வாங்க நீங்கள் உத்தரவாதம் அளிக்கிறீர்கள். இந்த நண்பர் அப்பணத்தை இன்னொரு நிறுவனத்திடம் கொடுத்து முதலீடு பண்ணிட அது நட்டமாகிறது. இப்போது நீங்கள் என்னிடம் பணமில்லைங்க என வங்கியிடம் கையை விரித்து விடுகிறீர்கள். ஆனால் உண்மையில் இந்த மூன்று நிறுவனங்களுமே உங்களுடையதுதான். இதை ஒரு குழந்தையே கண்டுபிடித்துவிடும். உங்களைத் தூக்கி உள்ளே வைப்பார்கள். ஆனால் நீங்கள் வங்கி நிர்வாகம், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் எல்லாரிடமும் ஒரு மறைமுக ஒப்பந்தம் போட்டு பல ஆயிரம் கோடிகளை வாங்கி விகிதம் பிரித்து எல்லாருக்கும் கொடுத்துவிட்டு மிச்சத்தை முழுங்கிவிட்டால் உங்களை உள்ளே வைக்க மாட்டார்கள். ராஜ்ய சபா எம்.பி ஆகிவிடுவார்கள். ஊரெல்லாம் போய் "நான் கடன் வாங்கவில்லை, தெரியாமல் உத்தரவாதம் மட்டுமே கொடுத்தேன்" என்று கூலாகச் சொல்லிக் கொண்டிருக்கலாம். பத்திரிகைகள் இதை அப்படியே "எஸல் நிறுவனங்களுக்காக உத்தரவாதம் அளித்து சந்திரா மாட்டிக் கொண்டார்" என்று கூச்சமே இல்லாமல் எழுதுவார்கள்.
கருத்துகள்