அங்கங்கே புரட்டிப் படிக்க ஏற்ற புத்தகம். காப்காவின் நாவல்கள், சிறுகதைகளைவிட வாசிக்க எளியவை அவரது நாட்குறிப்புகள். படித்துக் கொண்டு வந்தபோது சில விசயங்கள் ஆச்சரியப்படுத்தின:
1) தொனி - இதில் வழக்கமான காப்காத்தனமான இருண்மை, அச்சம், நிலைகுலைவில் இருந்து ஒளியை நோக்கிச் செல்கிறவரின் சுழலில் சிக்கிக் கொண்ட குழப்பம், அவநம்பிக்கை இல்லை. உருவகத்தன்மை குறைவு. விளையாட்டுத்தனம், பகடி, காமம் பீறிடும் இடங்கள், ஒழுங்கீனம், மீறல் சார்ந்த அசூயை, பிரிட்டீஷ் படைப்பாளிகளிடம் நாம் காண்கிற அடங்கின தொனியிலான கேலி, கிண்டல், மிகை மீதான பகடி உண்டு. இதனாலே இது நிஜமாகவே காப்காதானா எனஆரம்பத்தில் தோன்றும். ஆனால் போகப் போக இந்த எண்ணம் மாறும்.
2) அந்நியமாதல் - காப்கா தன் நாவல்களில் அலுவலகம், நீதிமன்றம், குடும்பம், அதிகாரத்துவ அமைப்புகள் ஆகிய நிறுவனங்களிடம் நவீன மனிதர் அந்நியமாவதை, அதன் நகைச்சுவையை, அவலத்தைப் பேசினார். இக்குறிப்புகளில் பெரும்பாலும் தனிநபர்களிடத்து அவர் அந்நியமாக உணரும் பல சந்தர்ப்பங்கள் வருகின்றன. குடும்பச் சிக்கல்கள், மனைவியுடன் பாலுறவு, நண்பர்களின் நடத்தை, உணவகத்தில் காண நேரும் பருத்த உடல் கொண்ட பெண், அழகால் சிறந்த தன் தோழியை விட சாமான்ய தோற்றம் கொண்டிருக்கிற பெண்ணின் கவர்ச்சி, பூங்கா நடைபாதையில் வினோதமாக விசிலடிக்கும் முதிய மனிதர் என விதவிதமான அனுபவங்களில் அவர் ஈடுபடுவதோ உணர்வுவயப்படுவதோ கருத்துருவாக்குவதோ இல்லை. அவை அர்த்தமற்றவை, உண்மையில் இருந்து நம்மை அந்நியப்படுத்துபவை என நம்புகிறார் என நினைக்கிறேன். இவ்வாறு தாம் அந்நியப்பட்டிருக்கிறோம் என நவீன மனிதருக்குத் தெரியாததே அவர்களை வேடிக்கையானவர்களாக்குகிறது என அவர் நினைக்கிறார். இப்படி அந்நியமாதலின் புறவயமான சித்திரங்கள் இந்த குறிப்புகளில் வருகின்றன.
3) மொழி - மிக லாவகமான மொழிநடை தெரிகிறது. அதாவது இக்குறிப்புகளை அவர் ஒரு வாசகராக ரசித்தபடி எழுதியிருக்கிறார். நாட்குறிப்பை இரவு தூங்கும் முன்பு அலட்சியமாக எழுதுகிறவராக அல்லாமல் ஒரு எழுத்தாளராக தன்னைக் கருதி எழுதியிருக்கிறார் என்பது வாக்கிய அமைப்பிலும் அணிகளின் பயன்பாட்டிலும் தெரிகிறது. இதிலுள்ள சிலாக்கியமான போக்கை அவரது நாவல்களிலும் பார்க்க முடியாது.
4) அந்தரங்கத்தன்மை - குடும்பமாக ஒரு பெண்ணுடன் இருப்பதற்கு நாம் கொடுக்கிற தண்டனை பாலுறவு கொள்வதுதான் என ஒரு வாக்கியத்தை எழுதுகிறார். அதைப் படித்து அதிர்ந்து போனேன். அவர் பாலுறவைத் தன்னளவில் எதிர்க்கவோ கீழாக நினைக்கவோ இல்லையென்றாலும் குடும்ப உறவாக அதில் வரும் அதிகாரத்துவம், நிபந்தனைகளைக் குறித்துக் கவலைப்படுகிறார். குடும்பம் அலுவலகத்தின் நீட்சியாகும்போது இரவென்பது செயற்திறன் மதிப்பீட்டுக்கான வேளையாகிறது. பாலுறவு அப்போது ஒரு தண்டனையாகிறது. மீண்டும் சொல்கிறேன் - மேற்சொன்ன நிபந்தனைக்கு உட்பட்டுத்தான் அவ்வாறாகிறது. மேலும், பாலுறவு சார்ந்த உறவுகளில் நாம் நமது அந்தரங்கத்தைத்தான் விலையாகக் கொடுக்கிறோம் என்பது நகைமுரணானது. இதுவும் காப்காவைத் தொந்தரவு பண்ணுகிறது என நினைக்கிறேன்.
5) அம்மணம், நோய்மை, சுயதணிக்கை - தன்னுடல் குறித்து மக்களுக்கு உள்ள பிரக்ஞை அவர்களைத் சுயதணிக்கையில் ஈடுபட வைக்கிறது. அவர்கள் தம் உடலை வருத்தியும் சேஷ்டைகளில் ஈடுபடுத்தியும் தாம் எவ்வாறு இருக்கிறோம் எனக் கண்காணிக்கிறார்கள்; அதைப் பிறருக்கும் காட்டி தம்மை மதிப்பிட வைக்கிறார்கள். இவ்வாறு உடலை ஒரு பொம்மையைப் போல அசைத்து உள்ளும் (சுயம்) புறமுமாக (சமூகம்) மதிப்பீடு செய்கிறார்கள். மனிதர்களின் துன்பம் அதிகமாகும்போதெல்லாம் இத்தணிக்கை அதிகப்படுகிறது. உதாரணமாக, தன் அப்பா கடனில் சிக்கி பொருளாதார ரீதியாகத் துன்பப்படும்போது அவர் நோய்வாய்ப்பட்டு தன் வலியைப் பல விதங்களில் வெளிப்படுத்துவதை காப்கா சித்தரிக்கிறார். அக்குறிப்பின் முடிவில் "இன்று அம்மா சென்று (ஒரு நபரின் பெயரைச் சொல்லி) அவரிடம் கெஞ்சப் போகிறார்" என எழுதுகிறார். அப்பாவின் நோய்மையும் அம்மாவின் இந்த கௌரவ நிலையிறக்கமும் தொடர்புள்ளவை. இதுவே அவரை மனிதர்களின் அம்மணம் குறித்து அதிகம் சிந்திக்க வைக்கிறது - அம்மண உடல் அதிகாரத்தின் முன்பான மனிதரின் சரணடைதலாக உள்ளது. ஏனென்றால் உடல் ஒரு குறியீடு. நான் இதுதான், நான் வெறும் சதைத்திரட்சி, நான் ஒரு வடிவம், இதற்கு மேல் ஒன்றுமில்லை, பார்த்துக் கொள் எனும் கூற்றே அம்மண உடல். அதாவது ஆன்மாவில் உள்ளார்ந்து நம்பும் காப்காவுக்கு உடலின் அம்மணமும் அதன் நிலைமாற்றமும் அதைக் காட்டி மனிதர்கள் அடையும் துன்பமும் மகிழ்ச்சியும் ஒரு கைதியின் தப்பித்தல் முயற்சிகளே.
பாலியல் கவர்ச்சியையும் அவரால் தனிமனிதரின் உடல் குறித்த தணிக்கை நடவடிக்கையாக அன்றி வேறுவிதமாகப் பார்க்க முடிவதில்லை. என்னதான் பெண்களை அவர் ரசித்தாலும் முடிவில் இவர்கள் பார்க்கப்படும் பொருட்கள், தான் பார்க்கிற பிரக்ஞை, இவர்களுடன் தன் ஆன்மாவால் பேச இயலாது, தான் உடலழகின் ஒரு மதிப்பீட்டுக் கருவியே, இரு தரப்புமே அந்நியப்பட்டிருக்கிறோம் எனும் உணர்வு அவருக்கு வந்து விடுகிறது. அழகுக்கும் அம்மணத்துக்கும் சுதந்திரத்துக்கும் அதிகாரத்துக்குமான சிக்கலான உறவுமுறையை அவர் சிந்தித்திருக்கிறார். நேரடியாக அல்ல, தன் விவரணைகளின் வழியே.
6) நிரந்தரக் குழந்தைமை - காப்காவுக்குள் ஒரு நிரந்தரக் குழந்தை என்றும் இருந்திருக்கிறார். சமூகமானது அலுவலகத்தின் குடும்பத்தின் நீட்சியாக இருந்து பல்வேறு மனிதரைத் தொடர்ந்து கண்காணித்து மதிப்பிட்டு தன் விதிமுறைகளின் பரிசீலனைக்கு உட்படுத்துகிறது. அதாவது காப்கா வீட்டை விட்டு வேலைக்காக வெளிக்கிளம்பும் போதும் பின்னரும் குடும்பத்தினுள்ளேதான் இருக்கிறார். குடும்பத்தில் அவர் எப்போதும் ஒரு மகன் அல்லது சகோதரனாக இருக்கிறார். குடும்பம் தொடர்ச்சியான சுய-தணிக்கையிலும் பரஸ்பர தணிக்கையிலும் ஈடுபட்டுத் தன்னைத் தக்கவைக்கிறது. வெளியிலும் அப்படித்தான் நிகழ்கிறது. அவர் மனதளவில் இதை ஏற்றுக் கொண்டு இதைத் தனக்குள் பகடி செய்யப் பழகிக் கொள்கிறார். இதை ஒரு குழந்தைக்கும் பதின்வயதுக்கும் இடைப்பட்ட மனநிலை என்றும் சொல்லலாம். அதாவது அவர் வளர்ந்தவரான பின்னரும் ஒரு குழந்தையின் மனநிலைக்குள் இருக்கவே விரும்புகிறார். வீட்டின் வாசலைத் தாண்டாமல் கதவைப் பற்றிக் கொண்டு தெருவைப் பார்த்துக்கொண்டே ஒருவர் நிற்பதைப் போல அவர் வாழ்க்கையில் இருக்கிறார். காப்காவின் குழந்தைமை அப்பழுக்கற்ற ரொமாண்டிக்கான குழந்தைமை அல்ல. அது ஒரு அரசியல் தேர்வு.
தனிமை - இவ்வளவு பேர்களை அவர் தினம் தினம் பார்க்கிறார். உரையாடியிருக்கிறார். நண்பர்கள், அலுவலக வாழ்க்கை என பிஸியாக இருந்திருக்கிறார். ஆனாலும் அவர் யாருடனும் இல்லாமல் தனித்திருக்கிற ஒரு உணர்வே இக்குறிப்புகளில் வெளிப்படுகிறது. இதைப் படிக்கையில் நான் பெரும் தொந்தரவை உணர்ந்தேன். எப்படி ஒருவரால் தான் நினைக்கிற எதையும் பேசுகிற, வெளிப்படுத்துகிற ஒரு வெளியின்றி இருக்க முடியும்? இகேள்வி என் சிந்தனையைக் காப்கா சித்தரிக்கிற பிற மனிதர்களிடம் இட்டுச் சென்றது. அவர்களும் அப்படித்தானே இருக்கிறார்கள். எல்லாருமே பேசிக்கொண்டே இருக்கிறார்கள், ஆனால் யாராலும் இதயத்தில் இருந்து வெளிப்படுத்த முடிவதில்லை. அவர்கள் தமக்குள்ளே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வெளிப்பேச்சு ஒரு நிகழ்த்துதல் மட்டுமே. அவர்களுக்கு தம்மால் ஒருபோதும் தம்மை வெளிப்படுத்த முடியாது எனத் தெரியும். காப்காவுக்கும் இது தெரியும். இவ்வளவு சலசலப்புகளுக்கும், இரைச்சலுக்கும் மத்தியில் எல்லாரும் தனியாக இருப்பது இப்படித்தான்.
நவீன வாழ்க்கை ஒரு பெரிய சிறையென்றும், நாம் தினம் தினம் நம் முயற்சிகளால் இதைக் கட்டமைத்து, கண்காணித்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம் என நினைக்கவே பயமாக இருக்கிறது. காப்காவின் அடிப்படையான பிரச்சினை வாழ்க்கையின் உண்மையற்ற தன்மைதான்.
வாழ்க்கையில் அசலாக உணர்வதெப்படி (authenticity) என ஹைடெக்கர் பேசியது இச்சந்தர்ப்பதில் பேசத்தக்கது எனத் தோன்றுகிறது. காப்காவின் உலகில், அல்லது நவீன உலகில், 'அங்கே இருத்தல்' எனும் da sein இல்லை. ஒவ்வொரு கணமும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறோம், சாகப் போகிறோம், மரணத்தின் நிழலில் இருக்கிறோம் எனும் உணர்வு, பதற்றம், நம்மைப் போலியாக்கி நம்மை அடுத்தவர்களுக்கு ஏற்ப நிகழ்த்தி நிரந்தரமாக முயல வைக்கிறது. காப்கா சித்தரிக்கும் அபத்தம் இதில் இருந்து வருவதும்தான்.
கருத்துகள்